பாங்காக்: தாய்லாந்திலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட விமான பார்சலில் குழந்தைகளின் உடல் பாகங்கள் இருந்தது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து, அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் உள்ள முகவரிக்கு ஒருவர் பார்சல் அனுப்பியுள்ளார். அந்த பார்சல் ஸ்கேன் மூலம் சோதனை செய்யப்பட்டபோது அதில் பதப்படுத்தப்பட்ட குழந்தையின் தலை, பாதங்கள், தோல்கள், பச்சை குத்தப்பட்ட மனிதர்களின் தோல்கள் ஆகியவை இருந்தன.
அனைத்தும் பதப்படுத்துதலுக்கு பயன்படுத்தப்படும் ‘பார்மால்டிஹைடு’ திரவத்தில் வைத்து அடைக்கப்பட்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பார்சல் சர்வீஸ் நிறுவனம் போலீசில் புகார் செய்தது.
அந்த பார்சலை கைப்பற்றிய போலீசார், தடவியல் சோதனைக்கு அனுப்பியுள்ளனர். பார்சலை அனுப்பியவரும் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து தாய்லாந்து போலீஸ் அதிகாரி சாவலிட் கூறுகையில், ‘‘பிரசவத்துக்கு பின் பிறந்த குழந்தைகளின் உடல்களா அல்லது கருவில் இருந்த குழந்தைகளின் உடல்களா என கண்டறிய தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கல்வி ஆராய்ச்சிக்காக இந்த பார்சல் அனுப்பப்பட்டிருக்கலாம். இது குறித்து விசாரணை நடக்கிறது’’ என்றார். கடந்த 2012ம் ஆண்டு தாய்லாந்தை சேர்ந்த இங்கிலாந்து குடிமகன் ஒருவர், கருவில் இருந்த குழந்தைகள் அடங்கிய 6 பார்சலை, தாய்லாந்து கொண்டு வந்துள்ளார்.
அது சற்று கருகிய நிலையில் தங்க நிற தாள்களால் சுற்றப்பட்டிருந்தது. மாந்திரீகம் வேலைக்காக அவர் அதை கொண்டு வந்தது தெரியவந்தது. தாய்லாந்தில் வசிக்கும் சீன சமூகத்தினர் இடையே சில மூடநம்பிக்கைகள் உள்ளன.
பதப்படுத்தப்பட்ட மனித கருக்களை வழிபாட்டு தலங்கள், வீடுகள், தொழில் செய்யும் இடங்களில் வைத்திருந்தால் அதிர்ஷ்டம் என அவர்கள் நம்புகிறார்களாம்.
அதனால் மாந்திரீக வேலைக்காக குழந்தைகளின் உடல்கள் அனுப்பப்பட்டதா என்ற கோணத்திலும் தாய்லாந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.