பெரிய சத்தம் கேட்டது. அங்க என்னா சத்தம் என்று பார்க்க முன்னர் நெறய புகை வர ஆரம்பித்தது. அப்ப நாங்க தேயில மலையில இருந்து பார்த்துகிட்டு இருந்தோம். சாமி அத எப்படி சொல்றதுனு தெரியவில்லை?
அப்ப பார்த்தலயன் வீடுகள், கோயில், பொதுமக்கள் ஆடு, மாடு எல்லாமே மண்ணு உள்ளுக்கு போயிகிட்டு இருந்தன. எங்களுக்கு என்ன செய்றது என்றே தெரியவில்லை. கத்தி அழுதோம். எங்களுக்கு முன்னுக்கு மலைகள் சரிந்து போயின. எங்களால எதுவுமே செய்ய முடியல என்று மீரியபெத்த அனர்த்தத்தை நேரில்பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
4 மணிக்கு பார்த்து சென்ற எனது குடும்பத்தை 8 மணிக்கு வந்து பார்த்த போது காணவில்லை. எல்லாம் என்னை விட்டு இறந்து விட்டார்கள். நான் மாத்திரம் ஏன் தப்பிக்கவேண்டும்? நானும் போயிருந்தா எல்லாமே ஒன்னா போயிருப்போமே என்றும் உறவுகளை பறிகொடுத்தவர்கள் கதறுகின்றனர்.
கொஸ்லந்தை மீரியபெத்தயில் நேற்று முன்தினம் காலை 6.50 மணியளவில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு அனர்த்தத்ம் குறித்தும் தமது திகில் அனுபவம் குறித்தும் உறவுகளை பறிகொடுத்தவர்கள் விபரிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.
தனது குடும்பத்தில் ஐவரை பறி கொடுத்த யோகராஜா தகவல் தருகையில்
எனது பெயர் யோகராஜா. நான் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த தம்மி என்ற பெண்ணை 30 வருடங்களுக்கு முன் மணம் முடித்தேன். எனக்கு பிரசாத், மனோஜ் என இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். மூத்த மகன் மனோஜ் மணம் முடித்தவன்.
அவனது மனைவி சுபாஷினி. அவர்களுக்கு ஆறு மாத குழந்தை இருந்தது. இளையவன் தனியார் தொலைக்காட்சி நிறுவனமொன்றில் பணியாற்றுபவன். எனது மனைவி தோட்டத்தில் மருத்துவ தாதியாக பணி செய்தவள்.
சம்பவதினமன்று காலையிலேயே நான் பெல்வத்த பகுதிக்கு செல்வதற்கு எனது வாகனத்தை எடுத்து சென்றேன். அப்போது அதிகாலை 4 மணி இருக்கும். அதற்கு முன்பதாக மனைவி தயாரித்து கொடுத்த தேநீரை குடித்து விட்டு சென்றேன்.
இதுதான் எனது குடும்பத்தை கடைசியாக நான் பார்க்கிறேன் என்று தெரியாது. பெல்வத்த பகுதிக்கு சென்ற போது தொலைபேசி மூலமாக எனது வீட்டுக்கருகில் மண்சரிவு ஏற்பட்டதாக அறிந்ததும் உடனே திரும்பி வந்து பார்த்த போது எனது வீடு இருந்ததற்கான அடையாளமே எனக்கு தெரியவில்லை.
4 மணிக்கு பார்த்து சென்ற எனது குடும்பத்தை 7 மணிக்கு வந்து பார்த்த போது காணவில்லை. எல்லாம் என்னை விட்டு இறந்து விட்டார்கள். நான் மாத்திரம் ஏன் தப்பிக்கவேண்டும்? நானும் போயிருந்தா எல்லாமே ஒன்னா போயிருப்போமே. கடவுள் ஒரு கதவை திறந்து மறு கதவை மூடுவானு சொல்வாங்க. ஆனா எனக்கு மாதிரி யாருக்கும் பண்ணியிருக்கக்கூடாது.
எல்லாரும் போய் சாமி கோயில் மட்டும் இருந்தா ஜனங்கள் சாமிய பேசுமுனுதான் 40 அடி உயர சிலையா இருந்த சாமியும் மண்ணோட உன்னோட வாரேனு போயிருச்சி போல.
வரலாற்று பிரசித்தி பெற்ற மகாமுனி ஆலயம் உட்பட அனைத்து பிரதேசமுமே மண்ணுக்குள் போயிருச்சி. சாமி மட்டும் மண்சரிவில் போகாமல் இருந்தா எல்லாரும் குறை சொல்லுவாங்கனுதான் அவரும் அவங்களோட சேர்ந்து போயிட்டாரு போல என கதறலுடன் கூறினார்.
அத்துடன் தண்ணீர் இல்லாத காலத்தில் பெல்வத்தைக்கு தண்ணீர் 20 கேன் கொண்டு போய் சும்மா கொடுப்பேன். எல்லாம் சொல்லுவாங்க உனக்கு புண்ணியம் கிடைக்குனு.
இது எனது புண்ணியத்திற்கு பரிசா ? எனது மனைவி மருத்துவ தாதி. யாருக்கு எப்ப வருத்தமுனாலும் எனது லொறியில கூட்டிக்கிட்டு போய் விடுவேன். எத்தன மணினாலும் நோயாளிய பார்த்துட்டுவானு சொல்லுவேன். ஊர் மக்களே எனது மனைவியை நல்லா இருப்பீங்கனு மெச்சுவாங்க. அது எதுவுமே கடவுளுக்கு தெரியாம போயிருச்சு போல என்றும் கூறினார்.
உறவுகளை கண்முன்னே மண்ணிற்குள் விட்டு வந்த புவனேஸ்வரி என்பவர் குறிப்பிடுகையில்
எட்டாம் நம்பர் லயம். அதுலதான் இருந்தோம். எனக்கு 4 பிள்ளைகள். எங்க அம்மா சின்னம்மா எல்லாரும் ஒன்றாகவே இருந்தோம். அம்மா கொழும்புக்கு போய்விட்டார்.
ஏனைய எல்லோரும் வீட்டில்தான் இருந்தோம். (செவ்வாய்க்கிழமை) எல்லாரும் போயிட்டு பாத்தாங்க ஆற்றுக்கு அருகில் பெரிய வெடிப்பு போயிருந்தது. கொஞ்சம் பயமாதான் இருந்தது. இப்படியாகும் என்று யாருக்கு சாமி தெரியும். மாலை எல்லாரும் தூங்கிட்டுத்தான் இருந்தோம்.
லேசா மண்ணு இடிய போகுது என்று பேசிக்கொண்டு வீட்டுக்கு வந்துட்டோம். காலையில எல்லாரும் பேசிக்கொண்டார்களன். தண்ணி ஆற்றில் கலங்கி வருது. மண் சரியுது என்று கூறினர். அந்த நேரம் அனைவரும் வேலைக்கு போய்க்கொண்டு இருந்தனர்.
அதில் அதிகமானோர் லயத்துக்கு அருகில் தான் இருந்தனர். . குழந்தைகள் அங்கே இருந்ததனர். அப்ப காலையில 6.50 , 7 மணி இருக்கும். பெரிய…. சத்தம் குண்டு போட்ட மாதிரி கேட்டது.
சத்தம் கேட்ட இடத்தை பார்த்தா சரியான புகையா இருந்தது. என்னவா இருக்கும் என்று யாரிடமும் கேட்பதற்கு முன் கல்லு மரம் மண் எல்லாம் அப்படியே சரிந்து வந்தது.
நான் சின்னம்மா பிள்ளைகள் எல்லாம் ஓடிட்டோம். என்னுடைய பிள்ளை வர முடியாம கூப்பிட்டான். எங்க சின்னம்மா கையை பிடித்து இழுத்தார். அப்படியே பெரிய மரம் ஒன்று அவன் மேல அடித்து அப்படியே மண்ணுக்குள்ள போய்விட்டான் சாமி.
எங்க அண்ணன் மோகன சுந்தரம் அண்ணி சரஸ்வதி எல்லாரும் வீட்டுக்குள்ள தான் இருந்தாங்க. இப்ப வீடு எங்க இருந்தது என்றே தெரியவில்லை. கடவுளே எங்க குடும்பத்துல எல்லாரும் போயிருந்த எந்த கவலையும் இல்லையே என்றார்.
காமதேவன் என்பவர் குறிப்பிடுகையில்
நான் கொஸ்லந்தை வித்தியாலயத்தில் சிற்றூழியராக கடமையாற்றுகின்றேன். இன்று காலை (புதன்கிழமை) வேலைக்கு போயிகிட்டு இருந்தேன். எங்க குடும்பத்துல நான் மனைவி மகள் 2 பேர் மகன் 1 பேரப்பிள்ளை 1 எல்லாரும் இருந்தோம்.
காலையில மண் சரிந்து வருவதாக எல்லாரும் அல்லோலகல்லோலப்பட்டு ஒடினார்கள். எங்க குடும்பத்துல யாரு எங்க இருக்காங்கனு தெரியல. இருக்காங்கலா இல்லாம போயிட்டாங்களானு தெரியல. எனக்கு இப்ப என்னா நடக்குதுனே தெரியவில்லை. எங்க வீடு இருந்த இடமே அடையாளம் இல்லாம போய்விட்டது.
கோபாலகிருஷ்ணன்
கோர தாண்டவம் நடைபெற்றதை நேரில் கண்ட கொஸ்லந்த தோட்ட கோபாலகிருஷ்ணன்
நாங்க எல்லாரும் தேயிலை மலைகளில் இருந்தோம். காலையிலேயே புகை பனி மூட்டமா இருந்திச்சி. அப்ப சாரல் மழை துளியும் விழுந்துக்கிட்டு இருந்துச்சி. பெரிய சத்தம் கேட்டுச்சி அங்க என்னா சத்தமுனு பார்க்க முன்னுக்கு நெறய புகை வர ஆரம்பித்தது.
அப்ப நாங்க தேயில மலையில இருந்து பார்த்துகிட்டு இருந்தோம். சாமி அத எப்படி சொல்றதுனு தெரியல? அப்ப பார்த்த லயத்து வீடுகள் கோயிலு பொதுமக்கள் ஆடு, மாடு எல்லாமே மண்ணு உள்ளுக்கு போயிகிட்டு இருக்கு. எங்களுக்கு என்னா செய்றதுனே தெரியல.
கத்தி அழுதோம். எங்களுக்கு முன்னுக்கு மலைகள் சரிந்து போனது. எங்களால எதுவுமே பண்ண முடியல. புகை வேற மூடிவிட்டது. அந்த சம்பவத்தை எப்படி புரிய வைப்பதுனு தெரியவில்லை என்றார்.
27 வயதான ராமராமி யோகராஜா என்பவர் தனது அனுபவத்தை பகிர்ந்துகொள்கையில்
காலை 8.10 மணிக்கு பொலிஸ் உள்ளிட்ட அனைவருக்கும் அறிவித்துவிட்டோம். எனி்னும் இராணுவத்தினர் 11.30 மணிக்கே வந்தனர். நேற்றைய தினம் ( நேற்று முன்தினம்) மீட்பு பணிகள் உரிய முறையில் இடம்பெறவில்லை என்றார்.
காயமடைந்த 22 வயதான விஜயகாந்த் என்பனவர் குறிப்பிடுகையில்
திடீரென சத்தம் கேட்டது. மண்சரிவு அபாயம் என்று கூறப்பட்டது. உடனே நான் அம்மாவை அழைத்து வெளியில் வந்தேன். பின்னர் பக்கத்து வீட்டு அக்காவை அழைத்துவர சென்றேன். அக்காவையும் மேலும் இருவரையும் அழைத்துவந்தபோது மண்வந்து எம்மை அடித்து சென்றது.
நான் மீண்டு வந்தேன். ஆனால் எனக்கு பின்னர் வந்த அக்காவும் மேலும் இருவரும் மண்ணில் புதையுண்டனர் என்றார்.