அம்மா ஜெயிலுக்குப் போன அதிர்ச்சியில் 150 பேர் இறந்தாங்க. அதில் ஒண்ணும் ஆச்சரியம் இல்லை. அவங்க மக்களுக்கு நிறைய நல்லது செய்து கொடுத்தாங்க. எங்களுக்கு அவங்க, அவங்களுக்கு நாங்க. அவங்க மீண்டும் இங்கதான் போட்டியிடுவாங்க. இனிமேல் எல்லாம் நல்லதாகவே நடக்கும்!
சொத்து வழக்கில் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் அளித்ததைத் தொடர்ந்து அவர் வென்ற ஸ்ரீரங்கம் தொகுதி மக்களில் பலரும் தீபாவளியை முன்கூட்டியே கொண்டாடிவிட்டார்கள்.
குடும்பத்தில் பலரும் படித்து பல நல்ல பதவிகளிலும் வெளிநாடுகளிலும் இருக்க, திராவிடக் கலாசாரங்களுக்குள் சிக்கிவிடாமல் தனி மனித துதிகளிலும் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளாதவர்கள் ஸ்ரீரங்கத்துவாசிகள்.
ஆனால், இந்தத் தொகுதியில் போட்டியிடும் போது நான் ஸ்ரீரங்கத்துப் பொண்ணு என்று ஜெயலலிதா சொன்னதாலோ என்னவோ இந்த கட்டுகளையெல்லாம் உடைத்தெறிந்து ஜெயலலிதாவின் மீது பாசத்தை வெளிப்படுத்தினார்கள்.
சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பிப்பதற்கு முதல் நாளான 16ஆம் திகதி ஸ்ரீரங்கத்தில் பெரும்பாலான வீடுகளில் விளக்கேற்றி வைத்து பிரார்த்தனை செய்தனர்.
எந்த அறிவிப்பும் இல்லாமல் அ.தி.மு.க. கட்சிக்கு சம்பந்தமில்லாத பலரின் வீடுகளிலும் இந்தக் காட்சியைக் காண முடிந்தது. மறுநாள் அக்.17ஆம் திகதி காலையில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்த தகவல் பரவியதும் எல்லா வீடுகளிலுமே ஸ்வீட் கொடுக்கத் துவங்கினர். கோயிலுக்குச் செல்வோருக்கு வழி நெடுக ஸ்வீட் கிடைத்தது.
இந்தத் தொகுதி மக்களின் மனநிலையை அறிய சிலரிடம் பேசியபோது அவர்கள் கூறியதாவது;
தெற்கு உத்திர வீதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் நுழைந்ததுமே அந்த வீட்டில் வசிக்கும் இல்லத்தரசி ஜெயந்தி ஸ்வீட் தட்டை நீட்டினார்.
அவர் கூறியதாவது;
அம்மா இந்த முறை மிகவும் சிறப்பான ஆட்சி செஞ்சாங்க. சாதாரண மக்களின் சாப்பாட்டில் இருந்து படிப்பு வரைக்கும் எதுக்குமே சிரமப்படவே இல்லை. லேடீஸூக்கு நாப்கின் இலவசமாக கொடுத்தாங்க. ரிக் ஷாக்காரர் பத்து ரூபாய்க்கு அம்மா உணவகத்துல வயிறார சாப்பிட முடிஞ்சது.
அம்மா குடிநீர், அம்மா மினி பஸ்ன்னு எல்லாமே மக்களுக்குப்பிடிச்சுருந்துச்சு. சந்தோஷமான சூழ்நிலையில அம்மா திடீர்ன்னு ஜெயிலுக்குப் போனது பெண்களால் சகிச்சுக்க முடியலேங்கறதுதான் உண்மை. எங்களால் தாங்கிக்க முடியல. நாங்க தாயார் சந்நிதியில் போய் குத்துவிளக்குப் பூஜை நடத்தினோம். பாபா கோயிலில் ஆரத்தி பூஜை நடத்தினோம்.
மத்தவங்களுக்கு அரசியலா இருக்கலாம். ஸ்ரீரங்கம் மக்களுக்கு இத்தனை நாளும் சோகம்தான்.
கடந்த சனிக்கிழமை ஜாமீன் கொடுத்ததா சொல்லிட்டு திரும்பவும் இல்லைன்னு சொன்னதும் நிறையப் பேரு அழுதாங்க. அதைப் பார்க்கறவுங்களுக்கே துக்கம் தொண்டையை அடைச்சது.
அதனால் எங்களுக்கு இன்னைக்குத்தான் தீபாவளி. எங்க தொகுதிக்கு கடைசி வரைக்கும் அம்மாதான் வேண்டும். வேற யார் வந்தாலும் ஏத்துக்க மாட்டோம். வடகிழக்குப் பருவமழை தென்மேற்குப் பருவமழை எல்லாம் பொய்த்துவிட்டதா சொன்னாங்க.
ஆனால் ஜாமீன் கொடுத்த தகவல் வரும்போது ஆரம்பித்த மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டித் தீர்த்துவிட்டது. அம்மாவின் விடுதலை வருண பகவானையே மகிழ வைத்துவிட்டது. இப்படி உருகிக்கொண்டிருந்தவரிடம் விடை பெற்றோம்.
அடுத்து பெட்டிக்கடை வைத்திருக்கும் குகநாதனைச் சந்தித்தோம். அவர், அம்மா ஒரு நம்பிக்கை நட்சத்திரம், அவங்களை நினைத்தாலே ஒரு பாசிடிவ் எனர்ஜிதான்.
அவங்களுக்கு எப்பவுமே பாசிடிவ் திங்க்கிங்தான். ஒரு விசயத்தை நினைச்சுட்டா செய்து முடிச்சுட்டுத்தான் விடுவாங்க. கடந்த மூன்று ஆண்டுகளாக நல்ல ஆட்சி கொடுத்தாங்க. அரசு திட்டங்கள் சரியாக மக்களுக்குச் சென்றடையும்படி அதிகாரிகளை வேலை வாங்கினாங்க.
அப்படிப்பட்ட நேரத்தில் எப்போதோ நடந்த பிரச்சினைக்கும் போடப்பட்ட இந்த வழக்கு நிறைய கஷ்டத்தைக் கொடுத்துருச்சு. தான் எந்தத் தவறும் செய்யலைங்கிற மன உறுதியுடன் இருந்து இன்னைக்கு சட்டப்படி ஜாமீன் வாங்கி வெளியே வந்திருக்காங்க. இந்த சம்பவத்தால அவங்களுக்கு செல்வாக்கு அதிகரிச்சிருக்கிறது என்பதுதான் உண்மை என்றார்.
ஸ்ரீரங்கத்தின் தெற்குச் சித்திரை கடை வீதியில் காய்கறி வியாபாரம் செய்யும் சந்திரா கூறியதாவது,
அம்மா சீக்கிரம் ஜாமீன்ல வரணும்னு விளக்கு ஏத்தி பிரார்த்தனை பண்ணினாங்க. அப்போ என்னைத்தான் கூப்பிட்டு முதல் விளக்கு ஏத்தச் சொன்னாங்க. நாம எல்லாம் கட்சிக்காரங்க கிடையாது. நமக்கு உழைச்சாத்தான் சோறு.
ஆனால் அது என்னமோ இந்தம்மா மேல நமக்கு ஒரு பாசமாப் போச்சு. எங்க ஊரு பக்கம் நிறைய நல்லது பண்ணியிருக்காங்க. எங்க பேரப்புள்ளைகளுக்கு கம்ப்யூட்டர், சைக்கிள் எல்லாம் கொடுத்து நல்லாப் படிக்க வச்சிருக்காங்க.
அந்தம்மா ஜெயிலுக்குப் போன அதிர்ச்சியில 150 பேர் வரை இறந்ததா சொல்றாங்க. அதுல ஒண்ணும் ஆச்சரியம் இல்ல. அவங்க மக்களுக்கு நெறைய நல்லது செய்துகொடுத்தாங்க. எங்களுக்கு அவங்க, அவங்களுக்கு நாங்கன்னு ஆகிப்போச்சு. அவங்க இங்கதான் திருப்பியும் போட்டியிடுவாங்க. கடவுள் புண்ணியத்துல இனிமே எல்லாம் நல்லதா நடக்கும் என்றார்.
இன்ஜினீயரிங் கல்லூரி மாணவர் குமாரசாமி கூறியதாவது,
நான் தனியார் இன்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ.கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கிறேன். அவங்க மேல சொத்து வழக்குபோட்டு ஜெயிலுக்கு அனுப்பினாங்க. அதைப் பத்தி எங்களுக்குத் தெரியாது. நான் படிக்கிற போது ஸ்கூல்ல கம்ப்யூட்டரையே பார்த்ததில்லை.
இப்ப பிளஸ் டூ படிக்கிற பிள்ளைகளுக்கே லேப்டாப் கொடுத்து, அவங்கள் அதைப் பயன்படுத்தி நல்லாப் படிக்கிறாங்க. தூரத்துல ஸ்கூல் இருக்கிறதால ஸ்கூலுக்குப் போகாதவங்க எல்லாரும் இப்ப சைக்கிள் இருக்கிறதால எல்லாரும் படிப்பைவிடாம படிக்கிறாங்க.
இன்னிக்கு இருக்கிற அரசியல்வாதிகளில் இவங்க எவ்வளவோ நல்லவங்க. எப்படியும் வழக்குல விடுதலையாகி இந்தத் தொகுதி எம்.எல்.ஏ.வா வருவாங்கன்னு நம்பிக்கை இருக்கு என்றார்.
நம்மைத் தேடி வந்து பேசிய பள்ளி ஆசிரியை பிரியா ராகவேந்திரன் கூறியதாவது,
அவங்க ஜெயிலுக்குப் போன அன்னைக்கு எங்க வீட்டுக்குப் பக்கத்தில உள்ள ஒரு 88 வயசு பாட்டி சாப்பிடவே இல்லை. இன்னைக்குத்தான் எல்லோரும் சந்தோஷமா இருக்கோம். நாக்கூசாம பேசறவங்களுக்கு இன்னைக்கு பெய்த மழையே பதில் சொல்லும். ஒரு குடும்பத்தை ஒழுங்கா நடத்தவே இப்படி சிரமப்படுகிறோம். அவங்க ஒரு மாநிலத்தையே ஆட்சி செய்யிறவங்க.
அவங்களுக்கு எத்தனை சிரமங்கள் இருக்கும்? அவங்களுக்கு தண்டனை என்றதும் மனசுக்குக் கஷ்டமா போச்சு. இப்ப ஜாமீன்ல வெளியே வந்துட்டாங்க. அவங்க ரொம்ப வைராக்கியமானவங்க. சீக்கிரமே சி.எம்.ஆவாங்க என்றார்.
இவ்வாறு அரசியல் சார்பற்றவர்களும் உருக்கமாகப் பேசியது ஆச்சரியமளித்தது!
ஸ்ரீரங்கம் தொகுதியில் அக்.17ஆம் திகதியிலிருந்து மூன்று நாட்களுக்கு பட்டாசு வெடித்தும் ஸ்வீட் கொடுத்தும் அ.தி.மு.கவினர் கொண்டாடினார்கள். அ.தி.மு.க.அனுதாபி ஒருவர் நம்மிடம் இப்படிச் சொன்னார்.
1984இல் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்குப் போனார் எம்.ஜி.ஆர். அப்போது அவரைத் தங்கள் குடும்பத் தலைவனாகவே எண்ணி ஆளாளுக்குப் பிரார்த்தனை செய்தார்கள்.
அந்த பிரார்த்தனைகளின் பலனாக அவர் மீண்டு வந்தார். இப்போதும் அதே போலத்தான். மிகச்சிறப்பான ஆட்சியைத் தந்து கொண்டிருந்த அம்மாவுக்கு ஒரு சோதனை வந்தபோது ஏழை மக்களால், இல்லத்தரசிகளால் ஏதும் செய்ய முடியவில்லை.
அவர்கள் மனதாரப் பிரார்த்தனை செய்தார்கள். அதற்குப் பலனாகவே அம்மாவும் சிறை மீண்டு ஜாமீனில் வந்திருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
ஜெயலலிதாவே தங்கள் தொகுதிக்கு மீண்டும் எம்.எல்.ஏவா வர வேண்டும் என்று ஸ்ரீரங்கம் தொகுதி மக்கள் விரும்புவதை அவர்களின் பேச்சுக்கள் மேற்கண்டவாறு வெளிப்படுத்துகிறது!.