லண்டன் கட்விக் (Gatwick Airport) விமான நிலையத்திலிருந்து 447 பயணிகளுடன் லாஸ் வேகாஸ் நகருக்குப் புறப்பட்ட போயிங் 747 ரக ஜம்போ விஎஸ்43 விமானம் அதிர்ஷடவசமாக விபத்தில் இருந்து தப்பியது.
விர்ஜின் அட்லாண்டிக் நிறுவனத்தைச் சேர்ந்த இந்த விமானம் உள்ளூர் நேரப்படி இன்று காலை 11.44 மணிக்கு புறப்பட்டது. 12.15 மணிக்கு அதன் லேண்டிங் கியர் பழுதானது விமானிக்கு தெரிய வந்ததால் உடனடியாக விமான கட்டுப்பாடு அறைக்கு தகவல் தெரிவித்து 1.45 மணிக்கு டெக்ஸ்ட் புக் லேண்டிங் எனப்படும் அவசர லேண்டிங் செய்ய இருப்பதாகவும் பயணிகளிடம் விளக்கமாகக் கூறினார்.
பயணிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். சிலர் தாம் இறந்து விடுவோம் என்ற பயத்தில் கதறி அழுதனர். பின்னர் விமானி அங்குள்ள கடற்பகுதியைச் சுற்றி விமானத்தின் எரிபொருளை காலி செய்தார்.
இதன் மூலம் விமானத்தின் எடை குறைந்தது. பின்னர் தான் கிளம்பிய விமான நிலையத்திற்கு விமானத்தைத் திருப்பியுள்ளார்.
அங்கும் விமானத்தின் உயரத்தையும் வேகத்தையும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்த பின்னர் ஓடுதளத்தை நெருங்கியுள்ளார்.
மொத்தம் உள்ள 4 லேண்டிங் கியர்களில் ஒரு லேண்டிங் கியர் வெளிவராத நிலையில், விமானம் ஓடுதளத்தில் பாய்ந்தது. தரையைத் தொட்டவுடன் விமானத்தில் பலத்த அதிர்வு ஏற்பட்டது.
இருந்தும் விமானியின் சாமர்த்தியத்தால் சில நிமிடங்களில் சரிந்தபடியே பலத்த சத்தத்துடன் விமானம் சரியாக ஓடுதளத்தில் இறங்கியது.
அடுத்த நொடி பயணிகள் அனைவரும் தங்களை மறந்து கைதட்டினர். உணர்ச்சிப் பெருக்கில் அழுதபடி தங்கள் உயிரைக் காப்பாற்றிய விமானியை பாராட்டினர்.
நெருக்கடியான நேரத்தில் நிதானமாக செயல்பட்டு பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய விமானிக்கு உலகம் முழுவதிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
விமானப் பயணிகளுக்கு இந்த ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாகவே அமைந்திருக்கிறது. அடுத்தடுத்து விமானங்கள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகி வருகிறது.
காணாமல் போன மலேசிய விமானத்தின் பாகங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் ஏர் ஏசியா விமானம் ஒன்றும் ஜாவா கடல் பகுதியில் சென்றபோது மாயமானது. அதன் பாகங்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
/p>