மகனை வாளால் வெட்ட வந்தவர்களிடமிருந்து மகனை பாதுகாக்கச் சென்ற தந்தை வாள்வெட்டுக்கு இலக்காகிய சம்பவம் யாழ்ப்பாணம், கந்தோரடையில் புதன்கிழமை (22) இரவு இடம்பெற்றதாக சுன்னாகம் பொலிஸார் வியாழக்கிழமை (23) தெரிவித்தனர்.
இதில் படுகாயமடைந்த தேவராசா முரளிதரன் (வயது 39) என்பவர், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடுவில் பகுதியில் புதன்கிழமை (23) பகல் இரு குழுக்களுக்கிடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த மோதலின் தொடர்ச்சியாக, நேற்று இரவு, கந்தோரடையில் வசிக்கும் இளைஞன் ஒருவரை வாளால் வெட்டுவதற்கு இரண்டு மோட்டார் சைக்கிள்களில் சென்ற நால்வர், அவ்விளைஞனை வாளால் வெட்ட முற்பட்டுள்ளனர்.
இதன்போது, குறுக்கிட்ட குறித்த இளைஞனின் தந்தை மீது வாள் வெட்டு இடம்பெற்றதில் அவரது கழுத்து மற்றும் கைகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இதனையடுத்து, வாள் வெட்டை மேற்கொண்டவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆவா எனப்படும் ரவுடிக் குழுவின் தலைவன் பிணையில் விடுவிக்கப்பட்டான்
23-10-2014
ஆவா எனப்படும் ரவுடிக் குழுவின் தலைவனான வினோதன் என்பவன் யாழ். மேல் நீதிமன்றினால் இன்று வியாழக்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளான்.
கண்ணகி அம்மன் கோவிலடி இணுவில் மேற்கு பகுதியைச் சேர்ந்த குமரேசரத்தினம் வினோதன் கடந்த தை மாதம் 4 ஆம் திகதி கோப்பாய் பொலிஸார் ஆவா உட்பட மேலும் 11 பேரை கைது செய்து ஆவா குறுப் அங்கத்தவர்கள் என்றும், யாழில் இடம்பெற்ற பல்வேறு கொலை கொள்ளை வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்பு பட்டவர்கள் என கூறி 12 பேரும் யாழ். நீதிவான் நீதிமன்றில் 3 வழக்குளில் பதிவு செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்க்பபட்டிருந்தனர்.
இதில் ஒருவர் ஓரிரு நாட்களின் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன், 10 பேரும் ஒரு மாத்திற்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.
அதன் பின்னர் ஆவா மட்டும் பிணையில் விடுதலை செய்வதற்கு பொலிஸார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவ்வாறு எதிர்ப்பு தெரிவித்தமைக்கான காரணம் ஆவாவினால் குற்றம் தீங்கு விளைவிக்கும் ஆயுதங்கள் கட்டளைச்சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என்றும், இச் சட்டத்தின் படி நீதவான் நீதிமன்றில் பிணையில் விடுதலை செய்ய முடியாது மேல் நீதிமன்றமே விடுதலை செய்ய முடியுமென கூறப்பட்டது.
இந்நிலையில், கடந்த பங்குனி மாதம் 31 ஆம் திகதி ஆவா விடுதலை பிணை விண்ணப்பம் யாழ். மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
பொலிஸார் தமது அறிக்கையல், ஆவாவிடம் வீட்டின் பின்பக்க வாழைத்தோட்டத்தில் இரண்டு கைக்குண்டுகளும் வாள்களும் கண்டு பிடிக்கப்பட்டதென குறிப்பிட்டிருந்தனர்.
ஆவாவின் குற்றச் செயல்கள் மேலொட்டமான கருத்து என்றும் பொலிஸாரிடமும் எந்தவித சான்றுகளும் காணப்படாத பட்சத்தில் 50 ஆயிரம் காசு பிணையிலும், 1 லட்சம் 3 ஆள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளான்.
அத்துடன், மற்றைய 11 நபர்களுடனும் எக்காரணம் கொண்டு எந்த உறவோ, தொடர்பு வைத்திருக்க கூடாதென்றும், ஒவ்வொரு நாளும் யாழ்.நீதிவான் நீதிமன்றில் கையொப்பமிடவேண்டும் நீதிமன்றின் அனுமதியின்றி வெளிநாட்டிற்கு செல்ல முடியாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்ட பகுதிக்குள் செல்லக்கூடாதென்றும், கோப்பாய் பிரதேச செயலருக்கும், அவதானிக்கும் முகமாக கிராம சேவகர்களுக்கு கட்டளை அனுப்பி வைக்கப்படுகின்றதென்றும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.