திருவனந்தபுரம்: கேரளாவில் பிறந்தநேரம் சரியில்லை என்று மகளைக் கொன்று தந்தையும் தற்கொலை கொண்ட சம்பவம் பெரும் பரப்பினை ஏற்படுத்தியுள்ளது.கேரளா அடிமாலி அருகே வெள்ளத்தூவல் பணிக்கன்குடியை சேர்ந்தவர் ஷாபு. இவருடைய மனைவி மினி. இத்தம்பதியினரின் மகள்கள் அஞ்ஜனி, ஆதிரா. இரண்டாம் குழந்தையான ஆதிரா பிறந்த ஒன்றரை ஆண்டுக்கு பிறகு மினி இறந்து விட்டார்.
இரண்டாவது திருமணம்: ஆகவே சுபா என்பவரை ஷாபு இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். மது போதைக்கு அடிமையான ஷாபு ஆதிரா பிறந்த நேரம் சரியில்லாததால் முதல் மனைவி மினி இறந்து விட்டதாக கூறி வந்தார்.
கொலை செய்வதாக மிரட்டல்: ஆகவே ஆதிராவை துன்புறுத்தி வந்ததுடன் கொலை செய்து விடுவதாக பலமுறை மிரட்டியுள்ளார்.
வீட்டில் தகராறு:இந்நிலையில் பணிக்கன்குடி அரசு மேல் நிலை பள்ளியில் ஒன்பது மற்றும் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் அஞ்ஜனி, ஆதிரா ஆகியோர் நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற போது ஷாபு சுபாவிடம் தகராறு செய்து கொண்டிருந்தார்.
சிக்கிக்கொண்ட ஆதிரா: அப்போது வீட்டிற்குச் சென்ற குழந்தைகள் மீது ஷாபுவின் கோபம் திரும்பியது. மூத்த மகள் அஞ்ஜனியை கொலை செய்ய முயன்றபோது சுபா, அஞ்ஜனி ஆகியோர் ஷாபுவிடம் சிக்காமல் தப்பி ஓடினர். ஆதிரா தந்தையிடம் சிக்கிக்கொண்டார்.
போலீசுக்கு தகவல்: சிறுமியை வீட்டிற்குள் இழுத்துச்சென்று கதவை பூட்டிக்கொண்டார். இதனைக் கண்ட சுபா மற்றும் அஞ்ஜனி ஆகியோர் கூச்சலிட்டனர். சப்தம் கேட்டு திரண்ட அப்பகுதி மக்கள் கதவை தட்டியும் திறக்கவில்லை. வீட்டினுள் எந்த சத்தமும் இல்லை. போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இறந்துபோன தந்தை, மகள்: வெள்ளத்தூவல் போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது இருவரும் தூக்கில் தொங்கியபடி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் ஷாபு இறந்தார். அடிமாலி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஆதிரா இறந்தார்.
தூக்கிலிட்டு தற்கொலை: மகளை தூக்கிலிட்டு கொலை செய்த ஷாபு, தானும் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.