சென்னை: தமிழக முதல்வராக இருந்து 4 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற ஜெ., எம்.எல்.ஏ., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதுடன் , அவர் இன்னும் 10 ஆண்டுகளுக்கு போட்டியிட முடியாது என்று தமிழக அரதழில் வெளியிடப்பட்டது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்றதால் ஜெ., முதல்வர் பதவி, எம்.எல்.ஏ.,பதவி இழந்தார். இது குறித்து தமிழக அரசு அறிவிப்பாணையாக வெளியிடாமல் காலம் தாழ்த்துகிறது.
எனவே அரசிதழில் வெளியிட ஆணையிட வேண்டும் என தி.மு.க,. தரப்பில் கோர்ட்டுக்கு செல்ல ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதனையடுத்து தமிழக அரசு இந்த அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளது.
ஜெ., எம்.எல்.ஏ.,வாக இருந்த ஸ்ரீரங்கம் தொகுதியையும் காலியாக இருக்கிறது என அறிவிக்க வேண்டும் என தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனும் சட்டமன்றச் செயலகத்திடம் கடிதம் கொடுத்தார்.
தமிழக தேர்தல் அதிகாரியாக இருந்த பிரவீன் குமாரும் சட்டசபையில் இருந்து தகவல் வரட்டும் வந்த பின்னர் அறிவிக்கிறேன் என்று தெரிவித்து வந்தார்.
ஊழல் வழக்கில் ஜெ., சிறை : இந் நிலையில் சட்டப்பேரவைத் தலைவர் பி.தனபால், செயலாளர் ஜமாலுதீன் ஆகியோரது உத்தரவு, அரசாணையாக தமிழக அரசிதழில் நேற்று தான் வெளியிடப்பட்டது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது; லஞ்ச ஒழிப்புச் சட்டம் 1988 பிரிவு 13 (2)-ன்படி, ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ள நிலையில், இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 191, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 ஆகியவற்றின் அடிப்படையில் அவர் தகுதியிழப்பு செய்யப்படுகிறார்.
அவருக்கு தண்டனை வழங்கப் பட்ட 2014ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி முதல், தமிழக சட்டப் பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதியிழப்பு ஆகிறார். தண்டனைக்காலம் மற்றும் அதற்குப் பிந்தைய 6 வருடங்களுக்கும் அவர் தகுதியிழப்பு செய்யப்படுகிறார்.
இந்த உத்தரவு அவரது விடுதலை தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்பட்டு மாறுபடும். எனவே, தற்போதைய நிலையில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி முதல் ஸ்ரீரங்கம் எம்எல்ஏ தொகுதி காலியானதாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.