ஜெனீவாவின் இலங்கைக்கான தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தை புனர்நிர்மாணம் செய்வதற்கான ஒப்பந்தத்தை புலிகள் அமைப்புக்கு வழங்கியது யார்? இதுவா அரசின் தேசப்பற்று என நேற்று சபையில் கேள்வி எழுப்பிய ஐ.தே.கட்சி அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ,
வடக்கு, கிழக்கில் இன்னமும் தமிழ் மக்கள் அகதி முகாம்களில் வாழ்கின்றனர். அம்மக்களுக்கு காணி உரிமைகளை வழங்க வேண்டும். அதேபோன்று மலையக மக்களின் காணி உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்றும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற காணி (பராதீனப்படு த்தல் மீதான மட்டுப்பாடுகள்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே சஜித் பிரேமதாஸ எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்..
அரசாங்கம் தாம் தான் தேசப்பற்று மிக்கவர்கள் என்றும் நாட்டை காட்டிக்கொடுக்க மாட்டோமென்றும்மார் தட்டுவதோடு ஐ.தே.கட்சிக்கு தேசப்பற்று இல்லையென்றும் விமர்சிக்கின்றது. ஆனால், ஜெனீவாவிலுள்ள இலங்கை தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தை புனர்நிர்மாணம் செய்வதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தை வழங்கியது யார்?
இதற்காக வழங்கப்படும் பணம் புலிகளையே சென்றடைகிறது. யார் இந்த ஒப்பந்தத்தை கொடுத்தார்கள்.
யார் இதற்கு பொறுப்புக் கூற வேண்டும். இவ்விடயம் தொடர்பான கணக்காய்வு அறிக்கையும் மோசடியானதாகவே காணப்படுகின்றனது.
தேசப்பற்றை பேசும் அரசு ஜெனீவாவில் ஒப்பந்தத்தை புலிகளுக்கு வழங்கியுள்ளது.
வெளிநாட்டவருக்கு காணிகள் வழங்குவதை மட்டுப்படுத்த சட்டம் கொண்டுவருவதாக கூறும் அரசாங்கம் நாட்டு மக்களுக்கு காரணிகளை வழங்கவில்லை. 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீட்டில்லாமல் வாழ்கின்றனர்.
ஆனால், இங்குள்ள தீவுகளும் காணிகளும் பெருமளவில் வெளிநாடுகளுக்கு விற்றுத் தீர்க்கப்பட்டுவிட்டன.
வட கிழக்கு யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த தமிழ்மக்களுக்கு இன்னமும் காணிகள் வழங்கப்பட இல்லை. பெரும்பாலான மக்கள் இன்னமும் அகதி முகாம்களில் வாழ்கின்றனர்.
யுத்தம் முடிந்து 5 வருடங்கள் கழிந்த பின்னரும் இன்றும் அகதி முகாம்கள் மூடப்படாத நிலைமையே காணப்படுகின்றது.
அரசாங்கம் இன்று வரை தமிழ் மக்களின் இதயங்களை வெற்றிக் கொள்வதற்கான எந்தவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.
மலையகம்
மலையக தோட்டத் தொழிலாளர்களின் காணி உரிமைகளை பாதுகாக்கவும் எதுவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அம்மக்களுக்கு 50,000 வீடுகள் நிர்மாணித்து கொடுக்கும் திட்டமும் ஸ்தம்பிதமடைந்துள்ளது. அம் மக்களுக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
தடை நீக்கம்
ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் மீதான தடையை நீக்கியுள்ளது. மறுபுறம் மீன் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது. இவ்வாறான நிலைமை ஏற்படக் காரணம் என்ன? அரசாங்கம் அனைத்து வெளிநாடுகளையும் பகைத்துக் கொண்டுள்ளது.
நிலையான தெளிவான வெளிநாட்டுக் கொள்கை இல்லை. எனவே, சர்வதேசம் இன்று எமது நாட்டை சுற்றிவளைத்துள்ளது என்றும் சஜித் பிரேமதாச எம்.பி. தெரிவித்தார்.
கொலைகாரர்களை விடுவிப்பதற்கு சமன்:தடை நீக்கம் குறித்து கோத்தபாய
21-10-2014
புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் எடுத்த தீர்மா னமானது கொலையாளர்களை விடுவிப்பதற்கு சமமானதாகும் என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.
சமாதானத்தை விரும்பும் மக்கள் ஒருபோதும் இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். புலிகள் மீதான தடை யை ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றம் கடந்தவாரம் நீக்கியமை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பாதுகாப்பு செயலாளர் அது தொடர்பில் மேலும் கூறியுள்ளதாவது
இலங்கையிலும் வெளிநாட்டிலும் புலி ஆதரவு புலம்பெயர் மக்களை ஆதரிக்கின்றவர்கள் உள்ளனர். புலிகளை மீள் உருவாக்க நிதி சேகரிப்பவர்களும் உள்ளனர்.
எனினும் இந்த செயற்பாடுகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் சட்டம் ஒழுங்கில் தாக்கத்தை ஏற்படுத்தும்போது தடை நீக்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கின்றவர்கள் தமது மடைமையை உணர்வார்கள்.
புலி ஆதரவு புலம்பெயர் மக்களை ஆதரிக்கின்றவர்கள் அவர்களின் செயற்பாடுகளின் விளைவுகளை புரிந்துகொள்வார்கள். இவர்கள் சந்தர்ப்பவாதிகள். எவ்வாறெனினும் இலங்கையில் மீண்டும் புலிகள் செயற்பட இடமளிக்கப்படமாட்டாது.
இலங்கையில் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பாகவே இருக்கும். தற்போது பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் மேற்கு சக்திகள் தாம் பாதிப்படையும்போதுதான் அதன் அபாயத்தை உணர்ந்துகொள்ளும்.
மூன்றாவது அணியாக களமிறங்கத் தயார்: ஜாதிக ஹெல உறுமயவின் 11 ஆவது தேசிய மாநாட்டில் இணைத் தலைவர் அத்துரலிய ரத்ன தேரர் சூளுரை
20-102014
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் எமது கொள்கைப் பிரகடனத்தினை அரசாங்கம் ஏற்றுக் கொண்டு தீர்மானமொன்றினை எடுக்காவிடின் சகல எதிரணிகளையும் இணை த்துக் கொண்டு மூன்றாம் அணியாக களமிறங்க தயார்.
ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியினை ஆட்சியில் அமர்த்துவதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய மாநாட்டில் அக் கட்சியின் இணைத் தலை வர் அத்துரலிய ரத்னதேரர் சூளுரைத்துள் ளார்.
அதேநேரம் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னராக நாட்டில் மாற்றம் ஒன்றினை ஏற்படுத்த வேண்டும் என்பதோடு அதிகாரப் பகிர்வு அவசியம் எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.
ஜாதிக ஹெல உறுமயவின் 11 ஆவது தேசிய மாநாடு மஹரகம இளைஞர் பாராளுமன்றத்தில் நேற்று இடம் பெற்றது. அக் கட்சியின் இணை தலைவர் அத்துரலிய ரத்ன தேரரின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இம் மாநாட்டில் கட்சியின் செயலாளர் அமைச்சர் சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட பிரதான உறுப்பினர்களும் மதத் தலைவர்களும் கலந்து கொண்டிருந்தனர். இம் மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்;
நாட்டின் பகிரப்பட வேண்டும் என சகலரும் எதிர்ப்பார்க்கின்ற அதிகாரப் பகிர்வினை ஒரு தனி நபரின் கீழ் வைத்து ஆட்சி நடத்த ஜனாதிபதி முயற்சிக்கின்றார்.
அதனை அடிப்படையாகக் கொண்ட தற்போது ஜனாதிபதித் தேர்தல் ஒன்றிணை நடத்த ஜனாதிபதி திட்டமிட்டுவுள்ளார். இது தொடர்பில் நாம் எதையும் அறிந்திருக்கவில்லை. எம்முடனோ ஏனைய அரசாங்கத்திடனோ ஜனாதிபதி கலந்துரையாடவுமில்லை.
அதையும் தாண்டி இன்று நாட்டில் மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டும் என சகலரும் எதிர்ப்பார்க்கின்றோம். குறிப்பாக ஜனாதிபதிக்கு இருக்கும் நிறைவேற்று அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும்.
பாராளுமன்றத்திற்கும் பிரதமருக்குமான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். சுயாதீன சேவைகள் செயற்பட வேண்டும். சுயாதீன பொலிஸ் சேவை, நீதி சேவை, தேர்தல்கள் ஆணைக்குழு என்பன சரியான முறையில் நாட்டில் செயற்பட வேண்டும்.
அமைச்சர்களின் எண்ணிக்கை 29 தொடக்கம் 35 ஆக குறைக்கப்பட வேண்டும். அதேபோல் ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கும் பொறுப்பு கூற வேண்டும்.
மாகாண சபைக்கான பொலிஸ் அதிகாரம் அரசியல் அமைப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும். மாகாண சபைகளின் தன்னிச்சையான செயற்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும்.
அதேபோல் பௌத்த கலாசாரத்தினையும் மதத்தினையும் பாதுகாக்கும் பௌத்த சாசன அமைச்சினை உறுதிப்படுத்த வேண்டும். பௌத்த சாசன அமைச்சினை ஜனாதிபதியின் கீழ் கொண்டு வந்து அபிவிருத்திக்கான சகல நடவடிக்கைகளையும் எடுப்பதோடு நாட்டில் உள்ள சகல மதங்களின் உரிமைகளையும் சுதந்திரங்களையும் உறுதிப்படுத்த வேண்டும்.
சிங்கள மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும். 1971 ஆம் ஆண்டில் அதற்கு முன்னர் வடக்கில் சராசரியான அளவில் சிங்கள மக்கள் வாழ்ந்தனர். எனினும் விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் பின்னர் வடக்கில் இருந்து சிங்களவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர்.
அவர்களை மீண்டும் வடக்கில் குடியமர்த்த வேண்டும். அதேபோல் நாட்டில் அபிவிருத்திக்கான சகல முயற்சிகளையும் அரசுமேற்கொள்வதுடன் மக்களின் அபிவிருத்தியிலும் வாழ்வாதரத்திலும் அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
நாட்டில் பரவி வருகின்ற சூது , போதைப்பொருள் ஆகியவற்றினை கட்டுப்படுத்தி விவசாயிகள், தொழிலாளர்களுக்கான உரிமைகளையும் சலுகைகளையும் ஏற்படுத்தி கொடுக்கவேண்டும்.
இவை அனைத்தையும் தான் மக்கள் இன்று எதிர்ப்பார்க்கின்றனர். ஜனநாயகம் ஒன்றினை மக்கள் விரும்புகின்றனர்.ஆனால் இந்த அரசாங்கம் அவ் அவைத்திற்குமான நிவாரணத்தினை பாராளுமன்றிலும் ஏனைய இடங்களிலும் தெரிவிக்கின்றதே தவிர செயற்பாட்டில் அவை இல்லை.
இன்று ஜனாதிபதிக்கு மதிப்பும் ஆதரவும் இருக்கின்றது என்றால் அதற்கான காரணம் தீவிரவாதத்தினை அழித்தமையாகும். அந்த ஒன்று மட்டுமே தற்போது ஜனாதிபதிக்கு உள்ளது.
மக்களை பாதுகாக்கும், நாட்டை பாதுகாக்கும் தலைவர் தன்மையில் இருந்து ஜனாதிபதி வீழ்ச்சிகண்டுள்ளார். எனவே இவை அனைத்தையும் மாற்றியமைக்க ஜனாதிபதி எம்முடன் இணைந்து செயற்பட்டு எமது கொள்கைகளை ஏற்றுக் கொண்டால் அதனை நாம் ஆதரித்து அரசாங்கத்தை பாதுகாப்போம்.
ஆனால் அரசாங்கமும் ஜனாதிபதியும் அதற்குஇணங்காவிடின் நாமும் தனி கொள்கையினை தீர்மானிக்க வேண்டியநிலை ஏற்படும். எனவே ஜனாதிபதியே இப்போது தீர்மானம் எடுக்க வேண்டும்.
ஆகையினால் அரசாங்கம் நடாத்ததிட்டமிட்டிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் எமது கொள்கை பிரகடனத்தினை ஜனாதிபதி ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நாம் விரும்பும் மாற்றத்தினை ஜனாதிபதியும் விரும்புகின்றனர். இல்லையேல் நாம் புதிய மாற்றம் ஒன்றினை ஏற்படுத்துவோம்.
எனினும் ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான எந்தவொரு சந்தர்ப்பத்தினையும் நாம் வழங்க மாட்டோம். அதற்காக அரசாங்கத்தை சுயவிருப்பத்திற்கு செயற்பட அனுமதிக்கவும் மாட்டோம்.
எமது கொள்கை பிரகடனம் அரசாங்கத்தினால் நிராகரிக்கப்படும்மாயின் ஜனாதிபதி தேர்தலின் அரசாங்கத்தை கவிழ்த்துவதற்கான மூன்றாவது பொது எதிரணியினை களமிறக்க தயார்.
அரசாங்கத்தையும் ஜனாதிபதி முறைமையையும் எதிர்க்கும் சகல கட்சிகளையும் ஒன்றிணைத்து கொண்டு பொது எதிரணியை அமைத்து மூன்றாவது அணியாக களமிறங்க தயாராகவும் உள்ளோம் என்றார்.