மகிந்த ராஜபக்சவைத் தோற்கடிப்போம் என்று சூளுரைத்துள்ள எதிரணித் தலைவர்களான சம்பிக்க ரணவக்க, சஜித் பிறேமதாச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் நேற்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தாபய ராஜபக்சவை சந்தித்துப் பேசியுள்ளனர்.
இந்தச் சந்திப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ரிரான் அலசின் இல்லத்தில் நேற்றுக்காலை இடம்பெற்றுள்ளது.
ரிரான் அலசின் தந்தையும், கொழும்பு டி.எஸ்.சேனநாயக்க கல்லூரியின் நிறுவுனருமான ரிட் அலசின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்விலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
சிறிலங்கா அரசியலில், எதிரணிக்கும், ஆளும்கட்சிக்கும் இடையே அரசியல் பேரங்களை நடத்துவதில், ரிரான் அலஸ் முக்கிய பங்காற்றி வருகிறார்.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக, போர்க்கொடி உயர்த்திய பலரை அரசதரப்புடன் சந்திக்க வைத்து, இணக்கம் காண வைத்தவர்.
அவரது ஏற்பாட்டில் நடந்த நிகழ்வில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன், சஜித் பிறேமதாச, சம்பிக்க ரணவக்க, உதய கம்மன்பில ஆகியோர் பங்கேற்றது எதிரணி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சந்திப்புத் தொடர்பான படங்கள் சிறிலங்கா அதிபரின் அதிகாரபூர்வ ஒளிப்படப் பிடிப்பாளரால், வெளியே கசியவிடப்பட்டுள்ளதும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.