சட்டவிரோதமாக அபகரிக்கப்பட்ட காணிகளின் விபரத்தைத் திரட்டுவதற்காக, வடக்கு மாகாணத்தில், உள்ள காணிகள் தொடர்பான விபரங்களை வடக்கு மாகாணசபை சேகரித்து வருகிறது.
இதன்படி, சிறிலங்கா படையினர் நிலைகொண்டுள்ள தனியார் காணிகள், அரசாங்க காணிகள், பொதுகட்டங்கள் தொடர்பான விபரங்களைச் சமர்ப்பிக்குமாறு, வடக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளிடம் மாகாணசபை கோரியிருக்கிறது.
இதுபற்றிய விபரங்களை சமர்ப்பிக்குமாறு, மாநகர, நகரசபைகளின் முதல்வர்கள், பிரதேசசபைகளின் தலைவர்களிடம் கடிதம் மூலம் கோரப்பட்டுள்ளது.
இதற்கமைய, அரசகாணிகள். தனியார் சொத்துகள். காணிகளின் எல்லை, காணிகளின் உரிமையாளர்கள், பற்றிய தகவல்கள் திரட்டப்படவுள்ளன.
அத்துடன் எவ்வளவு காலமாக சிறிலங்காப் படையினரின் கட்டுப்பாட்டில் காணிகள் உள்ளன என்ற விபரத்தை திரட்டவும் வடக்கு மாகாணசபை உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள் இதுபற்றிய தரவுகளைச் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சிறிலங்கா படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்கக் கோரி வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமையவே இந்தத் தரவுகள் சேகரிப்பு ஆரம்பமாகியுள்ளது.
முன்னாள் போராளி நகுலேஸ்வரன் படுகொலை – மன்னார் ஆயர் கண்டனம்!
14-11-2014
மன்னார், வெள்ளாங்குளம் பகுதியில் முன்னாள் போராளியான, கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசெப் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
“கொடிய போரால் பாதிக்கப்பட்ட வடக்கில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்த ஆயுததாரிகள் முயற்சிப்பதை இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளரான நகுலேஸ்வரன் ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து தமிழ் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்த நாட்டில் இன்று நீதி தோற்றுப் போய்விட்டது.
நீதிக்குப் புறம்பான செயல்கள் தான் தற்போதைய ஆட்சியில் நடைபெறுகின்றன.
இந்நிலையில், ஆயுததாரிகளும் தமது அராஜகங்களை சுதந்திரமாக அரங்கேற்றி வருகின்றனர்.
எனவே, சர்வதேச சமூகம்தான் இந்த அராஜகங்களுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.
தமிழருக்கு நீதியை – விடுதலையைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையும், தமிழீழக் காவல்துறையில் பணியாற்றி, சிறிலங்காப் படையினரிடம் சரணடைந்து புனர்வாழ்வுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டவருமான நகுலேஸ்வரன், நேற்றுமுன்தினம் இரவு தனது வீட்டில் கல் அரிந்து கொண்டிருந்த போது, மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.