மூவினங்களும் சமமாக, பாதுகாப்பாக, மகிழ்வாக வாழும் சூழ்நிலை ஏற்படுத்தப்படவேண்டும். அந்த நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கான போராட்டத்தில் பயணிப்பதற்காக எனது உயிரை துச்சமென மதித்து களமிறங்கியுள்ளேன்.
எனது உயிர் துறக்கப்பட்டு இந்த நாட்டில் உள்ள இருபது மில்லியன் மக்களினதும் 20இலட்சம் முஸ்லிம்களினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்றால் அதற்கு தயாராகவே இருக்கின்றேன் என முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாத் பதியுதீன் கேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்துள்ளார்.
அச் செவ்வியின் முழுவடிவம் வருமாறு:
கேள்வி:- ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை இரண்டு தடவைகள் ஆட்சிபீடத்தில் அமர்த்துவதற்காக செயற்பட்டதுடன் கிழக்கு மாகாண சபையில் ஆளும் தரப்பு ஆட்சியமைப்பதற்கு காரணமாக இருக்கும் நீங்களும் உங்களுடைய கட்சியினரும் திடீரென கடந்த 22ஆம் திகதி அரசிலிருந்து வெளியேறியமைக்கு காரணம் என்ன?
பதில்:- ஆம். அது உண்மையான விடயமே. 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் போது நாம் வடக்கு, கிழக்கில் அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்தோம். கணிசமான வாக்குகளைப் பெற்றுக்கொடுத்தோம்.
யுத்தத்தால் நெருக்கடிகளைச் சந்தித்துக்கொண்டிருந்த தமிழ், முஸ்லிம் மக்கள் அதிலிருந்து மீளவேண்டும் என்பது மிகமுக்கியமான காரணமாக இருந்தது.
அத்துடன் குடும்பிமலையிலிருந்து சம்பூர் வரையி லும் முசலியிலிருந்து முள்ளிவாய்க்கால் நிறைவு வரையிலும் அதற்குப் பின்னரும் நாம் அரசாங்கத்துடன் இணைந்து இடம்பெயர்ந்த மக்கள் பராமரிப்பு, மீள்குடியேற்றம் போன்ற அனைத்து விடயங்களிலும் பங்காளிகளாகவே இருந்தோம்.
2009ஆம் ஆண்டு யுத்த நிறைவுக்கு பின்னர் 2010ஆம் ஆண்டு மீண்டும் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. அதிலும் ஜனாதிபதி மஹிந்தவே போட்டியிட்டார்.
அவர் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆரம்பித்திருந்ததால் அவரை ஆட்சியில் அமர்த்துவதாலேயே அவையனைத்தும் நிறைவடையும் என கருதினோம். அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டோம்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிரணியில் இருக்கையில் 40சதவீத முஸ்லிம்களின் வாக்குகளை பெற்றுக்கொடுத்தோம். சிறுபான்மையினத்தில் யாருக்கும் வழங்காத மிகப்பெரிய அமைச்சு வழங்கப்பட்டிருந்தது.
மூன்று மாவட்டங்களின் அபிவிருத்திக்குழுவின் தலைமைப் பதவியிலும் இருந்தேன். ஆனால் 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி வெற்றி பெற்றபின்னர் அவருடைய செயற் பாடுகளில் மாற்றங்கள் ஏற்பட்டன. 18 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட தன் பின்னர் இந்த நாட்டில் தானே எப்போதும் ஜனாதிபதி என்ற எண்ணம் உருவெடுக்க ஆரம்பித்தது.
கேள்வி:- 18ஆவது திருத்தச்சட்டத்திற்கு நீங்களும் ஆதரவளித்தீர்களே?
பதில்:- நாம் ஆதரவளித்தோம். அபிவிருத்தி, இனங்களுக்கிடையிலான நல்லிணக் கம் போன்றவற்றில் ஜனாதிபதி ஆரம்பித்த வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் மேற்கொள்வார் என்ற நம்பிக்கையுடனேயே ஆதர வளித்தோம்.
ஆனால் அதன் பின்னரான காலத்தில் பொதுபலசேனா என்ற குழுவினர் உருவெடுத்தனர். முஸ்லிம்களை மட்டும் இலக்கு வைத்து செயற்பட ஆரம்பித்தனர். தம்புள்ள முதல் மஹியங்கனை வரை பள்ளிகள் தாக்கப்பட்டன. அளுத்கம, பேருவளையில் இடம்பெற்ற கொடுமையான சம்பவங்கள்.
வியாபார ஸ்தாபனங் கள் மீதான தாக்குதல் என தொடர்ந்த வேளையில் நாம் அவற்றை நிறுத்துமாறு கோரினோம். நேரடியாக ஜனாதிபதியை சந்தித்து பேசி னோம். சம்பவங்கள் இடம்பெறக் காரணமாக இருந்தவர்களை பகிரங்கப்படுத்துமாறு கோரினோம்.
நீதியின் முன் நிறுத்தி தண்டனை வழங்குமாறு கோரி னோம். கவனம் செலுத்தப்படுவதாக கூறப்பட்டதே தவிர எந்தவிதமான நடவடிக்கைக ளும் மேற் கொள்ளப்படவில்லை.
கேள்வி:- உங்களுடைய அமைச்சை பொதுபலசேனாவினர் முற்றுகையிட்டார் கள். அது தொடர்பில் முறையிட்டீர்களா?
பதில்:- ஆம். உலக நாடுகளில் எங்குமே நடைபெறாதவொரு சம்பவம் இங்கு நடைபெற்றது. பொதுபலசேனாவின் குழுவினர் எனது அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந் தார்கள்.
யாரோவொரு பௌத்த மதகுருவுக்கு நான் அடைக்கலம் கொடுத்ததாக எனது அறைக்கதவை கூட பலவந்தமாக திறந்திருந்தார்கள்.
துதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாரிடம் முறையிட்டேன். நீதிமன்றில் வழக்கு தொட ர்ந்தேன். தற்போதுவரையில் பொலிஸார் தேடிக்கொண்டிருக்கின்றார்கள்.
அவர்கள் வெல்லம்பிட்டியவில் இருப்பதாக நானே பொலிஸாரிடம் கூறினேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முல்லைத்தீவு காடுகளுக்குள் சென்று பிரபாகரனை கண்டறியுமளவுக்கு புலனாய்வாளர்கள் இருக்கும் இந்த நாட்டு பாதுகாப்புத்துறையில் பள்ளிகள், வியாபார நிலையங்கள் தாக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை அறிவதற்கும் அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்தவர்களை அடையாளம் காணுவதற்கும் முடியாதிருக்கின்றது.
கேள்வி:- பொதுபலசேனா மீது நடவடிக் கை எடுக்கப்படாமைக்கு காரணம் என்ன?
பதில்:– இந்த நாட்டில் யுத்தத்தை நிறைவுசெய்வதற்கும், அரசாங்கத்தை ஆட்சிபீடத்தில் அமர்த்துவதற்கும், மூன்றில்இரண்டு பெரும்பான்மையை பெறுவதற்கும் அபிவிருத்திக்கும், இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் எமது கட்சி பாரியளவில் அர்ப்பணிப்பைச் செய்திருந்தது.
சிறுபான்மை சமூகத்திற்கு குறிப்பாக முஸ்லிம் சமூகத்தினை பாதிப்புறச் செய்யும் சம்பவங்கள் நடந்தேறியபோது நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் நேரடியாக கோரினோம்.
இறுதியாக சட்டத்தை நிலைநாட்டினால் தனது வாக்கு வங்கி குறைந்து விடும் என ஜனாதிபதி கூறினார். மறுபுறம் அரசாங்கத்தில் உள்ள ஒருவரே பொதுபலசேனாவின் பயிற்சி அலுவலகத்தை திறந்து வைத்தார்.
தற்போது ஜனாதிபதி தேர்தல் காலம் என்பதால் அவர்களை மௌனமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது. அவர்களைக் கட்டுப்படுத்தும் ஸ்விச் அரசாங்கத்துள்ளேயே இருக்கின்றது.
அவ்வாறிருக்கையில் இனவாதச் செயற்பாடுகளால் எதிர்காலத்தில் அழகிய தீவி னுள் வாழும் மூவினங்களுக்குமிடையில் பிரச்சினைகள் எழுந்து விடும் என்ற அச்சம் எம்மிடம் காணப்பட்டது. அரசாங்கத்திலிருந்து போராடினோம்.
அது கைகூடவில்லை. சிறுபான்மை சமூகத்தில் குறிப்பாக முஸ்லிம் சமூகம் பொதுபல சேனாவின் இனவாத செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்த தால் அச்சத்துடன் வாழவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த அரசாங்கம் தனது இருப்பிற்காக இனவாதத்தை நிலைநிறுத்தும் வகையில் செயற்பட ஆரம்பித்தது. முஸ்லிம் சமூகம் உட்பட சிறுபான்மை சமூகத்தை தேசிய கட்சி என்பதன் அடிப்படையில் பாதுகாக்க வேண்டிய தேவை எம்மிடம் உள்ளது.
அதற்காக அமைச்சுக்கள், பதவிகள் என அனைத்தையும் துறந்ததோடு மட்டுமல்லாது எனது நீண்டகால நண்பராகவிருந்த பஷில் ராஜபக் ஷவின் நட்பையும் விடுத்து எதிரணியில் இணைந்துள்ளேன்.
தற்போது எனக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு மீளப்பெறப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் கூட பாதுகாப்பு வழங்கப்படவில்லை. வெறுமனே இரு பொலிஸாரே வழங்கப்பட்டுள்ளனர்.
கேள்வி:- உங்களுக்கு அச்சுறுத்தல் காணப்படுகின்றது என கூறுகின்றீர்களா?
பதில்:- ஆம். நான் அரசாங்கத்திலிருந்து வெளியேறியவுடன் பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட 45பேரில் 43பேரை உடனடியாகவே நீக்கினார்கள். எனது பிள்ளைகள் கற்றல் செயற்பாடுகளுக்காக வாகனத்தில் செல்லும் போது மோட்டார் வாகனங்களில் பின்தொடர்கின்றார்கள். நான் வெளியில் செல்லும்போது பின்தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றேன்.
கேள்வி:- அது தொடர்பாக பொலிஸாரிடம் முறையிட்டீர்களா?
பதில்:– இச்செயற்பாடுகளை சுட்டிக்காட்டி கடந்த 24ஆம் திகதி பொலிஸ்மா அதிபருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளேன். இவ்வாறான நிலையில் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுமாயின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்.
1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னர் ஆட்சிக்கு வந்த மிக மோசமான துவேசம் மிக்க அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் காணப்படுகின்றது. இவர்கள் தமது இருப்பை தக்க வைப்பதற்காக எதனையும் செய்வார்கள். எதிர்வரும் தினங்களில் எதுவும் நடக்கலாம்.
ஆனால் இந்த நாட்டில் நல்லாட்சியொன்று ஏற்பட்டு மூவினங்களும் சமமாக, பாதுகாப்பாக, மகிழ்வாக வாழும் சூழ்நிலை ஏற்படுத்தப்படவேண்டும்.
அந்த நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கான போராட்டத்தில் பயணிப்பதற்காக நான் பதவிகளை துறந்து எனது உயிரை துச்சமென மதித்து களமிறங்கியுள்ளேன். எனது உயிர் துறக்கப்பட்டு இந்த நாட்டில் உள்ள இருபது மில்லியன் மக்களினதும் 20இலட்சம் முஸ்லிம்களினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்றால் அதற்கு தயாராக இருக்கின்றேன்.
கேள்வி:- உங்களுடைய கட்சியின் தேசிய அமைப்பாளரும் பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, பிரதித்தலைவர் என்.எம்.சஹீட் ஆகியோர் தற்போதும் அரசாங்கத்துடன் இருக்கின்றார்களே?
பதில்:- நான் அமைச்சரவை அமைச்சராக இருந்தும் இந்த நாட்டில் உள்ள முஸ்லிம்களின் உணர்வுகளுக்கும், கட்சியின் பெரும்பான்மையான தீர்மானத்திற்கும் மதிப்பளித்தே எதிரணியில் இணைந்து கொண் டேன்.
அதேநேரம் சுமார் மூன்று வாரத்திற்கு முன்னதாக கட்சியின் பொதுக்கூட்டத்திற்கு வருமாறு அழைத்திருந்தேன். கட்சியின் இறுதித்தீர்மான கூட்டத்திற்கு முதல் நாளும் நிச்சயம் அதில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத் தேன். ஆனால் அவரும் பிரதித்தலைவரும் வருகை தரவில்லை.
அவருக்கு ஒரு கோரிக்கை விடுக்கின் றேன். தயவு செய்து தவறான வழியில் செல்லாதீர்கள். எமது சமூகத்தின் உணர்வுக்கு மதிப்பளித்து செயற்படுங்கள். இவருக்கு காத்தான்குடி முஸ்லிம் சமூகத்தினர் நல்வழியைக் காட்டவேண்டும்.
உலமாக்கள், பொதுமக்கள் அனைவரும் இவருக்கு நற்பாதையை எடுத்துக்கூறவேண்டும். நல் சிந்தனைக்காக துஆ செய்யவேண்டும் அவரும் எமது பயணத்தில் எம்முடன் இணைந்து கொள்வதற்கு வலியுறுத்த வேண்டும்.
ஆகவே அவர் சரியான தீர்மானத்தை எடுப்பார் எனக்கருதுவதுடன் காத்தான்குடியில் வெற்றிபெற்ற எமது மாகாணசபை உறுப்பினர் சிப்லிபாரூக் எமது முடிவை ஏற்றுக்கொண்டமையை இட்டு அவரை கௌரவிப்பதுடன் பாராட்டுகின்றேன். ஹிஸ்புல்லா உள்ளிட்டவர்கள் தவறான தீர்மானத்தை எடுப்பார்களாயின் மக்கள் எதிர்வரும் 08 ஆம் திகதிக்கு பின்னர் வழங்கும் ஆணை கன்னத்தில் அறைந்ததற்கு ஒப்பானதாக இருக்கும் என்பதையும் குறிப்பிடுகின்றேன்.
கேள்வி:- உங்களுடைய நெருங்கிய நண்பரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக் ஷ வடக்கு முஸ்லிம்களை காட்டிக்கொடுத்து விட்டதாக கூறியுள்ளாரே?
பதில்:- அவர் என்னுடைய நல்ல நண்ப ராக இருக்கின்ற போதிலும் வடமாகாண முஸ்லிம்களை நான் காட்டிக்கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். எதிர்வரும் 08ஆம் திகதி வரை பொறுத்திருக்க வேண்டும். நானா இல்லை அவருடன் இருந்து கட்சியை காட்டிக் கொடுத்தவரா முஸ்லிம்களை காட்டிக்கொடுத்தது என்பதை இலங்கை முஸ்லிம்கள் தீர்மானிப்பார்கள்.
கேள்வி:- உங்களுடைய கட்சி வெட் கமில்லாது தேசியப்பட்டியல் பாராளுமன்ற ஆசனத்தைப் பெற்றுக்கொண்டு சென்று விட்டதாக இரத்தினபுரியில் நடைபெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி கூறியுள்ளாரே?
பதில்:- எமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையிலேயே தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஆசனம் நீண்டகாலத்திற்கு பின் அளிக்கப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது எமது கட்சி மூன்று ஆசனங்களை பெற்றது.
அதன்போது எமக்கு தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்படுவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு எமது கட்சியின் செயலாளர் ஹமீட்டின் பெயர் வழங்கப்பட்டிருந்தது.
இருந்தபோதும் ஏனைய விமல்வீரவன்ஸ, தினேஷ் குணவர்த்தன, ஆறுமுகன் தொண்டமான், டி.யு. குணசேகர, திஸ்ஸவிதாரண, ரஜீவ விஜயசிங்க, சம்பிக்க ரணவக்க ஆகியோரின் கட்சிகள் எம்மைவிடவும் குறைந்த ஆசனங்கள் பெற்றபோதும் தேசியப்பட்டியல் ஆசனங்கள் வழங்கப்பட்டது. இருப்பினும் அவ்வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில் 2012ஆம் ஆண்டு கிழக்கு மாகாண தேர்தல் நடைபெற்றது. அதன்போது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்காக நாம் உதவினோம்.
எமது கட்சிக்கு வழங்கப்பட்டிருந்த சுகாதார அமைச்சுப்பதவியை மீளப்பெறப்பட்டபோதும் அமைதியாக இருந்தோம். அச்சமயத்தில் முன்னாள் அமைச்சராகவிருந்த அமீர் அலிக்கு பிரதியமைச்சுடன் கூடிய தேசியப்பட்டியல் வழங்கப்படுவதாக பசில் ராஜபக் ஷ தலைமையிலான அமைச்சர் குழு உறுதியளித்தது.
அதில் தற்போது பொது எதிரணி வேட்பாளராக இருக்கும் மைத்திரிபால சிறிசேனவும் இடம்பெற்றிருந்தார். அவரும் அதற்கு சாட்சியமாக இருக்கின்றார். அதன் பின்னர் கல்குடா பள்ளிவாசலில் நடைபெற்ற கூட்டத்திற்கு வருகை தந்திருந்த அமைச்சர் பசில் ராஜபக் ஷ இரண்டு வாரங்களில் அப்பதவியைப் பெற்றுத்தருவதாக வாக்குறுதி அளித்து விட்டுச் சென்றார்.
அந்த வாக்குறுதிக்கு அமைய பாராளு மன்ற உறுப்பினராகவிருந்த மாலினி பொன்சேகா இராஜினாமா கடிதத்தை தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பியதுடன் வர்த்த மானி அறிவித்தலுக்காக அமீர் அலியின் பெயர் மூன்று மொழிகளிலும் கோரப்பட்டது. அதனை நாம் வழங்கினோம்.
ஆனால் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஊடகவியலாளர் ஒருவர் இப்பதவி வழங்கப்படவிருப்பதையறிந்து குறித்த பதவியை எமக்கு வழங்க வேண்டாம் என இளைய ராஜபக் ஷவிடம் கோரினார். அவர் தனது தந்தையின் ஊடாக அதனை தடுத்து நிறுத்தினார். அதன் பின்னர் ஜனாதிபதியிடம் அப்பதவி தொடர்பாக நாம் கேள்வியெழுப்பியபோதும் நான் உங்களுக்கு வாக்குறுதி அளிக்கவில்லையே எனக் கூறினார்.
அதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வரை இராஜினாமாச் செய்யவைத்தனர். அப்பதவியை வேறொருவருக்கு வழங்கப்போகின்றார்கள் என நாம் கருதியநிலையில் அவ்விடத்திற்காக அமீர் அலியை நியமிப்பதாக கூறினார்கள். இருப்பினும் நாம் இரண்டு வாரங்களின் பின்னரே பெற்றோம்.
அத் துடன் எமக்கு வழங்கவேண்டிய கடனையே அரசு வழங்குகின்றது என்ற கல்குடா மக்களின் ஒருமித்த கருத்தையும் ஏற்றே அப்பதவியை பெற்றோம்.
கேள்வி:- பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஊடகவியலாளர் ஒருவரே உங்களுடைய கட்சிக்கு தேசியப்பட்டியல் ஆசனத்தை வழங்குவதை தடுத்ததாக கூறுகின்றீர்கள். அவருடன் அலரிமாளிகையினுள் மோதல் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றதே?
பதில்:- நான் ஜனாதிபதிக்கு சகல விடயங்களையும் குறிப்பிட்டு கடிதமொன்றை எழுதி அனுப்பிவிட்டே வெளியேறியுள் ளேன். அக்கடிதத்தை விரைவில் ஊடகங் கள் மத்தியில் வெளியிடுவேன். அதன் போது உங்களுடைய வினாவுக்கு பதில் கிடைக்கும்.
கேள்வி:- ஜனாதிபதி தன்னிடம் பைல்கள் இருப்பதாக கூறினார். அதில் உங்களுடைய பைல்கள் காணப்படுகின்றதா?
பதில்:- நான் வெளியேறு முன்னதாக பைல்கள் காணப்படுவதாக கூறினார்கள்.நான் வெளியேற மாட்டேன் எனவும் கூறினார்கள். எனது பைல்கள் இருந்தால் அதனை தாராளமாக வெளியிடலாம்.
அதுதொடர்பில் எந்த ஆட்சேபனையும் இல்லை. அவ்வாறு பைல்கள் காணப்படுமாயின் பகிரங்கப்படுத்துமாறு சவால் விடுக்கின்றேன்.
கேள்வி:- பொது எதிரணியுடன் இணையும்போது ஆவண ரீதியாக ஒப்பந்தம் செய் தீர்களா? நிபந்தனை விதித்தீர்களா?
பதில்:- ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ எம் முடன் செய்துகொண்ட அனைத்து ஒப்பந்தங்களையும் மீறியுள்ளார். அவ்வாறானவருக்கு தொடர்ந்து ஆதரவளிக்க முடியாது. ஆகவே தான் அனைத்து இனங்களும்
சமத்துவமாக, சமாதானமாக வாழ்வதை உறுதிசெய்வதுடன் எதிர்காலத்தில் விகிதாசாரத்தின் அடிப்படையில் அனைத்து விடயங்களும் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்பதுடன் இனப்பிரச்சினைக்கான தீர்வு வழங்கப்படும் போது எந்த இனமும் பாதிக்கப்படாது நியாயமான இருக்கவேண்டும்.
பொதுபலசேனா போன்ற இனவாத குழுக்கள் தலைதூக்காது சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் ஒரு அரசாங்கமாக இருக்கவேண்டும் என்ற உத்தரவாதத்தை வழங்கவேண்டும் என்றே நாம் கோரினோம். அதற்கான வாக்குறுதியை எமக்கு வழங்கியிருக்கின்றார்கள்.
கேள்வி:- பொது எதிரணி மீதான உங்களின் நம்பிக்கைத் தன்மை எவ்வாறுள்ளது?
பதில்:- சந்திரிக்கா குமாரதுங்க இந்த நாட்டில் இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என விரும்பி 2000ஆம் ஆண்டு தீர்வு திட்ட த்தை முன்வைத்தவர்.
ராஜி சேனாரத்ன மூவின மக்களின் ஒற்றுமை தொடர்பாகவும் 13ஆவது திருத் தச்சட்டம் தொடர்பாகவும் பேசியவர். பொதுச்செயலாளரை சிறுபான்மை இனத்தவருக்கு வழங்கி இனவாதமில்லத ஐக்கிய தேசியக் கட்சி யின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இடம்பெற்ற அணியாக காணப்படுகின்றது.
அந்த அடிப்படையில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காகவும் சிறுபான்மை சமூகம் அச்சமில்லாது வாழ்வதற்காக அனைத்தையும் இழந்து மக்களை நம்பியும் இறைவணை நம்பியுமே எதிரணியில் இணைந்திருக்கின்றோம்.
கேள்வி:- பொது எதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?
பதில்:- நாம் இணைவதற்கு முன்னதாகவே அதனை வெளியிட்டுள்ளார்கள். அதனை ஆழமாக ஆராய்ந்து வருகின்றோம்.
எவ்வாறாயினும் மக்களை பாதிக்கும் அல்லது அநியாயமான விடயங்களுக்கு ஒருபோதும் துணைபோகமாட்டோம். அரசா ங்கத்திலிருக்கும்போதும் அவ்வாறான அநி யாயங்களுக்கு எதிராக நாம் போராடிக் கொ ண்டேயிருந்தோம்.
கேள்வி:- பொது எதிரணி வெற்றி பெறுவதற்காக அர்ப்பணிப்புடன்செயற்படுவீர்களா?அதன் பின்னர் அமையவிருக்கும் தேசிய அரசாங்கத்தில் பங்கேற்பீர்களா?
பதில்:- நிச்சயமாக தேசிய அரசாங்கத்தில் எமது கட்சி பங்கேற்கும். நாம் எதிரணிக்கு வந்து விட்டோம். அடுத்தடுத்த தினங்களில் மேலும் பல விக்கெட்டுக்கள் விழும். எதிர்வரும் எட்டாம் திகதி இந்த ஆட்சி பூரணமாக வீழ்த்தப்படும்.
அதேநேரம் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக நாடளாவிய ரீதியில் முஸ்லிம் மக்களின் வாக்குகள் மட்டுமல்ல தமிழ் மக்களின் வாக்குகளையும் பெற்று பெரும்பான்மையுடன் வெற்றிபெறு வதற்காக அர்ப்பணிப்புடன் நானும் எனது கட்சியினரும் செயற்படுவோம்.