புதுடில்லி: வெளிநாட்டில் வங்கிக்கணக்கு வைத்துள்ளதாக, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வழங்கிய 628 பேரின் அக்கவுன்டுகளில், 289 பேரின் அக்கவுன்டுகளில் பணம் இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து மத்திய அரசின் கறுப்பு பண மீட்பு வெறும் கானல் நீராகி விடுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
சுவிட்சர்லாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் உள்ள வங்கிகளில், இந்தியர்களால், 30 லட்சம் கோடி ரூபாய் கறுப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, நீண்ட நாட்களாக புகார் உள்ளது. வரி செலுத்துவதை தவிர்க்கும் வகையில், ஏராளமான வி.வி.ஐ.பி.,க்கள், இந்த வங்கிகளில் பணத்தை பதுக்கி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த பணத்தை, இந்தியாவுக்கு மீட்டு வரக் கோரியும், இதுகுறித்து விசாரணை நடத்தக் கோரியும், மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, 2009ல், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
கடந்த லோக்சபா தேர்தலின் போது, ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை, இந்தியாவுக்கு மீட்டு வருவோம்’ என, பா.ஜ., தலைவர்கள் அறிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, பா.ஜ., ஆட்சிக்கு வந்ததும், கறுப்பு பணம் குறித்து விசாரணை நடத்துவதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதிகள் எம்.பி.ஷா, அரிஜித் பசாயத் ஆகியோர் அடங்கிய, சிறப்பு புலனாய்வு குழுவை, சுப்ரீம் கோர்ட் நியமித்தது.
இந்நிலையில், கறுப்பு பணத்தை பதுக்கி வைத்த, மூன்று தொழிலதிபர்களின் பட்டியலை, மத்திய அரசு, சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது.மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு, கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளோரின் முழு பட்டியலையும் தாக்கல் செய்யும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, வெளிநாடுகளில் வங்கிக்கணக்கு வைத்துள்ள 628 பேரின் பெயர்களை மத்திய அரசு சீலிட்ட உறையில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. மேலும், இவர்களின் பெயர்களை வெளியிட்டால், கறுப்பு பணம் தொடர்பான விசாரணையை அது பாதிக்கும் என்றும் மத்திய அரசு அச்சம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், மத்திய அரசு தாக்கல் செய்த 628 பேரின் கணக்குகளில் 289 கணக்குகளில் தற்போது பணமே இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாடுகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது கணக்குகளில் இருந்து பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக வெளியே எடுத்து வருவதாகவும், விரைவில் இவ்வாறு பணத்தை எடுப்பவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.