மூன்று தசாப்த யுத்தத்தினுள்ளும் நான்கு உயிர்கள் கடவுள் கருணையால் எஞ்சியபோதும் இன்று ஒரு உறவு இல்லறத்தில் இணைய மகிழ்வாய் அனுப்பிவிட்டு ஏனைய மூன்று உயிர்களும் ஒருவரையொருவர் திருப்திப்படுத்தியவாறு நந்திக்கடற்பரப்பில் அடுத்த நேர உணவுக்காக கையேந்தியவாறு காத்திருக்கின்றார்கள்.
மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள். ஆனால் இவர்களில் வாழ்க்கை ஒரு காலத்தில் சுமுகமாக நகர்ந்தது. இன்று குடும்பத்தின் பலமாய் இருக்கும் தந்தையும் தனயனும் இன்று தடுமாறும் நிலை ஏற்படுமளவிற்கு தலைவிதியை தலைகீழாக மாற்றியதற்கு யாரைநோவது.
விதியா? சதியா? என்ற விவாதத்திற்கு அப்பால் தந்தைக்கும் தனயனுக்கும் நிகழ்ந்த விபரீதத்தை அராய்வதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. நீண்ட தூரம் பயணித்த அவர்கள் ஒரு மரநிழலில் சிறு ஓய்வெடுப்பதுபோல் ஒருமூச்சில் இவ்வாறு கூறினார்கள்…
உப்பு விக்கப்போனால் மழைபெய்யுது. மா விக்கப்போனால் காத்தடிக்குது என்று எப்பவோ கேட்ட பாடலை நினைச்சு மனசுல உள்ள காயத்தை மாத்த எத்தணிக்கிறேன். முடியவே இல்லை.
கனத்த இதயத்துடன் தன் மனக்கிடக்கைகளை எம்முன் கொட்டித்தீர்த்தார் சபாரத்தினம் உதயகுமார்…
காரணம் 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் நாள் தமிழர் வாழ்வில் கறைப்படிந்த நாள். காலை சூரியன் உதிக்க முன்னமே வலைஞர்மடம் பொக்கணையில பங்கர் வாசல்ல குந்தி இருக்கும்போது தாறுக்கும் மாறுக்கும் ஷெல் போறதை பார்த்துக் கொண்டே இருந்தன்.
எழும்பினால் தலைபோய்விடும். அந்தளவுபதிவாக போன ஷெல் எனக்கு பக்கத்தில் விழுந்து சத்தம் கேட்டு திரும்பிப்பார்க்கும் போது என்ர வலது கையை காணேல்ல.
ஐயோ என்றுக்கொண்டு எழும்ப அடுத்த பீஸ் இடுப்பு எலும்பில பட்டிட்டுது. ஐயோ அம்மா அம்மா…. என்று கத்தியப்படி மயங்கிட்டன். பிறகு கொஸ்பிட்டல்ல கண்ண முழிச்சு பார்த்தா என்ர மகன்ர முணகல் சத்தம் கேட்டது. அருகில் பார்த்தா பக்கத்துல கால் முழுக்க காயப்பட்டு படுத்திருக்கிறான். இப்படியே கொஸ்பிட்டலால முகாமுக்கு போனோம்.
என்ர மகனுக்கு காயம் படும்போது 23 வயது. அப்ப அவர் உலக உணவுத்திட்டம் (யுனிசெப்) இல வேலை செய்துக்கொண்டிருந்தவர். பிரச்சினையின்ர கடைசி கட்டத்தில கட்டாய ஆட்சேர்ப்புக்கு வீடுவீடா வர என்ர பிள்ளைய தண்ணி சாப்பாடு இல்லாம பங்கருக்க ஒளிச்சுவச்சிருந்தனான் பல நாள்.
சூரியனையே அவன் கிழமைக்கு ஒருக்காத்தான் பாக்கிறவன். ஆனால், வேலையில சம்பளம் எடுத்திட்டு வரும் போது பிடிச்சிட்டு போனவங்க பிறகு பிரச்சினை உக்கரமடைய ஓடி வந்திட்டான்.
ஆனால், முகாமில ஒருநாள் இயக்கத்தில இருந்தாக்களுக்கு பொது மன்னிப்பு வழங்க அழைக்கப்பட்டபோது என்ர பிள்ளையும் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு போனவன்.
பிறகு தடுப்புக்கு போய் மருந்துகளும் கட்ட ஏலாம போய் இப்ப 2 மாதத்திற்கு முன் வலது கால் முழங்காலுக்கு கீழ எடுத்தாச்சு. இன்னும் பொய்க்கால் போடேல்ல புண் ஆற வேண்டும். இப்படியே ஒரு மகன்ர வாழ்வு கேள்விக்குறியாக இருக்கு.
என்ர சொந்த இடம் திருகோணமலை மணியாவெளி. நான் திருமணம் செய்து வந்ததுதான் முல்லைத்தீவு வட்டுவாகல். என்ர மூத்த மகன் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறைக்கு ஒரு கலியாண வீட்டுக்கு போனபோது 1987ஆம் ஆண்டு என்ர அக்கா வீட்ட நிக்கேக்க ஒப்ப ரேஷன் லிபிரேஷன் பிரச்சினைக்கு ஷெல் விழுந்து செத்திட்டான்.
இப்ப என்ர மூன்றாவது மகளுக்கு (22வயது) எனக்கும் கையில்லை. மகனுக்கும் கால் இல்லை. வச்சிருந்து என்ன செய்யிறது பாதுகாப்பு கருதியே சின்ன வயசில கூலித்தொழிலாளி ஒருவருக்கு கட்டிக் கொடித்திட்டம்.
இவ்வளவு காயப்பட்டு கஷ்டப்பட்ட எங்களுக்கு இந்திய வீட்டுத்திட்டமும் கிடைக்கேல்ல. 6 மாதம் மீள் குடியேறியப்பின் நிவாரணம் தந்தார்கள். இப்ப அதுவும் இல்லை.
வீடுதிருத்த கொஞ்ச காசு தந்தார்கள். அதைப்பெற்று வீட்டைத்திருத்தி மகளுக்கு குடுத்திட்டம். அந்த வீட்டைத்தவிர அந்த பிள்ளையை கட்டிக்கொடுக்கும் போது அவள்ர காதில தோடு கூட இல்லை.
இப்ப நானும் மனுசியும் மகனும் நந்திக்கடல் பாலத்து ஓடையில ஒரு சின்ன தேநீர் கடை போட்டு இருக்கிறம். கடலுக்கு வாறவ வந்து டீ குடிச்சிட்டு போவினம்.
இந்த பெட்டிக்கடையை போடுறதிற்கு நான் கால்ல செருப்புக் கூட இல்லாம வவுனியா, மன்னார், முல்லைத்தீவு என இடம் இடமாக அலைஞ்சு திரிஞ்சம்.
ஒருவரும் ஒரு ரூபா கூட தரேல்ல. ஏன் எத்தனை அரசியல் வாதிகளிடம் ஒபிஸ் எல்லாம் ஏறி இறங்கினன் எல்லோரும் அன்பாக கூப்பிடுவார்கள் இருத்தி கதை கேட்பார்கள்.
ஆஸ்பத்திரி டொக்கியுமன்ஸ் எல்லாத்தையும் போட்டோக் கொப்பி எடுத்து தந்திட்டு போங்கோ நாங்கள் உதவி செய்யிறம் என்பார்கள். ஆனால், ஒரு ரூபா கூட ஒருவரும் தரேல்ல.
என்ர மகன்ர மெடிக்கல் மட்டும் 150இற்கும் மேற்பட்ட அளவில் போட்டோக் கொப்பி மட்டும் எடுத்துக்கொடுத்திருப்பன் எந்த பிரயோசனமும் இல்லை அவையலுக்கு குறுந்திரைப்படம் பார்த்த மாதிரி இருக்கும்.
எனக்கும் மனசில இருந்ததை இறக்கி வைத்தமாதிரி இருக்கும். அவ்வளவுதான் இன்றைக்கு கடைக்கு ஆட்கள் வராட்டால் எங்கட கடையில உலையும் வைக்கமாட்டம்.
மரநிழல்ல பசியை அடக்க தேத்தண்ணி குடிப்பதை அருகில ஆமி கேம் இருந்து பார்ப்பார்கள். எங்கட நிலையை கருத்தில் கொண்டு சில வேளைகளில் ஒரு சாப்பாட்டு பார்சல தருவினம் அதை வாங்கி மூன்று பேரும் பிரித்து சாப்பிட்டாலும் பசி ஆறாது ஆனால் ஆறிவிட்டதாக ஒருவருக்கொருவர் கூறிக்கொள்வோம்.
என்ன செய்வது எனக்கு கை மட்டும்தான் இல்லை. ஆனால், மனோதிடம் நிறைய இருக்கு. ஒற்றைக்கையால தண்ணி அள்ளுவன் விறகு வெட்டுவன். இப்படியே எல்லா வேலைகளையும் செய்ய என்னை நானே பழக்கிக் கொண்டுள்ளேன்.
இப்ப நான் எல்லோரிடமும் மனம் திறந்து கேட்பது எனக்கு இப்ப 52 வயசு மனைவிக்கும் அதே வயசுதான். எனக்கு அங்கம் இல்லையே தவிர நான் அங்கவீனர் அல்ல. நான் 30 வருஷமா கடலை நம்பியே வாழ்ந்தவன் போட் ஓடுவது முதல் சுழி ஓடுவது வரை எல்லாமே செய்யக்கூடிய வல்லமை இருக்கு.
யாராவது எனக்கு உதவி செய்ய விரும்பினால் 2nd Hand ஆக ஒரு போட்டும் வலையும் வாங்க கொஞ்சம் காசும் தாங்கோ. இரால் வீச்சு சூடுபிடித்தால் கடைக்கு சாமான் வாங்கிப் போட்டு கொத்து போடுவதற்கும் ஓராளை பிடிச்சா இரவு, பகலாக கடை நடத்தினால் போதும் உழைச்சிடுவன். இப்பவே கையில்லாதவன் காலில்லதவனுக்கு காசு தர பயப்படுறவர்கள் நாளைக்கு பாயிலபடுத்தால் யார் பார்க்கப்போகிறார்கள்.
என்ற காலம் தான் முடிஞ்சிது என்ர பிள்ளையும் அவையவம் இல்லாம இருக்கிறான் இப்ப எங்கட நிலைமையை பார்த்து முல்லைத்தீவு சிலாவத்தை Father ஒராள் காசுத்தந்துதான் தேத்தன்னீர் கடை ஆரம்பிச்சிருக்கிறேன்.
மகன்ர ஒப்பிறேசன் முடிஞ்சாப்பிறகு முல்லைத்தீவு கச்சேரியால மகனுக்கு கட்டிலும் மெத்தையும் குடுத்தார்கள் வாங்கினோம் வைக்கத்தான் இடமில்லை.
கடைக்கு ஆட்கள் வராட்டாலும் கடை வாசல்ல நிண்டா நந்திக் கடலை பாக்க வாறவை வெளிநாட்டுக்காறர் வருவினம் எங்கள பார்த்திட்டு சிலநேரம் ஐஞ்சப்பத்த தந்திட்டு போவார்கள்.
இப்படியாக எங்கட காலம் மெல்ல மெல்ல நகர்கிறது. நந்திக்கடலில் ஆதங்கத்தால் ஆர்ப்பரிக்கும் அலைகள் ஒருபோதும் ஓய்ததில்லை. அக்கடல் ஓரத்தில் வாழ்வாதரத்தின் ஏங்களின் உச்ச ஆதங்கத்துடன் தொடரும் இவர்களின் காத்திருப்பும் எதிர்ப்பார்ப்பும் இலக்கை அடையும் வரை ஓயாது தொடர்ந்து கொண்டேயிருக்கும்….
குமுறல் தொடரும்…
சிந்துஜா பிரசாத்