Site icon ilakkiyainfo

எனக்கு பிடித்த ஒரே நடிகை நயன்தாராதான். ஆர்யா அசத்தல் பேட்டி.

ஆர்யா என்றாலே அட்டகாசம்தான். எந்தக் கேள்வி கேட்டாலும், “அப்படியா…? ஆமால்ல…? எனக்கு அந்த விஷயமே தெரியாதே… அப்படியும் இருக்குமா…?’ என்கிற ரீதியில் கேள்வி கேட்பவரையே மடக்கி மறுகேள்வி கேட்டுப் பாடாய்ப் படுத்திவிடுகிறார் மனிதர்.

கவச குண்டலங்களாக ஒட்டிப்பிறந்ததுபோல் எந்நேரமும் குஷியும் கும்மாளமுமாகக் காட்சியளிக்கிறார். தயாரிப்பாளராக அவதாரம் எடுத்து, தம்பியை நாயகனாக்கி “அமர காவியம்’ கண்டார்.

அதில் லாபம் கண்டாரா என்பது தெரியவில்லை. இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணி இளம் ஹீரோக்களில் ஒருவராக நிறைய படங்கள் கைவசம் வைத்திருக்கும் ஆர்யாவைச் சந்தித்தோம்…

எப்போது பார்த்தாலும் செம ஜாலியாக இருக்கிறீர்களே… எப்படி இந்த எனர்ஜி?

அதெல்லாம் ஒன்றுமில்லை. எனக்கும் சோகமெல்லாம் இருக்கு. அதைத் தோள் மேல ஏத்திக்காம ஓடிக்கிட்டே இருக்கேன், அவ்வளவுதான். இந்த வாழ்க்கையை ஒருதரம்தான் வாழப்போறோம். சோகப்பட்டு அதை ஏன் பாழாக்கிக்கிட்டு…? என்னைப் பொறுத்த வரைக்கும் இந்த நேரம், என்னுடைய நேரம். அதை எப்போதும் எதற்காகவும் வீணடிக்காமல், நமக்குப் பயனுள்ளதாக, சந்தோஷமானதாக மாத்திக்கணும். இதுதான் என் கேரக்டர்.

ஆர்யா என்றாலே “பிளேபாய்’ என்ற இமேஜ் துரத்துகிறதே…?

ஆமால்ல… அப்படித்தான் சொல்றாங்க. ஆனால், நான் அதைப் பெரிதாக எடுத்துக்க மாட்டேன். காரணம், அதில் கொஞ்சம் உண்மையும் இருக்கத்தானே செய்கிறது. இதில் வருத்தப்படும்படியான விஷயம் என்னன்னா, அந்தக் கொஞ்சம் உண்மையை இஷ்டத்துக்கும் மிகைப்படுத்தி எழுதறாங்களே அதுதான்.

அப்படி சிலர் எழுதும்போது ரொம்பவே ஷாக்கிங்கா இருக்கும். என்னுடன் நடிக்கும் எல்லா நடிகையுடனும் இணைத்து என்னைப் பற்றிய கிசுகிசுக்களைப் பரப்புகிறார்கள்.

இதை விளம்பரத்துக்காக நானே கிளப்பி விடுவதாகவும் சொல்கிறார்கள். என்னைப் பற்றி இதுபோல் வதந்திகள் பரவுவதை என்னால் தடுக்க முடியவில்லை.

ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்லவும் எனக்கு நேரம் இல்லை. யார் என்ன எழுதினாலும், பிளேபாய் நடிகர் என்ற இமேஜ் விழுந்தாலும், எனது படங்கள்தான் எனக்கான முகவரி. நான் நடித்த படங்கள் நன்றாக இல்லை என்றால், ஒருவரும் என்னைத் திரும்பிப் பார்க்கமாட்டார்கள். சினிமாவில் இதுதான் நிஜம்.

உங்களுக்கு ஏற்ற ஜோடி என்று யாரை நினைக்கிறீர்கள்?

எனக்கு ஏற்ற ஜோடி நயன்தாராதான். எனக்குப் பிடித்த நடிகையும் நயன்தாராதான். நான் விரும்பும் ஒரே நடிகை நயன்தாராதான்.

“தமிழ்நாட்டில் எனக்கு இருக்கும் ஒரே ஒரு நெருங்கிய நண்பர் ஆர்யாதான்’ என்று எமி ஜாக்சன் பேட்டி எல்லாம் தட்டிவிடுறாங்களே?

அப்படியா சொல்றாங்க… “மதராசபட்டினம்’ படத்தில் தொடங்கிய நட்பு. அந்தப் படத்தில் நடித்தபோது அவர் என்னோடுதான் நிறைய நேரம் பேசிக்கொண்டிருப்பார். என்னைப் பற்றி அதிகம் தெரியும் என்பதால் அப்படிச் சொல்லியிருப்பார். விட்டுடுங்களேன்.

உங்களுடைய வண்டியில் எப்போதும் ஒரு சைக்கிள் தொத்திக்கிட்டே பயணம் செய்யுதே?

ஓ… அதுவா, சென்னையில் எந்த இடத்தில் ஷூட்டிங் நடந்தாலும் நான் சைக்கிள்லதானே போவேன். ஈ.சி.ஆர். ரோட்டில் ஷூட்டிங் என்றால் காலை 5 மணிக்கே எழுந்து சைக்கிளை எடுத்துக்கிட்டு கிளம்பிடுவேன்.

வெளியூரில் ஷூட்டிங் என்றாலும், சைக்கிளை கையோடு கொண்டு சென்று விடுவேன். தங்கியிருக்கும் இடத்திலிருந்து ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சைக்கிளில்தான் போவேன்.

சைக்கிள் ஓட்டுவது மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்ச்சியைத் தருகிறது. அந்த நேரத்தில் புதுப்புது ஐடியாக்கள் தோன்றும். இதையெல்லாம்விட எனக்கு சைக்கிள் பயணம் ரொம்பப் பிடித்திருக்கிறது.

“புறம்போக்கு’, “மீகாமன்’, “யட்சன்’ என்று தொடர்ச்சியாக வெற்றி இயக்குநர்களின் கூட்டணியில் இணைந்து வருகிறீர்களே…

ஜனநாதன் நான் மதிக்கும் முக்கியமான இயக்குநர். அவர் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் விருப்பமாக இருந்தது. நானே பல முறை அவரிடம் “சார், நான் உங்களுடைய படத்தில் நடிக்கணும்’ என்று கேட்டிருக்கிறேன். அதற்கேற்ற சூழல் அமைந்தது.

உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன். படத்தில் விஜய்சேதுபதி, ஷாம் எல்லாம் இணைந்ததும் இன்னும் எனக்கு சவால் கூடிவிட்டது. “புறம்போக்கு’ படத்தில் என்னுடைய கேரக்டர் பகத்சிங்கை நினைவுபடுத்துவதாக இருக்கும். இது என் சினிமா வாழ்க்கையில் என்னை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தும்.

“மீகாமன்’ படத்தின் கதையை என்னிடம் சொன்னபோதே கண்டிப்பாக இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று தோன்றியது. வித்தியாசமான ஆக்ஷன் திரில்லர் கதையாக உருவாக்கியிருந்தார் மகிழ் திருமேனி.

ரொம்ப ஸ்டைலிஷா, மேன்லியா இருக்கிற “மீகாமன்’ ஆர்யாவை கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும். இதில் எனக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார்.

விஷ்ணுவர்தனின் “யட்சன்’ படமும் எனக்கு முக்கியமான படம். இது ரொமாண்டிக் காமெடி சப்ஜெக்ட். இந்தப் படத்தில் கிருஷ்ணாவும் என்னுடன் இணைந்து நடிக்கிறார். தீபா சன்னிதி, சுவாதி ரெட்டி ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.

நடிப்பு சம்பந்தமாக தம்பி சத்யாவுக்கு என்ன மாதிரியான உதவிகள் செய்தீர்கள்?

அவன் நடிக்க வந்திருக்கான் சந்தோஷம். ஒரு நல்ல கதை அமைந்ததால் “அமர காவியம்’ படத்தை அவனை வைத்துத் தயாரித்தேன். படமும் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்திருக்கு. நடிக்கக்கூடியவன் என்று பெயர் வாங்கியுள்ளான்.

அவன் முன்னணி நடிகராக வேண்டும் என்றால் கடுமையாக உழைக்க வேண்டும். அந்த உழைப்புதான் கைகொடுக்கும். தன்னுடைய உழைப்பால் வெற்றியை ருசித்தவன்தான் சினிமாவில் காலூன்றி நிற்கமுடியும் என்று நினைக்கிறேன். அதுதான் அவனுக்கும் நல்லது. எந்த நேரமும் என் நிழலில் இருப்பது சரியாக இருக்காது.

தொடர்ந்து படங்கள் தயாரிக்க திட்டமிருக்கிறதா… அல்லது தம்பிக்காகத்தான் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினீர்களா?

“அமர காவியம்’ படத்தில் என் தம்பி நடிக்கவில்லை என்றாலும், தயாரித்திருப்பேன். காரணம், யார் நடித்தாலும் அந்தப் படம் சிறந்த படமாகத்தான் வந்திருக்கும். நல்ல கதைகளைத் தொடர்ந்து தயாரிக்கத்தான் படக் கம்பெனி தொடங்கியிருக்கிறேன். முதல் தயாரிப்பில் என் தம்பி நடித்தான், அவ்வளவுதான்.

திருமணம் பற்றி முடிவு செய்துவிட்டீர்களா?

திருமணம் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. அது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். எனக்கு மனைவியாக வரப்போகும் பெண்ணை இதுவரை நான் கண்டுபிடிக்கவில்லை. எனக்குப் பிடித்த பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்வேன். அது நடிகையாகவும் இருக்கலாம் அல்லது அப்பா – அம்மா பார்க்கும் பெண்ணாகவும் இருக்கலாம்.

திருடன் போலீஸ் – என்னோடு வா பாடல் மேக்கிங் வீடியோ!

Exit mobile version