கோத்தபாய ராஜபக்ச, மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உங்களின் தனிப்பட்ட மேற்பார்வையில் பாலச்சந்திரனை சுட்டுக் கொன்று, தடயங்களை அழித்து விடுமாறு உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் நேரடி ஆலோசனைக்கமைய விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகனான பாலச்சந்திரனை இலங்கை இராணுவத்தின் 53வது படைப்பிரிவே சுட்டுக் கொன்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
2009ம் ஆண்டு மே 19ம் திகதி அதிகாலை 7.30 அளவில் பாலச்சந்திரன் பிரபாகரன் உள்ளிட்ட சிலர் நந்திக்கடல் களப்பில் இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளனர்.
இராணுவத்தின் 4வது விஜயபா படைப்பிரிவின் முத்துபண்டாவின் தலைமையில் இருந்த 8 பேர் கொண்ட இராணுவப் படையணியிடம் இவர்கள் சரணடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பாலச்சந்திரன், தலைவர் பிரபகாரனின் மகன் என்பதனால் எதிர்காலத்தில் விடுதலை புலிகளின் தலைவராக வரக்கூடும், சிறுவன் என்பதனால் நீதிமன்றத்தால் தண்டனைகள் கொடுக்கமுடியாத சாத்தியங்கள் இருப்பதாகவும், எனவே சிறுவனை கொன்றுவிடுவதே சரியான முடிவு என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவுக்கு விநாயகமூர்த்தி முரளிதரன் கூறியுள்ளார்.
அதையடுத்து. மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை தொலைபேசியில் தொடர்புகொண்ட கோத்தபாய ராஜபக்ச, உங்களின் தனிப்பட்ட மேற்பார்வையில் பாலச்சந்திரனை சுட்டுக் கொன்று, தடயங்களை அழித்து விடுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
சில மாதங்களுக்கு முன் ”சனல் 4” தொலைக்காட்சியில் பாலச்சந்திரனின் கொலை தொடர்பாக பல தகவல்களை வெளியிடப்பட்டிருந்ததைப் பார்த்த இந்தப் படையணியில் இருந்த இராணுவ அதிகாரியொருவரே மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.