இலங்கை அரசாங்கத்தின் 2015-ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் 95 பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது.
152 பேர் பட்ஜெட்டுக்கு ஆதரவாகவும், 57 பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.
அரசாங்கத் தரப்பிலிருந்து மைத்திரிபால சிறிசேன, ராஜித சேனாரத்ன உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் வெளியேறியிருந்த நிலையில், இந்த பட்ஜெட் மீதான இறுதி வாக்கெடுப்பு பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
2015 ஆம் நிதி ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டப் பிரேரணைக்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கின்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஸ்ரீமுஸ்லிம் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய சுதந்திர முன்னணி, ஈ.பி.டி.பி., மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் காங்கிரஸ் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கம் ஆகியவற்றின் உறுப்பினர்கள் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்தனர்.
ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்து போட்டியிடுவதற்காக அரசாங்கத்திலிருந்து வெளியேறியிருந்த மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்கெடுப்பின்போது சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிவினையை ஏற்படுத்த முடியுமென்ற புலிகளின் கனவு ஒருபோதும் நிறைவேறப்போவதில்லை : சஜித்
25-14-2014
எதிரணியின் புதிய ஆட்சியில் சர்வதேச ரீதியில் எஞ்சியுள்ள விடுதலைப் புலிகள் முழுமையாக ஒழிக்கப்படுவார்கள்.
எனவே, இலங்கையில் பிரிவினையை ஏற்படுத்த முடியுமென்ற புலிகளின் கனவு ஒரு போதும் நிறைவேறப் போவதில்லையென்பதை ஐ.தே. கட்சியின் பிரதித் தலைவராக உறுதியளிக்கின்றேன் என சஜித் பிரேமதாஸ எம்.பி. நேற்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற வரவு செலவு திட்டம் மீதான நிதியமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே சஜித் பிரேமதாஸ எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் வெற்றி நிச்சயிக்கப்பட்டது. அவ்வாறு வெற்றி பெற்றதன் பின்னர் நாட்டையோ அரசாங்கத்தையோ நிர்வகித்த தலைவர்களையோ அல்லது படையினரையோ ஒரு போதும் காட்டிக் கொடுக்கமாட்டோம்.
எதிரணி வெற்றி பெற்றவுடன் மீண்டும் சதி செய்து தனிநாட்டை உருவாக்கிக்கொள்ள முடியுமென்ற சர்வதேச புலிகள் கனவு காண்பார்களாயின் அது ஒரு போதும் நிறைவேறாது.
அது மட்டுமல்ல எதிரணி ஆட்சியில் சர்வதேச ரீதியில் எஞ்சியுள்ள விடுதலைப் புலிகளை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி வெற்றி பெற்றால் அது தலைவர் மற்றும் படையினர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்லப்படுவார்கள் என்ற பிரசாரம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நடைபெறவிருப்பது தேசிய தேர்தலொன்றே தவிர சர்வதேச தேர்தலொன்றல்ல. அதற்கும் சர்வதேச நீதிமன்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.
ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி நிச்சயம் வெற்றி பெறும். அப்படி வெற்றி பெறும் போது நாட்டையோ அரசை நிர்வகித்த தலைவர்களையோ அல்லது படையினரையோ நாம் ஒரு போதும் காட்டிக் கொடுக்கமாட்டோம்.
நாட்டை விற்கும் கூட்டம் நாங்கள் அல்ல எதிர்க்கட்சியினர் வெற்றி பெறுவதானால் அரச தலைவர்களை படையினரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வோம் என்ற கனவை சர்வதேச புலிகள் காணலாம்.
நாம் ஒரு போதும் நாட்டை காட்டிக் கொடுக்க மாட்டோம். அரச மற்றும் தேசிய தலைவர்களை காட்டிக் கொடுக்கமாட்டோம்.
எதிரணியின் பிரதான கட்சியான ஐ.தே. கட்சியின் பிரதித்தலைவர் என்ற ரீதியில் இதை நான் உறுதிபட தெரிவித்து கொள்கிறேன் என்றார்.