மும்பை: மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்பு விழாவின்போது உரிய அனுமதியின்றி மேடையில் பிரதமர் அருகே அமர்ந்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
மும்பையில் கடந்த மாதம் 31ம் தேதி முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றார்.. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர் அத்வானி மற்றும் பல மாநில பாஜக முதல்வர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது, பிரதமர் அருகே மேடையில் சந்தேகத்துக்கிடமான ஒரு நபர் உரிய அனுமதி இன்றி அமர்ந்திருந்தார்.
விழா நிறைவில் அவர் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பிரதமரின் அருகே அனுமதியின்றி நபர் ஒருவர் அமர்ந்திருந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது அவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
விசாரணையில், அவரது பெயர் மிஸ்ரா (39) என்று தெரியவந்தது. பின்னர், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 11ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
மிஸ்ரா மீது ஐபிசி பிரிவு 170 (பொதுமக்கள் பணியாளருக்கு தொந்தரவு கொடுத்தது) பிரிவு 447 (சட்ட விரோதமாக அனுமதியற்ற இடத்துக்குள் நுழைந்தது) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பை நகர பாஜக நிர்வாகி என்று பொய் சொல்லி, இவர் மேடை ஏறியுள்ளார்.
முன்னதாக விழா நடந்த வான்கடே மைதானத்திற்குள் போலீசார் விட மறுத்தபோது தன்னை அரசு அதிகாரி என்று பொய் சொல்லி உள்ளே வந்துள்ளார். இசெட் பிளஸ் பாதுகாப்பு உள்ள பிரதமர் பங்கேற்ற விழாவில் அவருக்கு அருகே ஒரு நபர் அமர்ந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.