டோக்கியோ: ஜப்பானில் 4 கணவர்களை கொன்ற 67 வயது பெண் கைது செய்யப்பட்டார். கணவர்களை கொன்றதோடு அவர்களின் சொத்துக்களையும் ஆட்டையை போட்டுள்ளார் அந்தப் பெண். ஜப்பானைச் சேர்ந்த சிஸாகோ ககேஹி, முன்னாள் வங்கி ஊழியர் ஆவார்.
இவருடைய பொழுதுபோக்கே குடும்பத்தினரை விட்டுத் தனியாகப் பிரிந்து வாழும், ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்ட வயதான ஆண்களை மணமுடிப்பது தான். அவ்வாறு மணமுடித்து சில மாதங்களில் தன் கணவரை கொன்றுவிடுவார்.
பின்னர் அந்தக் கொலையை இயற்கையான மரணத்தைப் போல் சித்தரித்து விடுவார். பின்னர், தன் கணவரின் ஆயுள் காப்பீட்டுத் தொகை மற்றும் இதர முதலீடுகள், சொத்துகள் எல்லாம் தன் கைக்கு வந்தவுடன் வேறு ஓர் ஆண் துணையைத் தேடிச் செல்வார்.
அவர் இதுவரை 6 ஆண்களுடன் நட்பு கொண்டிருந்ததாக தெரிகிறது. 2012-ம் ஆண்டில் காகேஹியுடன் கொஞ்சக் காலம் வாழ்ந்த பின்னர் உயிரிழந்த இஸாவோவின் உடலில் சயினைட் கலந்திருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.
இவர் அந்தப்பெண்ணின் நான்காவது கணவராவார். காகேஹியை திருமணம் புரிந்தவர்கள், சேர்ந்துவாழ்ந்தவர்கள் என மேலும் நான்கு ஆண்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இவ்வாறு உயிரிழந்தவர்களிடமிருந்து சுமார் எட்டு லட்சம் டாலர்கள் பெறுமதியான சொத்துக்களை இந்தப் பெண் சொத்துரிமை அடிப்படையில் பெற்றுள்ளார். இதுதொடர்பாக போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து ககேஹியிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
அப்போது, ககேஹி தனது கணவருக்கு சயனைட் வைத்து கொன்றது தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அவரின் இதர ஆண் நண்பர்களின் கதி என்ன என்பது குறித்து தற்போது போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
எனினும் தனது கணவன்மாரையும் சேர்ந்துவாழ்ந்தவர்களையும் கொலைசெய்தக் குற்றச்சாட்டை சிஸாகோ காகேஹி மறுத்துள்ளார்.