ஷங்காயில் உற்பத்தி செய்யப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வருவது தளபாடங்களை ஏற்றிக்கொண்டு அல்ல. சந்தை நோக்கத்துடன் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று வராது. எனவே பாதுகாப்புடன் விளையாடவேண்டாம் என்று இந்திய ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியின் தேசிய பேச்சாளர் எம்.ஜே. அக்பார் தெரிவித்தார்.
யுத்தத்தின்போது இந்தியா இலங்கைக்கு மிகப்பெரிய உதவியை வழங்கியது. அந்த சூழ்நிலையின் தாற்பரியத்தை உணர்ந்து இந்தியா இலங்கைக்கு உதவி செய்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் நலமே பிராந்தியத்தின் நலம். இதனை அனைவரும் உணர்ந்துகொள்ளவேண்டும். இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான உறவு விசேடமானது. முரண்பாடுகள் இருக்கலாம். டில்லிக்கும் தமிழகத்துக்கும் கூட முரண்பாடுகள் இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டுக்கு முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் வருகை தராமை தவறாகும். ஆனால் தற்போதைய இந்திய பிரதமர் தனது பதவியேற்புக்கு இலங்கை ஜனாதிபதி அழைத்தார்.
இந்த விடயத்தில் மாநிலத்தின் உணர்வு குறித்து மத்திய அரசாஙகம் கவலையடையவில்லை. மாற்றத்தை புரிந்துகொள்ளுங்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை வந்துள்ள இந்திய ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியின் தேசியப் பேச்சாளர் எம்.ஜே. அக்பார் கொழும்பில் நேற்று இந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினவைு தின உரையை நிகழ்த்தினார். அதிலேயே அவர் இந்த வி்டயத்தை குறிப்பிட்டார்.
கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தின குழு டி. அறையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட இலங்கைக்கான இந்திய தூதுவர் வை.கே. சிங்ஹா உள்ளிட்ட உள்நாட்டு வெளிநாட்டு இராஜதந்திரிகள் உள்ளிட்ட கலந்துகொண்டனர். பாத்பைன்டர் அமைப்பும் இலங்கை இந்திய அமைப்பும் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
இந்திய ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியின் தேசியப் பேச்சாளர் எம்.ஜே. அக்பார் அங்கு மேலும் கூறியதாவது,
1947 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தாலும் அதனை பெரிய அடைவு மட்டமாக இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு கருதவில்லை.
மாறாக 1928 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி இந்தியர்களிடம் இருந்து பயத்தை நீக்கியமையையே அவர் சாதனையாக கருதினார். இந்தியாவுக்கு சுதந்திரம் பெறப்படவில்லை. சுதந்திரம் எடுக்கப்பட்டது. நேரு சுதந்திரத்துக்காக சிறையில்கூட இருந்தார்.
ஆனால் நிலையான இந்தியா என்பது மிக முக்கியமாகும். தற்போது நாம் பேசுகின்ற இந்த புத்தெழுச்சி என்பது எப்போது வந்தது. ஒரு வருடத்துக்கு முன்னர் இது பேசப்படவில்லை.
அந்தவகையில் மோடி நாட்டுக்கு என்ன கொண்டு வந்தார்? அவர் எவ்வாறு தலைவராக வந்தார்? என்று பார்க்கவேண்டும். பாராளுமன்றம் ஜனநாயகத்தின் கோயில் என்றும் அந்த கோயிலின் புத்தகமாக அரசியலமைப்பு காணப்படுதாகவும் நாம் அதன் சேவையாளர்கள் என்றும் மோடி குறிப்பிட்டார்.
அவர் தனது முதல் உரையிலேயே வறுமைக் குறைப்பு குறித்து பேசவில்லை. வறுமை ஒழிப்பு குறித்தே பேசினார். 65 வீதமாக இருந்த இந்தியாவின் வறுமை வீதத்தை 30 வீதமாக குறைப்பதற்கு 65 ஆண்டுகள் சென்றுள்ளன.
இந்நிலையில் தற்போதுள்ள 30 வீத வறுமையை இல்லாதொழிக்க மேலும் 65 வருடங்கள் எமக்கு தேவையா? என்பதனை சிந்திக்கவேண்டும். இந்தியாவை சுத்தப்படுத்தல் மகளிருக்கு மலசலகூட வசதிகள் குறித்து அவர் பேசிவருகின்றார். நாட்டின் அனைவரும் வங்கிக் கணக்கை வைத்திருக்கவேண்டும் என்று இந்திய பிரதமர் திட்டம் முன்வைத்துள்ளார்.
இவை அனைத்துக்கும் சமாதானம் என்பது மிக முககியமாகும். முஸ்லிம்களுடன் சண்டை பிடிப்பதா? அல்லது வறுமையை எதிர்த்து சண்டை பிடிப்பதா? என்பதனை இந்துக்கள் தீர்மானிக்கவேண்டும்.
மேலும் இந்துக்களுடன் சண்டை பிடிப்பதா? அல்லது வறுமையை எதிர்த்து போராடுவதா? என்பதனை முஸ்லிம்களும் தீர்மானிக்கவேண்டும் என்று மோடி கூறியுள்ளார்.
இதேவேளை எமது பிராந்தியத்தில் சமாதானமும் நட்பும் அவசியமாகும். அயல் நாடுகளுடனான உறவு மிக முக்கியமானதாகும். இந்திய பிரதமர் ஜப்பானுக்கும் சென்றார். சீனாவுக்கும் சென்றார். எனவே பிராந்திய நலன் முக்கியமாகும்.
இதேவேளை பயங்கரவாதத்தை தவிர ஏனைய அனைத்து முரண்பாடுகளையும் பேசித்தீர்க்க முடியும். ஆனால் பயங்கரவாதத்துக்கு இடமளிக்க முடியாது.
எமது பிராந்திய நாடுகள் எவ்வாறு நவீன நாடுகளாக உருவெடுப்பது என்பது குறித்து சிந்திக்கவேண்டும்.
இதேவேளை நாடுகளுக்கு வீசா வழங்குவது குறித்து இங்கு பேசப்பட்டது. பாதுகாப்புடன் விளையாடவேண்டாம். ஷங்காயில் உற்பத்தி செய்யப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வருவது தளபாடங்களை ஏற்றிக்கொண்டு அல்ல. சந்தை நோக்கத்துடன் நீர்மூழ்கிக் கப்பல் வராது.
யுத்தத்தின்போது இந்தியா இலங்கைக்கு மிகப்பெரிய உதவியை வழங்கியது. அந்த சூழ்நிலையின் தாற்பரியத்தை உணர்ந்து இந்தியா இலங்கைக்கு உதவி செய்தது.
1970களில் நாம் வாழவில்லை. பாதுகாப்புடன் விளையாடவேண்டாம். இந்தியா பிராந்தியத்தில் பெரிய நாடாக இருப்பது இயற்கையாக அமைந்த விடயம். இந்நிலையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் சிறந்த உறவு முக்கியம்.
இலங்கையில் கடந்தவருடம் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டுக்கு முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் வருகை தராமை தவறாகும். ஆனால் தற்போதைய இந்திய பிரதமர் தனது பதவியேற்புக்கு இலங்கை ஜனாதிபதி அழைத்தார். இந்த விடயத்தில் மாநிலத்தின் உணர்வு குறித்து மத்திய அரசாஙகம் கவலையடையவில்லை. மாற்றத்தை புரிந்துகொள்ளுங்கள் என்றார்.