கொள்ளுப்பிட்டி பகுதியில் பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 14 வயது மாணவி ஒருவர் அவரது மாமனாரால் வெள்ளவத்தை கடற்கரை பகுதியில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டபோது வெள்ளவத்தை பொலிஸாரினால் குறித்த மாமனார் கைது செய்யப்பட்டுள்ளார்.
38 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பாடசாலைக்கு முச்சக்கர வண்டியில் அழைத்து வரும் போதும் இன்னும் பல சந்தர்ப்பங்களிலும் குறித்த மாணவி பல தடவைகள் சந்தேக நபரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் வெள்ளவத்தை பொலிஸார் குறிப்பிட்டனர்.
நேற்று முன் தினம் காலை பாடசாலை மாணவி ஒருவர் சீருடையுடன் வெள்ளவத்தை கடற்கரை பகுதிக்கு அழைத்துச் செல்லப்படுவதையும் பின்னர் அவர் சீருடையை மாற்றி வேறு ஆடையுடன் ஆட்டோ சாரதியுடன் கடற்கரைக்கு செல்வதையும் அவதானித்த வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தின் கான்ஸ்டபிள் ஒருவர் அது தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவுக்கு அறிவித்ததை தொடர்ந்தே சந்தேக நபர் கைது செய்யப்பட்டு மாணவி மீட்கப்பட்டுள்ளார்.
வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதயகுமார வுட்லரின் நேரடி பணிப்பின் பேரில் அந்த பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவுக்கான பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நாகஹவத்தவின் ஆலோசனையின் கீழ் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் பொறுப்பதிகாரி இஷாரி மற்றும் கான்ஸ்டபிளான நிலந்த ஆகியோரின் நடவடிக்கையின் மூலமே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வெள்ளவத்தை பொலிஸார் மேலும் தகவல் தருகையில்,
மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த மாணவி தந்தையின் தொழில் காரணமாக கிருலப்பனை பகுதியில் வீடொன்றில் தங்கியிருந்து கல்வியை தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில் அந்த மாணவியின் மாமனாரே அவரை பாடசாலைக்கு அழைத்துச் செல்வதும் பின்னர் வீட்டுக்கு கொண்டுவந்து சேர்ப்பதுமான வேலையை செய்துள்ளார்.
சந்தேக நபரான மாமாவுக்கும் மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில் அவரது பிள்ளைகளையும் குறித்த மாணவியினையும் சந்தேக நபர் ஒரே நேரத்திலேயே அழைத்துச் சென்றுள்ளார்.
எனினும் அவரது பிள்ளைகள் வேறு பாடசாலையில் படிப்பதால் அவர்களை முதலில் இறக்கிவிடும் சந்தேக நபர் பின்னர் குறித்த சிறுமியை இறக்கி விடுவதாக அழைத்து வந்துள்ளதாகவும் பின்னர் பாடசாலைக்கு தாமதமாகி விட்டதாக கூறி வேறு உடையினை அணிவித்து வெள்ளவத்தை கடற்கரைக்கு அழைத்துச் சென்று உல்லாசம் அனுபவித்துள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் நோயால் அவதியுறுபவர் என தெரிவிக்கும் பொலிஸார் அவருக்கு மருந்து எடுப்பதற்கு சென்ற பல சந்தர்ப்பங்களிலும் சிறுமி மாமனாரால் ஏமாற்றப்பட்டு துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டனர்.
சந்தேக நபரை புதுக்கடை மூன்றாம் இலக்க நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பொலிஸார் இம்மாதம் 18 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் இட்டுள்ளனர்.
இது தொடர்பில் கேசரியிடம் கருத்துத் தெரிவித்த வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் உதயகுமார வுட்லர்இ தமது பிள்ளைகள் விடயத்தில் பெற்றோர் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.
கல்விக்காக பாடசாலைக்கு அனுப்பும் போதும், பிரத்தியேக வகுப்புக்களுக்கு அனுப்பும் போதும் யாருடன் செல்கின்றார், வருகின்றார் என்பது தொடர்பிலும் பிள்ளைகளின் மாற்றங்கள் தொடர்பிலும் பெற்றோருக்கு அவதானம் தேவை என சுட்டிக்காட்டினார்.
அத்துடன் பாடசாைலகளும் மாணவர்கள் சமுகம் தராத போது அது தொடர்பில் பெற்றோரை தொடர்புகொண்டு விசாரிக்கும் ஒரு திட்டம் ஒன்றினை வகுக்க வேண்டும் எனவும் அதனூடாக இவ்வாறான பல சம்பவங்களை முறியடிக்க முடியும் என குறிப்பிட்டார்.