இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில், தனது விநியோகப் பாதையின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக இலங்கை உள்ளிட்ட 18 நாடுகளில் சீனா கடற்படைத் தளங்களை அமைக்கவுள்ளதாக ‘தி நமீபியன்’என்ற, நமீபிய நாட்டு நாளிதழ் வெளியிட்ட செய்தி கடந்தவாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அந்தச் செய்தியில், ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் சீனா தளம் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் ஊடகங்களில் பரபரப்பான செய்தியாக உலா வந்த அதேவேளை, பாராளுமன்றத்திலும் எதிர்க்கட்சி கேள்வி எழுப்பும் நிலைக்கு கொண்டு சென்றது.
அண்மையில் தான் இரண்டு தடவைகள் சீனக் கடற்படையின் இரண்டு நீர்மூழ்கிகள், கொழும்புத் துறைமுகத்துக்கு வந்து சென்றிருந்தன. அவற்றின் வருகை குறித்து இந்தியா கவலையும், கரிசனையும் கொண்டுள்ள சூழலில், இலங்கை உள்ளிட்ட 18 நாடுகளில் சீனா கடற்படைத் தளங்களை அமைக்கவுள்ளன என்ற செய்தி, இந்தியாவின் புருவங்களை உயர்த்த வைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இலங்கையில் சீனா உள்ளிட்ட எந்தவொரு நாடுமே தமது தளத்தை அமைப்பதற்கு இந்தியா இடமளிக்காது. ஏனென்றால், அது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியது.
ஏற்கனவே, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், இலங்கையில் உள்ள துறைமுகங்களை எந்தவொரு நாட்டுக்கும் இராணுவ நோக்கங்களுக்காக இலங்கை வழங்காது என்று உறுதியளிக்கும் கடிதம் ஒன்றை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன இந்தியாவிடம் கொடுத்திருக்கிறார்.
அதை மீறி சீனாவுக்கு தளம் அமைப்பதற்காக அம்பாந்தோட்டைத் துறைமுகத்தையோ வேறு எந்த இடத்தையோ இலங்கை கொடுக்க முனைந்தால், அதனை இந்தியா பார்த்துக் கொண்டிருக்காது.
சீனக்குடாவில், விமானப் பராமரிப்பு நிலையத்தை அமைப்பதற்கு அரசாங்கம் அனுமதி கொடுத்திருந்த போதிலும், இந்தியா தெரிவித்த எதிர்ப்பினால், அந்த திட்டம் இன்னமும் இழுபறியாகவே இருக்கிறது.
எனவே, ஹம்பாந்தோட்டையில் சீனா கடற்படைத் தளம் ஒன்றை அமைப்பது என்பது அவ்வளவு இலகுவாக நடக்கக் கூடிய காரியமன்று.
இதுபற்றிய பாதுகாப்பு அமைச்சின் ஊடக நிலையப் பணிப்பாளரும் இராணுவப் பேச்சாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரியவிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, அப்படியான எந்த திட்டமும் இல்லை என்றார்.
ஹம்பாந்தோட்டையில் இரகசியமாக சீனக் கடற்படைத் தளத்தை அமைக்க முடியாது. வேண்டுமானால், அங்கு சென்று பார்த்துக் கொள்ளலாம் என்றும் அவர் கூறியிருந்தார். எனினும், பாராளுமன்றத்தில், ஐ.தே.க. உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இதுபற்றி வினவியிருந்தார்.
ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் இரண்டாவது கட்டமாக அமைக்கப்படவுள்ள 7 இறங்குதுறைகளில் 4 இறங்குதுறைகள் சீனாவிடம் கையளிக்கப்படுவதற்கு இணங்கியுள்ளது குறித்து அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும், சீன அதிபர் ஜி ஜின்பிங் கொழும்பு வந்திருந்த போது கையெழுத்திடப்பட்ட ஆவணம் குறித்து விளக்கமளிக்குமாறும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
சீன ஊடகம் ஒன்றை மேற்கோள்காட்டி ‘தி நமீபியன்’ நாளிதழ் வெளியிட்ட தகவல் முற்றாகவே புறக்கணிக்கத்தக்கதொன்று அல்ல. அதற்காக இப்போது ஹம்பாந்தோட்டையில் சீனா கடற்படைத் தளத்தை அமைத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுவதும் உண்மையல்ல.
நமீபிய நாளிதழ், கூட இலங்கையில் சீனா தளத்தை அமைத்துவிட்டதாகக் குறிப்பிடவில்லை.
இந்த விவகாரத்தில் நமீபிய நாளிதழ், கவனம் செலுத்தியதற்கு காரணம், சீனா அமைக்கப் போவதாக கூறப்பட்ட 18 கடற்படைத் தளங்களில் ஒன்று அந்த நாட்டிலும் அமையவுள்ளதுதான்.
நமீபியாவின் வல்விஸ் குடாவில் தான் அந்த தளம் அமையவுள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி உயர்மட்டக் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதை நமீபிய பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் லெப்.கேர்ணல் மோனிகா ஷேயா உறுதிப்படுத்தியிருக்கிறார்.
இந்தப் பேச்சுக்களில் இணக்கப்பாடு காணப்பட்டதும், அதுபற்றி நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்படுமென்றும் அவர் கூறியிருக்கிறார். இதனைச் சொல்ல வந்த போதுதான், நமீபிய நாளிதழ், இலங்கை உள்ளிட்ட 18 நாடுகளில், அடுத்த 10 ஆண்டுகளில் சீனா தளங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தது.
ஆனால், தம்மிடம் அத்தகைய திட்டம் ஏதும் இருப்பதாக எந்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் சீனா வெளியிடவில்லை.
கடந்த ஆண்டு ஜனவரி 4ஆம் திகதி, சீன அரசின் கட்டுப்பாட்டிலுள்ள சின்ஹுவா செய்தி நிறுவனத்தினால் வெளியிடப்படும், “International Herald Leader”, நாளிதழில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது.
அதில், சீனா தனது, எரிபொருள் மற்றும் பொருள் விநியோகப் பாதைகளின் பாதுகாப்புக்காக வெளிநாடுகளில் கடற்படைத் தளங்களை அமைக்க வேண்டும் என்று யோசனை கூறப்பட்டிருந்தது.
அதில் தான், சீனா அமைக்க வேண்டிய 18 கடற்படைத் தளங்கள் பற்றிய விபரங்கள் பட்டியலிடப்பட்டிருந்தன.
அதனை அடிப்படையாக வைத்துத் தான், தி நமீபியன் நாளிதழ், தமது நாட்டில் சீனக் கடற்படைத் தளம் அமையவுள்ளதைச் சுட்டிக்காட்டி செய்தியை வெளியிட்டிருந்தது.
சீன அரசு நாளிதழ் வெளியிட்ட கட்டுரையின்படி, வடகொரியாவின் சொங்ஜின் துறைமுகம், பபுவா நியூகினியாவின் மொரெஸ்பி துறைமுகம், கம்போடியாவின் சிஹானுக்வில்லி துறைமுகம், தாய்லாந்தின் கோலன்ரா துறைமுகம், மியான்மாரின் சிட்வே துறைமுகம், பங்களாதேஷின் டாக்கா துறைமுகம், பாகிஸ்தானின் குவதார் துறைமுகம்,
இலங்கையின் ஹம்பாந்தோட்டைத் துறைமுகம், மாலைதீவு, செஷெல்ஸ், டிஜிபோட்டியின் டிஜிபோட்டி துறைமுகம், நைஜீரியாவின் லாகோஸ் துறைமுகம். கென்யாவின் மொம்பாசா துறைமுகம், தன்சானியாவின் தர் இஸ் ஸலாம் துறைமுகம், அங்கோலாவின் லுவாண்டா துறைமுகம் ஆகியனவே சீனா தளங்களை அமைக்க வேண்டிய இடங்களாக பரிந்துரைக்கப்பட்டிருந்தன.
எதற்காக இங்கெல்லாம் தளங்களை அமைக்க வேண்டும் என்பதற்கான விபரங்களும் அதில் கொடுக்கப்பட்டிருந்தன. சீனா பலமான கடற்படை ஒன்றை உருவாக்குவதன் மூலம், தனது எரிபொருள் விநியோகப் பாதையை, குறிப்பாக மலாக்கா நீரிணையை பாதுகாக்க முடியுமென்று நம்புகிறது.
அமெரிக்காவே உலகில் அதிகளவு படைகளை வெளிநாட்டில் நிறுத்தியிருக்கும் நாடாகும். உலகெங்கும் சுமார் 150 நாடுகளில் அமெரிக்கா தனது தளங்களை அமைத்துள்ளது.
அமெரிக்கா தனது நாட்டுக்கு வெளியே 16,000 படையினரை நிறுத்தி வைத்திருக்கிறது.அதன் மூலம் தான் உலக வல்லரசாகத்திகழ்கிறது அமெரிக்கா.
அமெரிக்காவுக்கு இணையாக வளர முற்படும் சீனாவுக்கும் இப்போது அதே ஆசை வந்திருக்கிறது. ஆனால், சீனக் கடற்படை வலுவானதாக இருந்தாலும், அதனை முழுமையான நீலக் கடல் கடற்படை (Blue Water Navy) என்று கூறமுடியாது.
காரணம், சீனாவுக்கு வெளிநாடுகளில் எங்கும் தளங்கள் கிடையாது.
எனவே, அந்த ஆற்றலைப் பெறமுடியாத நிலையில் இருக்கிறது.
அந்த நிலையை மாற்றி, கடல் வழி விநியோகப் பாதைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முனைகிறது சீனா.
அமெரிக்கா போன்று வெளிநாடுகளில் நிரந்தரமான தளங்களை அமைக்காவிட்டாலும், தனது வசதிக்கேற்றவாறு தளங்கள் அல்லது கட்டமைப்புகளை உருவாக்க சீனா எத்தனிக்கிறது.
அதற்காகவே அண்மைக்காலமாக விமானம் தாங்கி கப்பல்கள், நீர்மூழ்கிகள், போர்க்கப்பல்களை அதிகளவில் வலுப்படுத்தி வருகிறது.
அமெரிக்கா போன்று சீனா தளங்களைக் கொண்டிருக்காது போனாலும், சர்வதேச சட்டங்களுக்கு அமைய வெளிநாட்டு மூலோபாய ஆதரவுத் தளங்களைக் கொண்டிருப்பதை இனியும் தவிர்க்க முடியாது என்று சீன அரசு நாளிதழ் குறிப்பிட்டிருந்தது கவனிக்கத்தக்க விடயம்.
பரஸ்பரம் நன்மையளிக்கத்தக்க, நட்புரீதியாக, விநியோகத் தேவைக்கும், அதிகாரிகள் ஓய்வெடுக்கவும், பராமரிப்புக்காக தரித்து நிற்பதற்கும் எரிபொருள் நிரப்புவதற்கும், வெளிநாடுகளில் தளங்களை அமைக்கும் உரிமை சீனாவுக்கு உள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முதல் தொகுதி ஆதரவுத் தளங்களை இந்தியப் பெருங்கடலில் சீனா அமைக்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த தளங்களை மூன்று வகையாகப் பிரிக்கப்படலாம் என்றும் அதில் யோசனை கூறப்பட்டுள்ளது.
முதலாவது– அமைதிக்காலத்தில் கப்பல்களுக்கு எரிபொருளையும், பொருட்களையும் வழங்கும் தளங்கள்.
உதாரணமாக, டிஜிபோட்டி துறைமுகம், யேமெனில் உள்ள ஏடன் துறைமுகம், ஓமானில் உள்ள சலாலா துறைமுகம் போன்றவையாகும்.
இரண்டாவது- நிரந்தரமான விநியோக தளங்கள். இவை போர்க்கப்பல்கள் தரித்து நிற்கவும், வேவு விமானங்கள், கடற்படை அதிகாரிகள் கரையில் ஓய்வெடுக்கவும், உதவக் கூடியவை. சிஷெல்ஸ் துறைமுகம் இதற்கு உதாரணம்.
மூன்றாவது- முழுமையாகச் செயற்படும் தளங்கள்.
இவற்றில் பாரிய போர்க்கப்பல் ஆயுதங்கள் தரிக்கவும், ஓய்வெடுக்கவும், வசதிகள் இருக்கும். பாகிஸ்தான் இதற்கு உதாரணம். அடுத்த 10 ஆண்டுகளுக்குள், மூன்று விநியோகப் பாதைகளை அடிப்படையாக வைத்து சீனா தளங்களை அமைக்க வேண்டும் என்றும் அந்த சீன இதழில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முதலாவது பாதை– இந்தியப் பெருங்கடலின் வடக்கில் உள்ள பாகிஸ்தான், இலங்கை, மியான்மார் ஆகிய தளங்களை இணைத்து உருவாக்கப்படும்.
இரண்டாவது -பாதை இந்தியப் பெருங்டகலின் மேற்கே, உள்ள விநியோக வழி.
டிஜிபோட்டி, யேமென், ஓமான், கென்யா, தன்சானியா, மொசாம்பிக் ஆகிய நாடுகளில் தளங்களை அமைத்து இதனைப் பாதுகாக்க வேண்டும்.
மூன்றாவது வழி– மத்திய தெற்கு இந்தியப் பெருங்கடல் வழி.
செஷெல்ஸ், மடகஸ்காரில் தளங்களை அமைத்து இதனைப் பாதுகாக் வேண்டும் என்று சீன அரசு நாளிதழ் ஆலோசனைகளை வழங்கியிருந்தது.
இந்த ஆலோசனைகளைச் சுட்டிக்காட்டிய கட்டுரைக்கும், சீன அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறமுடியாது. ஏனென்றால், சீனாவில் அரசின் எண்ணங்களையே அந்த நாட்டு ஊடகங்கள் பிரதிபலிக்கின்றன.
அத்துடன், இந்த திட்டத்தை சீனா ஏதோ ஒரு வகையில் செயற்படுத்த ஆரம்பித்துள்ளது என்பதற்கு நமீபியா ஓர் உதாரணம்.
நமீபியாவின் வல்விஸ் குடாவில் தளத்தை அமைக்க சீனா பேச்சுக்களை நடத்தி வருகிறது என்பதை அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
எனவே, அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் 18 நாடுகளில் தளங்களை அமைத்து இந்தியப் பெருங்கடலில் மூன்று விநியோக வழிகளையும் பாதுகாக்க வேண்டும் என்ற சீன நாளிதழின் கருத்தை சாதாரணமாக எடை போடவோ, உதாசீனம் செய்யவோ முடியாது.
அதேவேளை, பிரிகேடியர் ருவன் வணிகசூரிய அம்பாந்தோட்டையில் சீனக் கடற்படைத தளம் அமைக்கப்படுகிறதா என்று யாரும் சென்று பார்வையிடலாம் என்று கூறியிருந்தார்.
ஆனால், சீனாவின் திட்டம் அவ்வாறானதல்ல.
தனது படையினரை நிரந்தரமாக நிறுத்தி வைப்பதற்கான தளங்களை மட்டும் அமைக்க சீனா திட்டமிடவில்லை.
விநியோகத் தேவைகளுக்கு அவ்வப்போது பயன்படுத்தும் வகையில் தளங்களை உருவாக்கவும் எத்தனிக்கிறது சீனா.
கொழும்புத் துறைமுகத்தில் சீனா அமைத்துக் கொடுத்த கொள்கலன் முனையம் தான் இப்போது சீன நீர்மூழ்கிகள், போர்க்கப்பல்கள் ஓய்வெடுக்க பயன்படுத்தப்படுகின்றன.
அதுபோலவே அம்பாந்தோட்டைத் துறைமுகமும் எதிர்காலத்தில் சீனக் கடற்படையால் பயன்படுத்தப்படலாம்.
ஏனென்றால், அங்கு அமைக்கப்படவுள்ள நான்கு இறங்குதுறைகளின் கட்டுப்பாடு சீனாவின் வசம் தான் இருக்கப் போகிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில் தனது தளங்களை வெளிப்படையாக- படைகளைக் குவித்து வைத்து பாதுகாக்கிறது.
ஆனால், சீனா அவ்வாறு செய்யவில்லை.
இரகசியமாக, நிதியுதவிகளைக் கொட்டி துறைமுகங்களை உருவாக்கி அவற்றின் கட்டுப்பாட்டை பேண முனைகிறது.
இது இந்தியாவுக்குச் சவாலான விடயமாகவே இருக்கும். அம்பாந்தோட்டைத் துறைமுகமும் சீனாவின் அத்தகையதொரு இரகசியத் தளமாக பேணப்படலாம்.
ஆனால் இந்தியா அதற்கு அவ்வளவு இலகுவாக அனுமதிக்காது.
Hambantota Port
இப்போது இல்லாவிட்டாலும், எதிர்ப்புத் தெரிவிக்காது போனாலும், அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா எப்போது தனது கட்டுக்குள் கொண்டு வர முனைகிறதோ, அப்போது இந்தியா அதற்கெதிராக போர்க் கொடி உயர்த்தும் என்பதில் சந்தேக மில்லை.
– ஹரிகரன்-