பயங்கரவாத அமைப்புகளின் பட்டிய லில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஐரோப்பிய ஒன்றியம் நீடித்து வருவதை இரத்துச் செய்வது தொடர்பான முக்கியமான தீர்ப்பு ஒன்றை லக்சம்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் கடந்த 16ஆம் திகதி வெளியிட்டுள்ளது.
இந்த தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு என்று புலம்பெயர் தமிழர்களால் சொல்லப்படுகின்ற அதேவேளை, இலங்கை அரசாங்கத்தினால் கவலைக்குரியதொரு விடயமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, இந்த தீர்ப்பு குறித்து குழப்பமான வியாக்கியானங்களும் செய்யப்படுகின்றன.
அதன் காரணமாக, இந்த தீர்ப்பு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதொரு வரலாற்றுத் திருப்பம் போன்றும் காண்பிக்கப்படுகிறது.
முதலில் இந்த தீர்ப்பின் அடிப்படை அம்சங்கள் என்னவென்று பார்க்க வேண்டும்.
விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத அமைப்பா?- இல்லையா? என்பதை ஐரோப்பிய நீதிமன்றம் இந்த விசாரணையின் போது, கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.
2006ஆம் ஆண்டு மே மாதம், விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிட்டு, அதன் சொத்துக்களை முடக்கும் முடிவை ஐரோப்பிய ஒன்றியம் எடுத்ததையும் இந்த தீர்ப்பு விமர்சிக்கவில்லை.
2011ஆம் ஆண்டுக்குப் பின்னரும், விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் தொடர்வது சரியா? என்பதை அடிப்படையாக கொண்டே, இந்த வழக்குத் தொடுக்கப்பட்டிருந்ததுடன், அதனைச் சார்ந்தே தீர்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது.
அதாவது 2009ஆம் ஆண்டு இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்ட பின்னர், விடுதலைப் புலிகள் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதற்கான எந்த ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை, புலிகள் மீதான தடையை நியாயப்படுத்துவதற்குப் போதிய சான்றுகள் இல்லை என்பதன் அடிப்படையிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்து சட்டத்தரணிகளான வி. கோப் (V.Koppe), ஏ.எம்.வான் எய்க் (A.M.van Eik), ரி.புருமா (T.Buruma) ஆகியோர் தான் இந்த வழக்கைத் தொடுத்திருந்தனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில், பிரித்தானியாவும், நெதர்லாந்துமே, இந்த தடைக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆதாரங்களைச் சமர்ப்பித்து வாதாடியிருந்தன.
விடுதலைப் புலிகள் இயக்கம் ஜனநாயக ரீதியாக தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராட செயற்பட விரும்புவதாகவும், எனவே தற்போதும், பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்திருப்பது முறையற்றது என்றும் புலிகள் சார்பு சட்டத்தரணிகள் வாதிட்டிருந்தனர்.
ஆரம்பத்திலேயே, விடுதலைப் புலிகள் இயக்கம் மீது தடை விதிக்கப்பட்டது தவறானது என்று அவர்கள் வாதத்தை முன்வைத்திருக்கவில்லை. அவ்வாறான ஒரு வாதத்தின் அடிப்படையில், புலிகள் இயக்கம் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியிருந்தால், அது நிச்சயம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்திருக்கும் என்பதுடன், ஐரோப்பிய ஒன்றியத்தையும் மிகப் பெரிய வரலாற்றுப் பழிக்குள்ளும் தள்ளியிருக்கும்.
ஏனென்றால், 2006ஆம் ஆண்டு மே மாதம் ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் மீது விதித்த தடை தான், நான்காவது கட்ட ஈழப்போருக்கு முக்கிய காரணமானது.
விடுதலைப் புலிகள் சர்வதேச சமூகத்தின் மீது நம்பிக்கையிழந்து போனதற்கும், இலங்கை அரசாங்கம் இராணுவத் தீர்வின் மீது நம்பிக்கை வைப்பதற்கும், இந்த முடிவு மிக முக்கிய காரணமாயிற்று.
அதாவது, வன்னிப் போரில் ஏற்பட்ட பேரழிவுகளுக்கு, ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவும், ஒரு மறைமுகக் காரணம் என்பதில் சந்தேகமில்லை.
இந்தநிலையில், 2006ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக தடை செய்ய ஐரோப்பிய ஒன்றியம் எடுத்த முடிவு தவறானது என்ற தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்தால், போர் அழிவுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியமும் காரணம் என்று குற்றவாளியாக நிற்க வேண்டிய நிலை வந்திருக்கும்.
ஆனால், இந்த தீர்ப்பு, 2011ஆம் ஆண்டுக்குப் பின்னைய நிலையை அடிப்படையாகக் கொண்டே அளிக்கப்பட்டுள்ளது.
அதைவிட, புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பா–? -இல்லையா? என்று கூட விசாரிக்கவில்லை. இந்தியாவின் தடையை அடிப்படையாகக் கொண்டு நீடிக்கப்படும் புலிகள் மீதான தடையை தொடர்வதற்கு, இணைய ஊடகத் தகவல்களை மட்டும் சான்றாக அளித்திருப்பதை ஐரோப்பிய நீதிமன்றம் ஏற்கவில்லை.
அதைவிட, தடையை நீடிப்பது தொடர்பாக, புலிகள் தரப்பின் நியாயத்தைக் கேட்கவில்லை என்பதையும், நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தநிலையில் தான், புலிகள் மீது கட்டுப்பாடுகளை விதிக்கும் நடைமுறையை இரத்துச் செய்திருக்கிறது ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம்.
எனினும் இந்த தடைநீக்கம் உடனடியாக நடைமுறைக்கு வரப் போவதில்லை.
இரண்டு மூன்று மாதங்கள் கழித்தே, இந்த தடைநீக்கம் நடைமுறைக்கு வரும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அதேவேளை, புலிகள் மீதான தடையை நீடிக்க விரும்பினால், அதற்கான காரணங்களையும், ஆதாரங்களையும், முன்வைக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே, இந்த தீர்ப்பின் முழுப்பயனை யும் விடுதலைப் புலிகள் இயக்கம் அனுபவிக்க வேண்டுமாயின், அதற்கு மூன்று மாதங்கள் பொறுத்திருக்க வேண்டும்.
அதுவரை அவர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டேயிருக்கும்.
இந்தத் தீர்ப்பின் படி, இரண்டு மாதங்களுக்குள் புலிகள் மீதான தடையை நீடிப்பதற்கான ஆதாரங்களை ஐரோப்பிய ஒன்றி யம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கலாம்.
அத்தகைய ஆதாரங்களை சமர்ப்பித்து, தடையை நீடிக்கவே, ஐரோப்பிய ஒன்றியம் முனையக் கூடும்.
ஏனென்றால், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மட்டுமன்றி, விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்துள்ள, அமெரிக்கா, இந்தியா, பிரித்தானியா, உள்ளிட்ட எந்தவொரு நாடுமே, அந்தத் தடையை நீக்க முயற்சிக்கவில்லை.
புலிகள் இயக்கம், 2009ஆம் ஆண்டு அழிக்கப்பட்டு விட்ட நிலையிலும் கூட, அவர்கள் மீதான தடையை நீக்க எந்தவொரு நாடும் முயற்சிக்கவில்லை என்பதை வைத்துப் பார்த்தால், இந்தத் தடை அரசியல் ரீதியாகத் தொடரப்படுவதையே அந்த நாடுகள் விரும்புகின்றன என்பது புலப்படும்.
எனவே ஐரோப்பிய ஒன்றியமும், புலிகள் மீதான தடையைத் தொடர்வதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பிப்பதற்கே முயற்சிக்கும்.இந்த தீர்ப்புக் குறித்து இலங்கை அரசாங்கம், வெளியிட்ட அறிக்கையில், இதுகுறித்து தாம் கரிசனை கொள்வதாக மட்டும் கூறியுள்ளது.
அது நீதிமன்றத் தீர்ப்பு என்பதால், ஒரு அரசாங்கமாக அதனை விமர்சிக்க முடியாது. எனவே தான், கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தாமல், வெறும் கரிசனையோடு நின்று கொண்டிருக்கிறது.
ஆனால், இது அரசாங்கத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள- கவலைக்குள்ளாக்கியுள்ள தீர்ப்பு என்பதில் சந்தேகமில்லை.
அரசாங்கத்தின் அறிக்கையில், புலிகளை தொடர்ந்தும் தடை செய்வதற்குத் தேவையான தகவல்கள் ஆதாரங்களை ஐரோப்பிய ஒன்றியத்துக்குத் தாம் அளிக்கத் தயார் என்றும் கூறப்பட்டுள்ளது.
இலங்கை அரசின் ஆதாரங்களுடனும், தமது ஆதாரங்களுடனும், ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் மீதான தடையை நீடிப்பதற்கு நீதிமன்றத்தை நாடலாம்.
ஆனால், ஒன்று அவை வலுவானவையாகவும், நியாயமானவையாகவும் இருக்க வேண்டும்.
சப்பைக் காரணங்களை முன்வைத்து புலிகளைத் தடைசெய்ய முயன்றால், மீண்டும் ஐரோப்பிய ஒன்றியம் நீதிமன்றத்தின் கையால் குட்டுப்பட வேண்டியிருக்கும்.
எனவே, போதிய ஆதாரங்கள் இல்லாமல் இதற்கான முயற்சிகளில், ஐரோப்பிய ஒன்றியம் இறங்குமா என்பது சந்தேகம் தான்.
அதேவேளை, ஐரோப்பிய நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, 2001ஆம் ஆண்டில் இருந்தே விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடைசெய்துள்ள பிரித்தானியாவின் முடிவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போவதில்லை.
ஏனென்றால், தேசிய பாதுகாப்பு விடயங்களில் தனித்தனியாக முடிவெடுக்கும் உரிமை, ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடுகளுக்கு இருக்கிறது.
அத்தகைய சிறப்பு அதிகாரத்தைக் கொண்டு, பிரித்தானியா புலிகள் மீதான தடையைத் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.
அதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தினால், நியாயமான காரணங்களை முன்வைத்து, மூன்று மாதங்களுக்குப் பின்னரும், புலிகள் மீதான தடையைத் தொடரச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டால், ஏனைய சில நாடுகளும் கூட, தனித்தனியாக தடை செய்யும் முடிவை எடுக்கலாம்.
குறிப்பாக நெதர்லாந்து, பின்லாந்து போன்ற நாடுகள் அத்தகைய முடிவுகளை எடுக்கக் கூடும்.
அதேவேளை, இந்த தீர்ப்பின் அடிப்படையில், ஐரோப்பிய ஒன்றியத்தினால் முழுமையாகவோ, அல்லது ஒரு சில நாடுகளைத் தவிர்த்தோ, விடுதலைப் புலிகள் மீதான தடை விலக்கப்படுமானால், அடுத்து என்ன என்ற கேள்வியும் எழுகிறது.
விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட அமைப்பல்ல என்ற நிலை ஏற்படுத்தப்பட்டாலும் கூட, அந்த அமைப்பு என்ன செய்யப் போகிறது, அதனை முன்கொண்டு செல்லப் போவது யார் என்பன போன்ற பல கேள்விகள் எழும்பும்.
2009 மே 19ஆம் திகதி விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் நந்திக்கடலில் வீழ்த்தப்பட்ட பின்னர், புலிகள் இயக்கத்துக்குத் தலைமை தாங்க முற்பட்டவர்கள் அனைவருமே அந்த முயற்சியில் தோல்வியையே சந்தித்துள்ளனர்.
அதற்கு ஒரு காரணம், இலங்கை அரசாங்கத்தின் புலனாய்வுக் கட்டமைப்பும் அதன் நடவடிக்கைகளும், இன்னொரு காரணம், புலிகள் மீது நீடிக்கும் தடை.
இவற்றுக்கெல்லாம் அப்பால், உள்ள மிக முக்கியமான காரணம், சிறந்த தலைமைத்துவ ஆற்றலின்மை.
பிரபாகரனுக்கு ஈடான ஒரு தலைமை விடுதலைப் புலிகளுக்கு இனி ஒருபோதும் வாய்க்கப் போவதில்லை.
அவ்வாறானதொருவரை உருவாக்க முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், குழப்பங்களும், மோதல்களும் தான் ஏற்படும்.
புலிகள் இயக்கம் இப்போது தடை செய்யப்பட்டுள்ளதால், வெளிப்படையாக அதற்குத் தலைமை தாங்க எவரும் முன்வராத நிலை உள்ளது.
தடை நீக்கப்பட்டு விட்டால், தாமே தலைவர் என்று பலரும் கிளம்பக் கூடும்.
அது புலிகள் இயக்கம், மூன்று தசாப்த ஆயுதப் போராட்டத்தின் மூலம் பெற்றிருந்த பெயருக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
ஏற்கனவே 2009ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பின்னர், நடந்த நிகழ்வுகளே இதற்குச் சான்று.
அதேவேளை, இந்த தடை நீக்கம், குறித்து இலங்கை அரசாங்கம் ஒரு வகையில் அதிருப்தி கொண்டிருந்தாலும், இன்னொரு வகையில் அதற்குச் சாதகமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அதாவது வடக்கு, கிழக்கில் தமிழர்களை அடக்கி ஆள்வதற்கும், வடக்கை தொடர்ந்து இராணுவ மயப்படுத்தி வைத்திருப்பதற்கும் அரசாங்கம் அவ்வப்போது புலிப் பூச்சாண்டியைக் காட்டி வந்தது.
புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் முற்றாகவே நீக்கி விட்டால், அதனைப் பயன்படுத்தி, புலிகள் இயக்கம் மீள உருவெடுக்கிறது என்று கூறிக் கூறியே தமிழர்களின் உரிமைகள் நசுக்கப்படும் வாய்ப்பும் உள்ளது.
எனவே, ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் தீர்ப்பு எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
-சுபத்ரா
கூடா நட்பு கேடில் முடியும்’.