கடந்த பல மாதங்களாகவே வரப்போகிறது, வரப்போகிறது என்று கூறப்பட்டு வந்த ஜனாதிபதித் தேர்தல், இப்போது வந்தே விட்டது. தேர்தலுக்கான அறிவிப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ வெளியிட, ஜனவரி 8ஆம் திகதி தேர்தல் இடம்பெறும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்து விட்டார்.
அரசாங்கம் தனது தரப்பில் தேர்தலை எதிர்கொள்வதற்குரிய எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்து விட்டே தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது.
எதிர்க்கட்சிகள் தேர்தலுக்குத் தயாராவதற்குள் தாம் சில அடிகளாவது முன்நோக்கிப் பாய்ந்து விட வேண்டும் என்ற அவசரம் அரசாங்கத்திடம் இருந்தது.
அண்மைக் காலங்களில் ஆளும்கட்சியின் செல்வாக்கு வீழ்ச்சி கண்டிருந்தாலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை எதிர்த்து நிற்கும் வலுவான வேட்பாளர் ஒருவரை எதிரணியினால் நிறுத்த முடியாது என்றே அரசாங்கம் கருதியிருந்தது.
பொதுவேட்பாளராக பெண் ஒருவரே போட்டியிடப் போவதாக முதலில் வதந்திகள் பரவின.
சந்திரிகா குமாரதுங்கவினதும், முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவினதும் பெயர்கள் அப்போதே அடிபடத் தொடங்கி விட்டன.
அதையடுத்து, நிறைவேற்று அதிகார ஆட்சி முறையை ஒழிக்கும் திட்டம் வலுப்பெற்ற போது, மாதுளுவாவே சோபித தேரர், ரணில் விக்கிரமசிங்க, கரு ஜெயசூரிய ஆகியோரின் பெயர்கள் மட்டுமன்றி, அர்ஜுன ரணதுங்க போன்றவர்களின் பெயர்களும் கூட அடிபட்டன.
இவ்வாறு பலபேருடைய பெயர்கள் எதிரணியின் பொதுவேட்பாளர் தெரிவுக்கு அடிபட்டுக் கொண்டிருந்த போது, எதிரணியினர் வேட்பாளர் ஒருவரைத் தெரிவு செய்ய முடியாமல் திண்டாடுகின்றனர் என்றே அரசாங்கம் நினைத்தது.
ஆனால் எதிரணியும், அரசாங்கத்தின் வேகத்துக்கு ஈடான ஏற்பாடுகளை மேற்கொண்டு வந்ததை அதனால் புரிந்து கொள்ள முடியாமற்போனது தான் ஆச்சரியம்.
அதுவும், மிகப்பெரிய புலனாய்வுக் கட்டமைப்பு ஒன்றைக் கொண்டிருந்த அரசாங்கத்தினால், இதுபற்றித் துப்பறிய முடியாமற் போனது அதன் துரதிர்ஷ்டம் என்றே கருத வேண்டும்.
விடுதலைப் புலிகளை அழிக்கும் அளவுக்கு- அவர்களின் கட்டமைப்புகளைச் சிதைக்கும் அளவுக்கு- புலனாய்வு அமைப்புகளைத் திறமையாகப் பயன்படுத்திய அரசாங்கத்தினால், எதிரணியின் பொதுவேட்பாளர் யாரெனக் கண்டறிய முடியாது போனதைப் பெருந்தோல்வி என்றே குறிப்பிட வேண்டும்.
அரசாங்கத்தின் கவனம் முழுவதும் சந்திரிகா குமாரதுங்கவின் மீதே இருந்தது.
அவர் மஹிந்த ராஜபக் ஷவுக்கு எதிராக களமிறங்கினால், கடுமையான நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்று ஆளும்கட்சிக்கு அச்சம் இருந்தது.
சந்திரிகா மீண்டும் அரசியலுக்கு வந்தால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவு ஏற்படும் என்றும், ஆளும்கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள இடதுசாரிக்கட்சிகள் கூட அவரது பக்கம் சாயலாம் என்றும் கணக்குப் போட்டது அரசாங்கம்.
18ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம், மூன்றாவது தடவையும் போட்டியிடலாம் என்பதால், சந்திரிகாவே மீளவும் அரசியலுக்கு வந்து விடக் கூடாது என்பதே அரசாங்கத்தின் கவனமாக இருந்தது.
முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, கிளப்பிய பிரச்சினை அரசாங்கத்துக்கு இன்னும் வசதியாகிப் போனது.
17ஆவது திருத்தச்சட்டத்தின் கீழ் இரண்டு முறை பதவிப் பிரமாணம் செய்த ஒருவர், 18ஆவது திருத்தச்சட்டத்தின் கீழ் மூன்றாவது முறை ஜனாதிபதியாகப் போட்டியிட முடியுமா என்ற கேள்வியை அது எழுப்பியிருந்தது.
சரத் என் சில்வாவின் இந்தக் கேள்வி, சந்திரிகா விடயத்தில் அச்சம் கொண்டிருந்த அரசாங்கத்துக்கு தெம்பைக் கொடுத்தது.
சந்திரிகா குமாரதுங்கவை போட்டியில் இருந்து ஒதுங்க வைக்கும் அளவுக்கு, உயர்நீதிமன்றத்தின் சட்டவியாக்கியானத்தைப் பெற முயன்றது அரசாங்கம்.
அதனால் தான் உயர்நீதிமன்றத்திடம் இதனை ஒரு மனுவாக விசாரித்து தீர்ப்பளிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ கோரவில்லை.
18ஆவது திருத்தச்சட்டத்துக்கு அமைய, மூன்றாவது முறையும் தேர்தலில் தான் போட்டியிட முடியுமா என்றும், நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், தன்னால் தேர்தலுக்கு அழைப்பு விடுக்க முடியுமா என்றும் தான் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதன் மூலம், மூன்றாவது முறை போட்டியிடுவதற்கு எதிராக எவரும் நீதிமன்றத்தை நாட முடியாமல் தடுக்கலாம்.
* உயர்நீதிமன்றத்தின் சட்டவியாக்கியானத்தை ஜனாதிபதிக்கான ஆலோசனை என்பதால், அதனைப் பகிரங்கப்படுத்தாமல் இரகசியமாக வைத்திருக்கலாம்.
ஒருவேளை சந்திரிகா குமாரதுங்க போட்டியில் இறங்கினால் கூட, அதற்கெதிராக வழக்குத் தொடுத்து அவரைத் தகுதி நீக்கம் செய்யலாம் என்று அரசாங்கம் பல சட்டத் திட்டங்களைப் போட்டது.
ஒட்டுமொத்த நீதித்துறையையும், நிர்வாகத்துறையையும் தனது கட்டுக்குள் வைத்திருக்கின்ற ஒரு அரசாங்கத்தினால், இதைச் செய்வது ஒன்றும் கடினமானதல்ல.
அதனால் தான், உயர்நீதிமன்றத்தின் சட்ட வியாக்கியானத்தைக் கூட, அரசாங்கம் வெளியிடவில்லை.
எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கோரிய போதிலும், அது ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட ஆலோசனையே என்றும், அதனை நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா பதிலளித்திருந்தார்.
ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிக்க நீதிமன்றத்தின் கருத்து, அதுவும் நாட்டின் சட்டத்துறையில், காலம்காலமாக முன்னோடியாக நிலைக்கத்தக்க ஒரு கருத்தை, பொதுமக்களுக்குத் தேவையற்றது என்று மிகச் சுலபமாக கூறியது அரசாங்கம்.
அரசாங்கம் அவ்வாறு கூறியதற்குக் காரணம், அந்த சட்டவிளக்கத்தைத் தெரிந்து கொண்டால், ஒரு வேளை சந்திரிகா போட்டியில் இறங்கவோ அல்லது மாற்று பொதுவேட்பாளரைக் களமிறக்கவோ தயாராகி விடுவார் என்பதற்கேயாகும்.
எதிரணி பொது வேட்பாளரைத் தெரிவு செய்ய முடியாமல் திணற வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கம்.
ஆனால், அரசாங்கத்தின் திட்டத்தை, அதன் வழியில் சென்றே உடைத்தெறிந்து விட்டார் சந்திரிகா.
எதிரணியின் பலவீனத்தை உணர்ந்து, அதற்குள் இருந்து ஒரு வேட்பாளரைத் தெரிவு செய்வதற்குப் பதிலாக, அரசாங்கத்துக்குள் இருந்தே மஹிந்த ராஜபக் ஷவுக்கு எதிரான புதியதொரு எதிரியை உருவாக்கத் திட்டமிட்டார்.
அதற்காகத் தெரிவு செய்யப்பட்டவர் தான் மைத்திரிபால சிறிசேன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நீண்டகால உறுப்பினர், பொதுச்செயலாளராக பதவி வகிப்பவர், பண்டாரநாயக்க குடும்பத்தின் விசுவாசி, மக்கள் மத்தியிலும் செல்வாக்குப் பெற்ற ஒருவர்.
எனவே தான் மைத்திரிபால சிறிசேனவை பொதுவேட்பாளராக்க சந்திரிகா முன்னின்றார்.
ஏற்கனவே சிறிமாவோ பண்டாரநாயக்கவின் மரணத்துக்குப் பின்னர், மைத்திரிபால சிறிசேனவையே பிரதமராக நியமிக்கத் திட்டமிட்டிருந்தார் சந்திரிகா.
ஆனால், அப்போது மஹிந்த ராஜபக் ஷ ஜே.வி.பி. போன்ற கட்சிகளுடன் சேர்ந்து, கொண்டு சந்திரிகாவின் திட்டத்தை மாற்றியமைக்க அழுத்தம் கொடுத்தார்.
அதுவே பின்னர், அவரை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நிலைக்கு உயர்த்தியது.
மீண்டும் சந்திரிகா குமாரதுங்க தனக்கு ஒரு வாய்ப்பை வழங்க முனைந்த போது மைத்திரிபால சிறிசேன அதனை மறுக்கவில்லை.
காரணம், அவருக்கு மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியின் மீது உச்சக்கட்ட வெறுப்பு ஏற்பட்டிருந்தது.
அரசாங்கத்தில் நிலவும் குடும்ப ஆதிக்கமும், அமைச்சராக இருந்தும் தன்னால் எதையும் செய்ய முடியாதுள்ள கையறு நிலை யும் அவரை கடுமையாக வெறுப்படையச் செய்திருந்தது.
அதனால் தான், சந்திரிகா குமாரதுங்க இந்த வாய்ப்பை வழங்க முன்வந்த போது தட்டிக்கழிக்காமல் ஏற்றுக் கொண்டிருந்தார்.
ஆனால் எந்த இரகசியமும் வெளியே கசியவில்லை. காரணம், இதுபற்றி வெளியே தெரியவந்தால் அரசாங்கம் உசாராகி விடும், திட்டத்தைக் குழப்ப முனையும் என்பதை சந்திரிகா உணர்ந்திருந்தார்.
கோத்தாபய ராஜபக் ஷவின் கீழ் உள்ள அரச புலனாய்வுப் பிரிவுகள் எல்லாவற்றையும் மோப்பம் பிடித்து விடும் என்பதால், எல்லோருடைய கண்ணிலும் மண்ணைத் தூவித் தான் காரியம் சாதிக்க வேண்டும் என்பதை சந்திரிகா நன்றாகவே உணர்ந்திருந்தார்.
பத்து ஆண்டுகள் ஜனாதிபதியாக இருந்தவர், அந்தக் காலகட்டத்தில், போருக்குத் தலைமையேற்றவர், – பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர், பாதுகாப்புச் சபைக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்கியவர் என்ற வகையில், சந்திரிகாவுக்கும் பாதுகாப்புத் தொடர்பான உத்திகள் கைவந்த கலையாகியிருக்கிறது.
அதனால் தான், மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்புகள், பேச்சுக்கள் எல்லாவற்றையும் செய்மதி, தொலைபேசிகள், இலக்கத்தகடு மாற்றப்பட்ட வாகனங்கள் என்று கச்சிதமாக திட்டங்களை அரங்கேற்றியிருக்கிறார்.
சந்திரிகா குமாரதுங்கவின் இந்த திட்டங்கள் அரசாங்கத்தை மிரள வைத்து விட்டது என்பதில் சந்தேகமில்லை.
முதலாவது, மைத்திரிபால சிறிசேனவையே உடைத்துக் கொண்டு போய் விட்டார் என்பது.
இரண்டாவது, இதே பாணியில் ஆட்சியைக் கவிழ்க்கவும் இரகசியமாகத் திட்டமிடுவாரோ என்ற அச்சத்தையும், அரசாங்கத்துக்கு கொடுத்திருக்கிறது.
இப்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை எதிர்த்து மைத்திரிபால சிறிசேன போட்டியிடப் போகிறார்.
இதனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யின் வாக்குகள் உடையும் என்றும் கணிக்கப்படுகிறது. அதேவேளை, ராஜபக்ஷ குடும்பத்தின் ஆட்சியை 2022ஆம் ஆண்டு வரை அசைக்க முடியாது என்ற கனவுகளோடு இருந்தவர்களுக்கு இது பேரிடியாகவும் அமைந்திருக்கிறது.
அரசாங்கத்துக்கு உச்சந்தலையில் ஒரு அடியைப் போட்டியிருக்கிறது சந்திரிகா குமாரதுங்கவின் தலைமையிலான எதிரணி.
இதுவரைக்கும் சந்திரிகா தனது திட் டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி யிருக்கிறார்.
இதுமட்டும் போதாது, தேர்தலிலும் வெற்றியும் காண வேண்டும்.
அது சாத்தியமானால் தான் சந்திரிகாவின் திட்டம் முழுமையாக வெற்றிபெறும்.
இல்லாவிட்டால், பொதுவேட்பாளர் சிறைக்குச் செல்லவும் தயாராக இருக்க வேண்டும் என்று சரத் பொன்சேகா குறிப்பிட்டது போல, நிகழும் வாய்ப்பும் உள்ளது. அந்தநிலை, மைத்திரிபால சிறிசேனவுக்கு மட்டுமன்றி, சந்திரிகா குமாரதுங்கவுக்கும் கூட ஏற்படலாம்.
– சத்ரியன்-