ரஜினிகாந்தின் ‘அரசியல் பிரவேசம்’ என்பது ஒரு புதிராகவே இருந்து வருகிறது. சில நேரங்களில் அரசியலுக்கு வருவது போன்று பேசுகிறார். பின்பு அரசியலில் ஈடுபாடு இல்லை என்கிறார்.
ஆனால் அவ்வப்போது எதையாவது பரபரப்பான கருத்துக்களைத் தெரிவித்து அவரது ரசிகர்களையும் தமிழக மக்களையும் குழப்பி விடுகிறார். இது இன்று நேற்றல்ல நீண்ட காலமாகவே இடம்பெற்று வருகிறது.
இந்தியாவின் கோவாவில் கடந்த 20 ஆம் திகதி 45 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா ஆரம்பமானது. இதில் கலந்து கொள்வதற்காக தனது மனைவி லதாவுடன் சென்ற ரஜினி கோவாவின் பனாஜி விமான நிலையத்தில் சென்று இறங்கிய போது அவரைத் தனியார் தொலைக்காட்சி ஒன்று பேட்டி கண்டது.
அப்போது தொலைக்காட்சி நிருபரின் கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த் ‘நான் இப்போதைக்கு அரசியலில் ஈடுபடமாட்டேன் என்று தெரிவித்திருந்தார். அத்துடன் அரசியல் பற்றி மேலும் பேசுவதற்கு விரும்பவில்லை’ என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் அவர் அரசியலில் இறங்குவதற்கு விருப்பமில்லாதவரைப் போலவே காணப்படுகிறார்.
இதேவேளை, கடந்த 16 ஆம் திகதி சென்னையில் இடம்பெற்ற ‘லிங்கா‘ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர் ‘அரசியல்பற்றி எனக்கு கொஞ்சம் தெரியும்.
அதன் ஆழம் ஆபத்து பற்றியும் தெரியும். யார் யாரின் தோளை மிதித்து அங்கு செல்ல வேண்டும் எனவும் தெரியும். இத்தனை பாடுபட்டு அரசியலுக்குச் சென்றால் அங்கு நினைத்ததை எல்லாம் செய்ய முடியுமா என்று சந்தேகமாக இருக்கிறது.
அரசியலை நினைத்து பயப்படவில்லை. அதன் ஆழத்தை நினைத்தே பயந்து கொண்டிருக்கிறேன். அரசியலைப் பற்றி நான் பேசவில்லையென்றால் திமிர் என்றாகி விடும். எதுவாக இருந்தாலும் சரி அதை கடவுள்தான் முடிவு செய்வார்’ என்று பிடிகொடுக்காமல் பேசியிருக்கிறார்.
அரசியலில் இறங்க ஆர்வமாக இருப்பது போல பேசினாலும் பின்னர் தயக்கமாக இருப்பதாக கூறுகிறார். இதனால் ரஜினியை அரசியலுக்கு இழுக்க வேண்டுமென்று முயற்சிப்பவர்களுக்கும் அவரது ரசிகர்களுக்கும் குழப்பத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
அரசியலுக்கு வருவதா? இல்லையா? என்பது பற்றி ஒரு உறுதியான தெளிவான பதிலை இதுவரை ரஜினிகாந்த் தெரிவிக்கவில்லை என்பது புதிராக உள்ளது. இது கடந்த 15 வருடங்களாகவே தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.
காங்கிரஸிலிருந்து கருப்பையா மூப்பனார் விலகி தமிழ் மாநில காங்கிரஸை ஆரம்பித்தார். அப்போது அவர் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டார். அந்தக் கூட்டணிக்கு ஆதரவாக அப்போது ரஜினிகாந்த் பேசினார். அந்தத் தேர்தலில் அந்தக் கூட்டணி பெரும் வெற்றி பெற்றது.
இப்போதும் கூட காங்கிரஸிலிருந்து வெளியேறி தனிக்கட்சி அமைத்துள்ள முன்னாள் மத்திய அமைச்சரும் மறைந்த கருப்பையா மூப்பனாரின் மகனுமான ஜி.கே. வாசன் அந்த தேர்தலை கணக்கில் வைத்தே தமது புதிய கட்சிக்கு ஆதரவு வழங்குமாறு ரஜினியிடம் கோரிக்கை விடுத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனினும் ரஜினிகாந்த் நடித்த ‘பாபா’ திரைப்படம் தொடர்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் ராமதாஸுக்கும் ரஜினிக்கும் இடையில் எழுந்த பிரச்சினையைத் தொடர்ந்து அப்போதைய காலப்பகுதியில் இடம்பெற்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சிக்கு (பா.ஜ.க.) வாக்களிக்கும்படி ரஜினி தமிழக மக்களை கேட்டுக்கொண்டிருந்தார்.
ஆனால், தமிழக மக்கள் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை. ரஜினியின் வேண்டுகோள் எடுபடாமல் போனமை குறிப்பிடத்தக்கது.
கடந்த லோக்சபா (பாராளுமன்ற) தேர்தலிலும் கூட பா.ஜ.க. ரஜினியின் ஆதரவை நாடியது. பா.ஜ.க. சார்பில் பிரதமர் வேட்பாளராக போட்டியிட்ட தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி ரஜினிகாந்தின் வீடு தேடிச்சென்று அவரது ஆதரவைக் கோரியிருந்தார்.
தேர்தலில் அகில இந்திய அளவில் பா.ஜ.க. வெற்றி பெற்றாலும் தமிழகத்தைப் பொறுத்தளவில் பா.ஜ.க. பெறுந்தோல்வியடைந்தது. இதில் அ.தி.மு.க பெரும் வெற்றியீட்டியது.
இது பா.ஜ.க தலைவர்கள் மத்தியில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியது. எனவே, தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை ஒழிப்பதுடன் பா.ஜ.க. வின் ஆட்சியை ஏற்படுத்த வேண்டுமென்று உறுதி கொண்டது.
அதன் அடிப்படையிலேயே ரஜினியை பா.ஜ.க. வில் இணைத்துக்கொள்வதற்கு பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோர் தொலைபேசியில் ரஜினிகாந்துடன் பேசியதாக தகவல்கள் வெளியாகின. மட்டுமன்றி கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மற்றும் ஈஸ்வரப்பாவும் ரஜினியை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பா.ஜ.க. தமிழக மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சௌந்தராஜனும் கூட ரஜினியின் வீட்டுக்கு சென்றார். தொடர்ந்தும் ரஜினியை கட்சிக்குள் இணைத்து கொள்ள முயற்சி செய்து வந்தார்.
பா.ஜ.க. வுக்குள் ரஜினியை வளைத்துப் போட்டு 2016 இல் நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தின் ஆட்சியைப் பிடிப்பதே பா.ஜ.க. வின் திட்டமாக இருக்கிறது.
எனினும் பா.ஜ.க. வில் சேர்ந்து கொள்வது பற்றி ரஜினி இதுவரை எந்தவித கருத்தையும் வெளியிடவில்லை. எனினும் லிங்கா படப்பிடிப்பு முடிந்தவுடன் தமது முடிவை தெரிவிப்பதாக கூறி வந்தார்.
ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று திரும்பிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து ரஜினி அறிக்கை விட்டதால் பா.ஜ.க. தரப்பு பின்வாங்கிக் கொண்டது. ‘சீச்சீ இந்தப்பழம் புளிக்கும்’ என்ற கதையாகிப்போனது.
எந்தவொரு கட்சியினரையும் ரஜினிகாந்த் பகைத்துக்கொள்ளாதவராகவே காணப்படுகிறார். தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் நெருங்கிய நட்பினைக் கொண்டிருக்கிறார். அது போலவே விஜயகாந்த், வைகோ, காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட அனைவருடனும் சுமுகமான உறவைக் கொண்டிருக்கிறார்.
ஒவ்வொரு கட்சியினரும் ரஜினியின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதில் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி. கே.எஸ். இளங்கோவன் அரசியலுக்கு ரஜினி வரக்கூடாது என்கிறார்.
அதேவேளை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தமது கட்சிக்கு ஆதரவு வழங்க வேண்டுமெனக் கூறுகிறார். அதேவேளை பா.ம.க. நிறுவுனர் ராமதாஸ் அரசியலில் ஈடுபட ரஜினிக்கு உரிமை இருக்கிறது. அவர் அரசியலில் ஈடுபடலாம் என்கிறார். தமிழக தலைவர்கள் சிலரும் கூட சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு பேசுகின்றனர்.
இந்த நிலையில் கோவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 45 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு சிறந்த திரையுலக பிரமுகருக்கான ‘இந்திய சினிமா நூற்றாண்டு விருது’ வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். இந்த விருதினைப் பெறுவதற்கு அனைத்து வகையிலும் ரஜினிகாந்த் தகுதியுடையவர் என்பதுடன் அவரால் தமிழக திரையுலகுக்கு பெருமை சேர்கிறது.
இதுவும் கூட ரஜினியை தன்பக்கம் இழுப்பதற்கு பா.ஜ.க. செய்த ஒரு தந்திரம் எனப் பேசப்படுகிறது.
எவ்வாறாயினும் அரசியலுக்கு வருவதில் தனக்கு இஷ்டமில்லை என்று ரஜினி கூறியிருப்பது அவரை தத்தமது கட்சிக்குள் வளைத்துப்போட முயன்ற தலைவர்களுக்கும் ரஜினியின் ரசிகர்களுக்கும் பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது என்றே எண்ணத்தோன்றுகிறது.
எவ்வாறாயினும் அவர் தமது எண்ணத்தை மாற்றிக்கொண்டு எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடலாம் என்றதொரு கருத்தும் நிலவுகிறது. தான் அரசியலில் ஈடுபடுவது பற்றி ‘காலமும் கடவுளும் தான் தீர்மானிக்க வேண்டும்’ என்ற வசனத்தையும் அவர் அடிக்கடி பயன்படுத்தி வருகிறார். எனவே, காலம் கைகூடினால் அவர் அரசியலில் ஈடுபடலாம்.
பல்வேறு கட்சிகள் அவரை இணைத்துக்கொள்ள முயற்சி செய்தாலும் ரஜினிகாந்தின் ரசிகர்களின் விருப்பம் வேறாக இருக்கிறது. அதாவது தற்போதுள்ள எந்தக் கட்சியிலும் சேரக்கூடாது. புதிதாக கட்சி ஆரம்பித்து அதன் மூலம் தமிழக ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதே அந்த விருப்பம்.
காலம் பதில் சொல்கின்றபோது ரஜினிகாந்த் புதிய கட்சி ஆரம்பிப்பாரா? அல்லது ஏதாவது ஒரு கட்சியுடன் இணைந்து செயற்படுவாரா? அவரது ஸ்டைலில் சொல்ல வேண்டுமானால் ‘காலந்தான் பதில் சொல்ல வேண்டும்’.
நல்லதம்பி நெடுஞ்செழியன்