இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் எதிரணிகளின் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.
இலங்கையின் சுகாதார அமைச்சராக இருந்துவருபவர் மைத்ரிபால சிறிசேன
இதனை கொழும்பில் நடைபெற்ற விடேச செய்தியாளர் மாநாட்டில் அவரே பகிரங்கமாகத் தெரிவித்திருக்கிறார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான அரசாங்கத்தில் சுகாதாரத்துறை அமைச்சராகப் பணியாற்றிய அவர், அரசாங்கத்தின் ஊழல் நடவடிக்கைகள் அதிகாரத் துஷ்பிரயோகம் என்பவற்றினால் வெறுப்படைந்து அரசாங்கத்தில் இருந்து விலகி ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துள்ளார்.
அரசாங்கத்தில் இருந்து விலகி பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு, தான் விருப்பம் தெரிவித்திருந்ததையடுத்து, எதிரணியினர் தன்னை பொது வேட்பாளராகத் தெரிவு செய்திருப்பதாக அவர் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகர மணடபத்தில் நடைபெறும் அவர் கலந்து கொண்ட செய்தியாளர் மாநாடு நேரடியாக தனியார் தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
எதிரணியின் பொது வேட்பாளராக தம்மை நியமித்தமைக்கு நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
குறிப்பாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட கட்சியின் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நகர சபை மண்டபத்தில் இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்ட போதே இவ்வாறு கூறினார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜனநாயக மக்கள் கட்சியின் அர்ஜூன ரணதுங்க மற்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன, துமிந்த திஸாநாக்க உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் பலரும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை 100 நாட்களுக்குள் இல்லாது போகும்!
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை 100 நாட்களுக்குள் இல்லாது செய்வதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
தேர்தல் வெற்றியின் பின்னர் அனைத்து ஊடகவியலாலர்களும், ஊடக நிறுவனங்களும் சுதந்திரமாக செயற்பட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளபப்போவதாகவும் அவர் உறுதியளித்தார்.
மேலும் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதாகவும் 17வது அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தி, 18வது அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தை இரத்து செய்யப்போவதாகவும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.