தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரசின் புதிய தலைவராக ஈவிகேஎஸ் இளங்கோவன் நியமனம்
முன்னதாக, தமிழக காங்கிரசின் தலைவராக இருந்த பி.எஸ். ஞானதேசிகன், நேற்று முன் தினம் தனது ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பினார்.
நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மாநிலத் தலைமையின் உணர்வுகளை அகில இந்தியத் தலைமை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறியிருந்தார். இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குப் புதிய தலைவரை நியமித்து, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உத்தரவிட்டுள்ளது.
இதற்கு முன்பாக, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 2000 – 2002ஆம் ஆண்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். முந்தைய தலைவர் ராஜினாமா செய்த இரண்டு நாட்களுக்குள் புதிய தலைவரை அகில இந்திய காங்கிரஸ் கட்சி நியமித்துள்ளது.
ஜி.கே.வாசன் விலகுவாரா?
நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகும் தமிழக காங்கிரஸ் மீது கட்சித் தலைமை பாராமுகமாக இருந்ததாகவும், தமிழக விவகாரங்களைப் புறக்கணித்ததாகவும் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறையின் முன்னாள் அமைச்சர் ஜி.கே. வாசன் கூறியுள்ளார்.
வாசனின் ஆதரவாளரான பி.எஸ். ஞானதேசிகன் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ததையடுத்து, புதிய தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து, இன்று காலையில் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் தன் ஆதரவாளர்களுடன் ஜி.கே. வாசன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நவம்பர் 3ஆம் தேதி அறிவிப்பேன் என்று தெரிவித்தார்.
ஞானதேசிகனைத் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் கோவை தங்கம் என்பவரும் ராஜினாமா செய்துள்ளார்.