ஆண்டு மே மாதம் நடந்த இந்தியப் பாராளுமன்றத்தின் மக்களவைக்கான (லோக் சபா) தேர்தலில் வெற்றிபெற்று நரேந்திர மோடி தலைமையில் ஆட்சியமைத்த பாரதிய ஜனதாக் கட்சியின் முக்கிய பிரச்சினைகளாக அமைந்தவை:
1. காங்கிரஸ் கட்சி பதவியில் அமர்த்திய குடியரசுத் தலைவரும் ஆளுநர்களும்,
2. இருநூற்று ஐம்பது உறுப்பினர்க ளைக்கொண்ட மாநிலங்களவையில் பா.ஜ.கவிற்கு 43 உறுப்பினர் மட்டுமே இருப்பது,
3. இருபத்தெட்டு மாநில சட்ட மன்றங்களில் நான்கு மட்டுமே பா.ஜ.கவின் கட்டுப்பாட்டில் இருந்தமை.
பா.ஜ.கவினர் தொடர்ந்து பல ஆண்டுகள் ஆட்சி தடையின்றிச் செய்வதாயின் அது பல சட்ட மன்றங்களைக் கைப்பற்ற வேண்டும். அப்போதுதான் அடுத்த குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.கவினர் நிறுத்தும் வேட்பாளர் வெற்றிபெற முடி யும். அத்துடன் மாநிலங்களவையில் பெரும்பான்மை வலுவைப் பெற முடி யும்.
மோடிக்குத் தேவையான மகாராஷ்ட்ரா
நரேந்திர மோடியின் பொருளாதாரத் திட்டங்களையும் அவர் வாக்குறுதியளித்த பொருளாதாரச் சீர்திருத்தங்களையும்ம் முன்னெடுத்துச் செல்ல இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரான மும்பாயைக் கொண்ட மகாராஷ்ட்ரா மாநிலத்தை அவர் எப்படியும் கைப்பற்ற வேண்டும்.
அதற்கான திடசங்கற்பத்துடன் மோடி செயற்பட்டு ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி நடந்த தேர்தலில் 288 தொகுதிகளில் 122 தொகுதிகளைக் கைப்பற்றினார். நரேந்திர மோடி இந்தச் சட்ட சபைத் தேர்தலிற்குச் செய்த பரப்புரை போல் இதற்கு முன்னர் எந்த ஒரு இந்தியத் தலைமை அமைச்சரும் செய்ததில்லை.
இந்த முக்கியத்துவம் மிக்க மாநில சட்ட மன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை மூன்றாம் இடத்திற்கு தள்ளியமை மோடிக்கும் அவரது தளபதியான அமித் ஷாவிற்கும் கிடைத்த பெரும் வெற்றியாகும்.
இருவரும் தமது “கட்சி அரசியல் முகாமைத்துவத்தின் சிறப்புத் தன்மையை” மீண்டும் நிரூபித்துள்ளனர். பல்வேறுபட்ட தரப்பினரைக் கொண்ட பா.ஜ.கவில் இவர்களது பிடி மேலும் இறுகியுள்ளது. அதே நாளில் நடந்த ஹரியானா மாநில சட்ட மன்றத்திற்கான தேர்தலில் பா.ஜ.கவினர் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றனர்.
சிவசேனாவுடன் கூடாத கூட்டணி
மே மாதம் நடந்த இந்தியப் பாராளுமன்றத்தின் மக்களவைக்கான தேர்தலில் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பா.ஜ.கவினர் சிவசேனாவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு மொத்த 48 தொகுதிகளில் பா.ஜ.க. 23 இலும் சிவசேனா 18 இடங்களிலும் வெற்றி பெற்றன.
காங்கிரஸ் கட்சி இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.
இதே கூட்டணி சட்ட மன்றத் தேர்தலிலும் போட்டியிட வேண்டும் என இரு கட்சிகளும் விருப்பம் தெரிவித்தன. இந்தியாவின் பொருளாதாரத் தலைநகர் “மண்ணின் மைந்தர்களுக்கே” என்ற கொள்கையுடையது சிவசேனா அமைப்பு. மும்பாயில் வேலை தேடியும் வர்த்தகம் செய்யவும் வேறு மாநிலத்தவர்கள் வருவதை எதிர்த்து சிவசேனா அமைப்பு 1966ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
புகழ் பெற்ற மராத்திய மன்னரான சிவாஜியின் படையினர் என்பதே சிவசேனா என்பதன் பொருளாகும். மராத்தியர்களைத் தவிர மற்றவர்கள் மும்பாயில் இருந்து விரட்டப்பட வேண்டும் என சிவசேனாவைச் சேர்ந்த சில தீவிரவாதிகள் கருதுகின்றனர்.
இதனால் மும்பாயில் கலவரங்களும் வெடிப்பதுண்டு. சிவசேனா மராத்தியப் பிரதேச வாதத்தையும் இந்துத் தேசியவாதத்தையும் தனது இரு கண்களாகக் கொண்டுள்ளது எனச் சொல்லலாம்.
இந்துத் தேசியவாதக் கொள்கை சிவசேனாவையும் ப.ஜ.கட்சியினரையும் நெருங்கிச் செயற்பட வைத்தது. ஆனால், 2014 ஒக்டோபர் 15ஆம் திகதி நடந்த மகாராஷ்ட்ரா சட்ட மன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டாமையினால் தனித் தனியே போட்டியிட்டன.
இதே போல் காங்கிரஸ் கட்சிக்கும் இத்தாலியப் பெண் தலைமை தாங்குவதை ஏற்காத சரத் பவார் பிரிந்து சென்ற உருவாக்கிய தேசியவாதக் காங்கிரஸ் கட்சியும் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு காண முடியாமல் தனித்துப் போட்டியிட்டன.
இதனால் 288 சட்ட மன்றத் தொகுதிகளுக்கான நடந்த தேர்தலில் நான்கு முனைப் போட்டி நடந்தது. பா.ஜ. கட்சி சிவசேனாவுக்கு 130 தொகுதிகள் வரை கொடுக்க உடன்பட்டிருந்தது.
சிவசேனா அதிலும் மிக அதிகமான தொகுதிகளில் போட்டியிட விரும்பியது. ஆனால் தேர் தல் முடிவு பா.ஜ.கவிற்கு சாதகமாக அமைந்தது. பா.ஜ.க 122 தொகுதிகளிலும் சிவசேனா 63 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி 41 தொகுதிளிலும் தேசியவாதக் காங்கிரஸ் கட்சி 41 இடங்களிலும் வெற்றி பெற்றன.
அறுதிப் பெரும்பான்மையை பா.ஜ.க. பெற்றிராத நிலையில் சிவசேனா ஒரு பேரம் பேசக் கூடிய வலுவைப் பெற்றுள்ளது என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் தேசியவாதக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.
பா.ஜ.கட்சி ஆட்சியமைக்க தான் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கப் போவதாக அவர் அறிவித்தார். இது சிவசேனாவை வலுவிழக்கச் செய்ய அவர் எடுத்த நடவடிக்கையாகும்.
இருபத்தைந்து ஆண்டுகளாக ஒன்றாக இருந்த பாரதிய ஜனதாக் கட்சியும் சிவசேனாவும் இப்போது ஒன்றுடன் ஒன்று முரண்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
மதவாதமும் இனவாதமும்
பாரதிய ஜனதாக் கட்சியும் சிவசேனா வும் இந்துமத மேலாண்மையை ஏற்றுக் கொண்டாலும் சிவசேனாவின் மராத்தியப் பிராந்தியவாதத்தை பா.ஜ.க. விரும்பவில்லை பா.ஜ.கவின் இந்தியப் பேரினவாதத்தை சிவசேனா விரும்புவதில்லை.
இரு தரப்பினரும் மற்ற மதங்களையிட்டு அதிலும் முக்கியமாக இஸ்லாமிய மதத்தையிட்டு ஏறக்குறைய ஒரே கொள்கையை உடையவர்கள். பாபர் மசூதி இடிப்பில் ஒரே கொள்கையுடையவர்கள்.
பால் தக்கரேயால் 1966ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சிவசேனா அவரது மறைவின் பின்னர் அவரது மகனுக்கும் (உதவ் தக்கரே), அவரது தம்பியின் மகனுக்கும் (ராஜ் தக்கரே) இடையில் ஏற்பட்ட மோதலால் இரண்டாகப் பிளவுபட்டது.
ராஜ் தக்கரே மகாராஷ்ட்ர புனரமைப்புச் சேனையை 2006ஆம் ஆண்டு ஆரம்பித்தார். ராஜ் தக்கரே சிவசேனாவிற்குள்ளிருந்து அந்தக் கட்சியை தனதாக்கிக் கொள்ளும் அளவிற்கு அவருக்கு கட்சிக்குள் செல்வாக்கிருந்தது. இருந்தும் சகோதரப் போரைத் தவிர்க்க அவர் தனிக் கட்சி ஆரம்பித்தார்.
இந்தப் பிளவால் சிவசேனா வலுவிழந்து விட்டது என இந்தியத் தலைமை அமைச்சர் மோடியும் அவரது தளபதி அமித் ஷாவும் உணர்ந்து கொண்டு செயற்படுவதாக சிவசேனாத் தலைவர் உதவ் தக்கரே கருதுகின்றார்.
2014ஆம் ஆண்டு நடந்த இந்தியப் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் இந்திய மத்திய அரசில் சிவசேனா கேட்ட அமைச்சுப் பதவிகளை வழங்காமை இரு கட்சிகளிற்கும் இடையிலான மோதலை உருவாக்கியிருந்தது.
விரோதத்தை பெரிதாக்கும் விதர்ப்ப தேசம்
மகாராஷ்ட்ராவின் ஒரு பகுதியாக விதர்ப்ப தேசம் இருக்கின்றது. விதர்ப்ப தேச மக்களில் பலர் தாம் மகாராஷ்ட்ராவிலிருந்து பிரிந்து செல்ல வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால், சிவசேனா ஒன்றுபட்ட மகாராஷ்ட்ரா என்பதில் உறுதியாக இருக்கின்றது. சிவசேனாவின் பிராந்தியவாதத்தை வலுவிழக்கச் செய்ய பேரினவாதக் கட்சியான பாரதிய ஜனதாக் கட்சி விதர்ப்ப தேசப் பிரிவினையை ஆதரிக்கின்றது.
இது இரு கட்சிகளிடையே பேதத்தை 2014ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தீவிரமடையச் செய்தது. 2014ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி நடந்த மகாராஷ்ட்ரா சட்ட மன்றத் தேர்தலில் பா.ஜ. கவிற்கும் சிவசேனாவிற்கும் இடையில் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டாமல் தனித்துப் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்ட பின்னர் பா.ஜ.க விதர்ப்ப தேசப் பிரிவினைக்கான தனது ஆதரவைத் தீவிரப்படுத்தியது.
குஜராத்திடம் மண்டியிட்ட மராத்தி
தேர்தலின் போது எதிரும் புதிருமாக நின்று போட்டியிட்ட பா.ஜ.கவிற்கும் சிவசேனாவிற்கும் இடையில் மீண்டும் இணைந்து ஆட்சி அமைப்பது பற்றிய பேச்சுவார்த்தை ஆரம்பித்தவுடன் குஜராத்திடம் மண்டியிட்ட மராத்தி என சிவ சேனாவின் எதிரிகள் விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
1960ஆம் ஆண்டு மகாராஷ்ட்ராவிலிருந்து குஜராத்தைப் பிரித்து தனி மாநிலமாக்கப்பட்டது. மும்பாயில் குஜராத்தியர்கள் பலர் உயர் பதவிகளிலும் வர்த்தகத்திலும் இருக்கின்றார்கள். இதை சிவசேனா விரும்பவில்லை.
மோடியும் ஒரு குஜராத்தியர் என்பதால் பா.ஜ. கவிற்கும் சிவசேனாவிற்கும் இடையில் விரோதம் மேலும் மோசமடைந்துள்ளது. ஒன்றுபட்டுப் போட்டியிட்ட பாராளுமன்றத் தேர்தலின் போதே தேர்தலிற்கு முதல் நாள் சிவசேனாவின் பத்திரிகைஓன்றில் குஜராத்தியர்கள் மும்பாயை ஆக்கிரமித்துக் கொள்ளை அடித்துப் பெரும் செல்வந்தர்களாக மும்பாயில் வாழ்வதாக ஆசிரியத் தலையங்கம் தீட்டியிருந்தது.
விதர்ப்ப தேசத்துப் பார்ப்பனர் மகாராஷ்ட்ராவின் முதலமைச்சர்
விதர்ப்ப தேசத்தைச் சேர்ந்த நிதின் கட்காரி பாரதிய ஜனதாக் கட்சியின் முன்னாள் தலைவரும் தற்போது இந்திய மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகப் பணி புரிகின்றார்.
மகாராஷ்டிர முதல்வராகப் பதவியேற்ற தேவேந்திர பட்னவீஸ்
இது போதாது என்று மகாராஷ்ட்ரா சட்ட மன்றத்தின் முதலமைச்சராக விதர்ப்ப தேசத்துப் பார்ப்பனரான தேவேந்திர பட்னவீஸ் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இது சிவசேனாவைப் பொறுத்தவரை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலாகும். இவரால் ஓர் ஊழலற்ற ஆட்சியை ஏற்படுத்த முடியுமென எதிர்பார்க் கப்படுகின்றது. ஆட்சியில் இணையாவிடினும் முதலமைச்சர் பதவி ஏற்பின் தாம் பங்கேற்க வேண்டும் என பா.ஜ.கவிடம் சிவசேனா வேண்டுகோள் விடுத்துள்ளது.
மாநிலங்களைப் பிடிக்க நீண்ட தூரம்
நரேந்திர மோடியின் தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி இன்னும் பல மாநிலங்களைக் கைப்பற்ற வேண்டி யுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் பெரும் தொல்லையாக இருந்த உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு தற்போது தலைகீழாக மாறிவிட்டது. உலகச் சந்தை யில் எரிபொருள் விலைகள் அடையும் வீழ்ச்சி மோடியின் ஆட்சிக்கு பெரும் வாய்ப்பாக உள்ளது.
பாரதிய ஜனதாக் கட்சியின் ஆட்சியின் கீழ் தற்போது மகாராஷ்ட்ரா, ஹரியானா, குஜராத், ராஜஸ் தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களும் கோவா என்னும் ஒன்றியப் பிரதேசமும் இருக்கின்றன. இவற்றின் பொருளாதார உற்பத்தி இந்தியாவின் மொத்தப் பொருளாதார உற்பத்தியின் 37 விழுக்காடாகும்.
இதை வைத்துக் கொண்டும் சில மாநிலங்களில் ஆட்சியிலிருக்கும் ஒத்துழைக்கக் கூடிய பிராந்தியக் கட்சிகளின் ஆதரவுடனும் நரேந்திர மோடியால் தனது பொருளாதாரத் திட்டங்களையும் சீர்திருத்தங்களையும் முன்னெடுக்க முடி யும்.
வேல் தர்மா