தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வானது பின் கதவு கொடுக்கல் வாங்கல்களினால் தீர்க்கப்பட முடியாது என்பதே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுதியான நிலைப்பாடாகும்.
அது சாத்தியமற்றதாகும். அந்த வழியை பின்பற்றுவதற்கு நாம் தயாராக இல்லை. தீர்வுக்கான செயற்பாடு முழு நாட்டு மக்களுக்கும் வெளிப்படையாக தெரிய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
கொழும்பு ஜானகி ஹோட்டலில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட் டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் விளக்கமளிக்கும் நோக்கில் இந்த செய்தியாளர் மாநாடு நடைபெற்றது.
இதில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ஈ.பி.
ஆர்.எல்.எப். சார்பில் சிவசக்தி ஆனந்தன் எம்.பி., புளொட் சார்பில் வடமாகாண சபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், கூட்டமைப்பின் எம்.பி. சுமந்திரன், ரெலோ தலைவரும் எம்.பி.யுமான செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
செய்தியாளர் மாநாட்டில் சம்பந்தன் எம்.பி. தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்,
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர் பில் கடந்த சில வாரங்களாக வடக்கு, கிழக்கு மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள எமது மக்களுடன் மிகவும் ஆழமான விரிவான கலந்துரையாடல்களையும் கூட்டங்களையும் நாங்கள் நடத்தினோம்.
ஆளும் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மற்றும் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் பிரசாரங்கள் மற்றும் பல்வேறு விடயங்கள் குறித்த அவர்களின் நிலைப்பாடுகளை கடந்த சில வாரங்களாக ஆழமான முறையில் பின்பற்றியும் வந்தோம்.
அந்த வகையில் மிகவும் ஆழமான விரிவான ஆராய்வுகள், கலந்துரையாடல்களின் பின்னர் நாங்கள் ஒரு தீர்மானத்துக்கு வந்திருக்கின்றோம். இந்தத் தீர்மானம் எமது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் ஏக மனதாக எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தனது முழுமையான ஆதரவை கூட்டு எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.
இந்தத் தீர்மானத்தை எடுப்பதற்காக நாங்கள் மக்கள் மத்தியிலும் எமது கட்சிக்குள்ளும் மிகவும் ஆழமாக பரிசீலித்து ஆராய்ந்தோம். இரண்டு வேட்பாளர்களினதும் கருத்துக்களை செவிமடுத்து ஆராய்ந்து இந்த முடிவுக்கு வந்துள்ளோம். எமது இந் தத் தீர்மானத்தை இன்று நாங்கள் நாட்டு மக்களுக்கு அறிவிக்கின்றோம்.
ஒப்பிட்டுப்பார்த்தோம்
கேள்வி: பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் மௌனமாக இருக்கின்றமை தெரிகின்றது. இதனை நீங்கள் எவ்வாறு கையாளப்போகின்றீர்கள்?
பதில்: நாங்கள் தேர்தல் விஞ்ஞாபனங்களை முழுமையாக ஆராயவில்லை. ஆனால், அவர்களின் அறிவிப்புகளை நாம் பார்த்தோம். ஆளும் கூட்டணி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை பொறுத்தவரையில் அவர் கடந்த 10 வருடங்களாக நாட்டின் தலைவராக இருந்துள்ளார்.
இந்தக் காலத்தில் அவரின் செயற்பாடுகளை, சாதனைகளை நாம் பார்த்துள்ளோம். யுத்த முடிவின் பின்னர் 2010 ஆம் ஆண்டு அவர் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
மிக முக்கியமாக கடந்த ஐந்து வருடங்களில் ஜனாதிபதியின் செயற்பாடுகளையும் சாதனைகளையும் நாம் பார்த்து வருகிறோம்.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் இரண்டு வேட்பாளர்களும் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் குறிப்பிடத்தக்கவகையில் உள்ளடக்காவிடினும் ஜனாதிபதியின் கடந்தகால செயற்பாடு களை வைத்தே நாம் ஒரு முடிவை எடுத்துள்ளோம்.
எது நடக்கவில்லையோ அது நடக்கும்
கடந்த 10 வருடங்களில் எது நடக்கவில்லையோ அது எதிர்வரும் காலங்களில் நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளோம்.
பிளவுபடாத நாட்டுக்குள் தீர்வு
கேள்வி: கூட்டமைப்பின் கோரிக்கைகளாக வடக்கிலிருந்து இராணுவம் அகற்றப்படல், காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படல், 13 பிளஸ் என்பன உள்ளன. இவற்றைப் பெற்றுத்தருவதாகவே தமிழ் மக்களுக்கு நீங் கள் கூறி வருகின்றீர்கள். இது தொடர்பில் ஏதேனும் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளனவா? தமிழ் மக்களிடம் எதனை வைத்து வாக்கு கேட்கப்போகிறீர்கள்?
பதில்: அரசியல் தீர்வை பொறுத்தவரை யில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு மிகவும் உறுதியானது. பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள் நியாயமான, நிரந்தரமான, நடைமுறை சாத்தியமுடைய, நிலைத்து நிற்கக் கூடிய ஒரு அரசியல் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது எமது உறுதியான நிலைப்பாடாகும். அந்த நிலைப்பாட்டில் எவ்விதமான மாற்றமும் ஏற்படவில்லை. மாற்றத்துக்கும் இடமில்லை.
தேர்தலின் பின்னர் இந்த விடயத்தை நாம் வாய்மூலமாகவும் எழுத்து மூலமாகவும் அரசாங்கத்துக்கு ஏற்கனவே சமர்ப்பித்து விட்டோம். இதனை அடைவதற்கு நாங்கள் உழைப்போம்.
ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த பின்னர் இந்த நிலைமை தொடர்ந்து பரிசீலிக்கப்பட வேண்டும். தேர்தல் முடிந்த பிறகும் எமது முயற்சி தொடரும்.
எமது மக்கள் அமைதிகாத்து நாங்கள் கூறியிருக்கின்ற கருத்தை மதித்து பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
அவ்விதமான செயற்பாட்டினூடாக பாரிய மாற்றம் ஏற்படுவதற்கு இடம் இருக்கின்றது. இந்த நாட்டுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாமல் அதே சமயம் நாட் டில் வாழுகின்ற சிறுபான்மை மக்கள் கௌரவமாகவும் சுய மரியாதையுடனும் சகல உரிமைகளையும் பெற்று வாழ்வதற்கு ஒரு வழி பிறக்கலாம் என்ற நம்பிக் கை எனக்கு உண்டு.அந்தக் காரணத்தின் நிமித்தமே நாங்கள் இந்தக் கோரிக்கையை விடுக்கின்றோம்.
இணக்கப்பாடு இல்லை
கேள்வி: அப்படியாயின் இரு தரப்பினருக் கும் இடையில் ஏதாவது இணக்கப்பாடுகள் எட்டப்படவில்லையா?
பதில்: நாங்கள் இந்த விடயம் தொடர்பாக எல்லோருடனும் பேசியிருக்கிறோம். ஜனாதிபதியுடன் பேசியிருக்கிறோம், ஏனைய அரசியல் கட்சிகளுடன் பேசியிருக்கிறோம், அரசியல் தலைவர்களுடன் பேசியிருக்கிறோம். இந்த விடயம் தொடர்பாக தொடர்ந்தும் நாங்கள் அவ்வாறான பேச்சுவார்த்தைகளை நடத்துவோம். ஆனால் அதைப்பற்றி தற்போது அதிகம் பேச வேண்டிய தேவை இருப்பதாக நாம் கருதவில்லை.
கேள்வி: நீங்கள் எதிரணி வேட்பாளர் தொடர்பான நம்பிக்கை தொடர்பில் குறிப்பிட்டீர்கள். அவர்களுடன் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் குறித்து கலந்துரையாடல்களை நடத்தினீர்களா?
பதில்: எமது அரசியல் தீர்வு தொடர்பான விடயங்கள் குறித்து அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுடனும் நாம் பேசியிருக்கிறோம்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுடன் பேசியிருக்கிறோம். அரசாங்கம் நியமித்த பிரதிநிதிகளுடன் இருதரப்பு பேச்சுகளிலும் இதனை ஆராய்ந்திருக்கிறோம். அது தொடர் செயற்பாடாகும்.
யாருடனும் புரிந்துணர்வு இல்லை
கேள்வி: எனினும் 5 இலட்சம் வாக்குகள் விடயத்தில் நீங்கள் ஒரு தீர்மானம் எடுத்துள்ளீர்கள். இந்தத் தீர்மானம் எதன் அடிப்படையில் எடுக்கப்பட்டது?
பதில்: நான் ஒரு விடயத்தை இந்த இடத்தில் தெளிவாகக் குறிப்பிட வேண் டும். நாங்கள் எந்தத் தரப்புடனும் எந்த விடயம் தொடர்பிலும் புரிந்துணர்வுக்கோ உடன்பாட்டுக்கோ வரவில்லை.
யாருட னும் ஒரு புரிந்துணர்வுக்கு வருவதற்கு நாம் எதிர்பார்க்கவும் இல்லை. கடந்த 10 வருடங்களாக ஜனாதிபதியுடன் நாம் பேசி யிருக்கின்றோம். குறிப்பாக மிகவும் விரிவான ஆழமான பேச்சுவார்த்தைகளில் நாம் ஈடுபட்டிருக்கின்றோம்.
எனவே, அவர்களின் நிலைப்பாட்டை நாம் நன்றாக அறிந்திருக்கின்றோம். எனவே அரசியல் தீர்வு செயற்பாடானது ஒரு தொடர் செயற்பாடாகும். அனைத்து விடயங்களையும் கருத்திற்கொண்டு நாட்டுக்கு புதிய ஜனாதிபதி ஒருவர் தெரிவுசெய்யப்படுவதானது அரசியல் தீர்வுக்கு ஆரோக்கியமான படிமுறையாக அமையும் என நாம் எண்ணுகின்றோம்.
ஹெல உறுமயவுடன் பேசுவோம்
கேள்வி: உங்களுடைய கோரிக்கைகளான காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம், 13 பிளஸ், இராணுவ முகாம்களை அகற்றுதல் என்பன ஆட்சி மாற்றத்தினால் எவ்வாறு சாத்தியமாகும்? காரணம் ஹெல உறுமய போன்ற கட்சிகள் அதில் உள்ளனவே?
பதில்: நாங்கள் எவரையும் உதாசீனம் செய்ய மாட்டோம். அதற்கு நாங்கள் தயாராக இல்லை. ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்திலிருந்த ஒரு கட்சியாகும். அவர் கள் தற்போது பிரிந்து வேறு வழியில் செல்கின்றனர்.
பிரிந்து செல்வதற்கான கார ணத்தைக் கூறிவிட்டே அவர்கள் இவ்வாறு செல்கின்றனர். நாங்கள் எவரையும் நம்பாமல் விடவில்லை. அவரை நம்பலாம், இவரை நம்பலாம், நம்ப முடியாது என்ற அடிப்படையில் நாம் எமது முடிவை எடுக்கவில்லை.
ஒட்டுமொத்த சூழலை ஆராய்ந்து இந்த சூழலில் எவ்விதமான நகர்வுகள் எமது மக்களுக்கு நன்மையாக அமையும் எனக் கருதி முடிவு எடுக்க வேண்டும். தற்போது அதற்கு மேலதிகமாக நாம் எதனையும் கூற முடியாது.
அனைவருடனும் பேசுவோம்
கேள்வி: ஹெல உறுமய அங்கம் வகிக்கின்ற எதிரணியில் உங்கள் ஆதரவு எவ்வாறு சாத்தியம்?
பதில்: ஹெல உறுமய ஜனாதிபதி மஹிந்தவுடன் நீண்டகாலமாக இருந்த கட்சி. இந்நிலையில் ஹெல உறுமய அங்கம் வகித்த ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துடன் நீண்டகாலமாக பேசியிருக்கிறோம்.
எனவே, ஹெல உறுமய எதிரணியில் இருக்கின்றது என்ற எளிய காரணத்துக்காக நாங்கள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் பேசக்கூடாது என்று கருதவில்லை. ஆனால் நாங்கள் ஜாதிக ஹெல உறுமயவுடனும் கூட பேசுவதற்கு தயாராக இருக்கிறோம். நாங்கள் எந்த அரசியல் அமைப்புக்களையும் நிராகரிக்கவில்லை. அனைத்து அரசியல் அமைப்புகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கி றோம்.
நாங்கள் அடையும் தீர்வானது முழு நாட்டுக்கும் நன்மையாக அமைவதை உறுதிப்படுத்துவதற்காக இவ்வாறு செய்வதற்கு தயாராக இருக்கிறோம். இதில் எமது மக்களும் நன்மையடைய வேண்டும்.
மைத்திரியின் வெற்றிக்கு அர்ப்பணிப்போம்
கேள்வி: மிகவும் குறுகிய காலத்தில் உங் கள் கட்சியினர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக உழைப்பதற்கு எவ்வாறான முயற்சிகளை முன்னெடுப்பர்? நீங்கள் முடி வை அறிவிக்கலாம். ஆனால் அர்ப்பணிப்பு எவ்வாறிருக்கும்?
பதில்: தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். எமது மக்களுக்கு எமது நிலைப்பாடு பற்றித் தெரியும். வடமாகாணத்தில் மாகாண சபைத் தேர்தல் 2013 ஆம் ஆண்டு நடைபெற்றது.
கிழக்கு மாகாணத்தில் 2012 ஆம் ஆண்டு நடைபெற்றது. இரண்டு மாகாணங்களிலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களும் நடைபெற்றன. எமது மக்களுக்கிடையில் நாம் அப்போது பிரசாரங்களை மேற்கொண்டிருந்தோம். மக்கள் எமது நிலைப்பாட்டை அறிந்திருந்தனர்.
பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் எமது மக்கள் வாக்களித்தனர். அந்த வகை யில் இன்று எமது இந்த தீர்மானத்தை அறிவிக்கின்றோம். எமது அறிவிப்புக்காக மக் கள் காத்திருந்தனர்.
எனவே ஊடகங்களின் உதவியுடன் இந்த செய்தி மக்களை சென்றடையும். அதேவேளை, முடியுமானவரை எமது முயற்சிகளையும் நாம் முன்னெடுப் போம். இந்த தீர்மானம் மக்களை சென்றடைவதற்காக நாம் உழைப்போம்.
வட மாகாண சபை செயற்பாடுகள் தடுக்கப்பட்டன
கேள்வி: வடமாகாண சபைத் தேர்தலில் பெற்ற வாக்கு வீதத்தைப் பெறுவீர்களா?
பதில்: இவ்வாறான கேள்விகளுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. வடமாகாண சபைத் தேர்தலின்போது மக்கள் ஆர்வமாக வாக்களித்தனர் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
மாகாண அரசாங்கம் தமக்கு நிவாரணங்களை வழங்கும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் வாக்களித்தனர். எனினும் துரதிஷ்டவசமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மற்றும் அவரது அரசாங்கத்தினால் வடமாகாண சபை மக்களுக்கு சேவையாற்றுவது தடுக்கப்பட்டது. செயற்திறனாக மாகாண சபை செயற்பட இடையூறு செய்யப்பட்டது.
எனவே எமது மக்களிடம் ஒரு கோரிக்கையை நாம் விடுக்கின்றோம். 2013 ஆம் ஆண்டு வடமாகாண சபைத் தேர்தலில் வாக்களித்ததை விட அதிகளவில் இந்தத் தேர்தலில் வாக்களிக்குமாறு மக்களிடம் கோருகின்றோம்.
அமைச்சுப் பதவிகள்
கேள்வி: மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றால் அவரது தேசிய அரசாங்கத்தில் நீங்கள் அமைச்சுப் பதவிகளை வகிப்பீர்களா?
பதில்: அது தற்போது ஆராயப்பட வேண்டிய விடயமல்ல. எமது மனதில் அந்த விட யம் தற்போது இல்லை. முதலில் ஜனாதிபதித் தேர்தல் முடிவடைய வேண்டும். ஜனாதிபதித் தேர்தல் முடிவின் பின்னரே அனைத்து விடயங்கள் குறித்தும் ஆராய முடியும்.
எதுவும் நிரந்தரமில்லை
கேள்வி: கடந்த 10 வருடங்களில் ஜனாதி பதியின் செயற்பாடுகளை பார்த்து இந்த முடிவை எடுத்ததாக நீங்கள் கூறுகிறீர்கள். அப்படியாயின் நீங்கள் 2001 ஆம் ஆண்டு புலிகள் ஏக பிரதிநிதிகள் என்று கூறினீர்கள்.
2005 ஆம் ஆண்டு புலிகள் தமிழ் மக்கள் வாக்களிக்கக் கூடாது என்று கூறியபோது அதை ஆதரித்தீர்கள். 2010 ஆம் ஆண்டு சரத் பொன்சேகாவை ஆதரித்தீர்கள். தற்போது மைத்திரிபாலவை ஆதரிக்கிறீர்கள். உங்கள் கட்சியின் கடந்த கால செயற்பாடுகளை ஆராய்ந்து பார்த்தீர்களா?
பதில்: உங்களின் இந்த கேள்விக்கு நான் நன்றி கூறுகிறேன். உலகில் எதுவும் நிரந்தரமில்லை. அனைத்தும் மாற்ற மடையக் கூடியன. ஆயுதம் தாங்கிய அமைப்பான புலிகள் இந்தநாட் டில் இருந்தபோது நாட்டின் நிலை மை வித்தியாச மாக இருந்தது.
அந்த அமைப்பின் முடிவின் பின்னர் நாட்டில் புதிய நிலைமை உருவாகியது. அனைவரும் சுதந்திரமாக முடிவெடுக்கும் நிலைமை உருவாகியது. நாமும் அதில் உள்ளடங்குகின்றோம். அரசாங்கம், எதிர்க்கட்சிகள் அனைத்தும் இதில் உள்ளடங்குகின்றன.
2001 ஆம் ஆண்டு புலிகளுடன் பேச்சு நடத்தும் தேவை அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிக்கும் இருந்தது. அந்த சந்தர்ப்பத்தில் புலிகளுக்கு சில முக்கியத்துவங்கள் இருந்தன.
மேலும் பேச்சுவார்த்தைகள் புலிக ளின் ஊடாக நடத்தப்படுவதை தமிழ் மக் கள் நம்பினர். 2005 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் வாக்களிக்கக் கூடாது என புலிகள் கோரிக்கை விடுத்தனர். தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை.
நாங்கள் உங்களிடம் உண்மையை கூறுகின்றோம். அந்த நேரத்தில் நாங்கள் வகிப்பதற்கு ஒரு வகிபாகம் இருக்கவில்லை. மக்கள் புலிகளை மீறி வாக்களிக்க வரவில்லை.
2005 வெற்றி
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் வெற்றி இந்த வாக்கு பகிஷ்கரிப்பினாலேயே கிடைத்தது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த கேள்விக்கு இதற்கு அப்பால் பதில் சொல்ல விரும்பவில்லை.
ஆனால் அந்த வாக்கு பகிஷ்கரிப்பு எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதற்கு பல கதைகள் உள்ளன. உங்களுக்கு அந்தக் கதை தெரிந்திருக்கலாம். நாங்களும் அது குறித்து கேள்வியுற்றோம்.
கடந்த காலங்களில் என்ன நடந்தது? நிகழ்காலத்தில் என்ன நடக்கிறது? எதிர்கலத்தில் என்ன நடக்கப்போகிறது? என்பதை ஆராய்ந்தே நாம் தீர்மானங்களை எடுக்க வேண்டியிருக்கிறது.
நாங்கள் தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது. வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் அவர்களுடைய நம்பிக்கையை எம்மீது காட்டியுள்ளனர். எமது பொறுப்பை நாங்கள் தட்டிக்கழிக்க முடியாது. அந்த மக்களுக்காக நாங்கள் தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது.
திஸ்ஸவை கவனத்திற்கொள்ளவில்லை
கேள்வி: எதிரணிக்கு கூட்டமைப்புடன் அந்தரங்க உடன்படிக்கை உள்ளதாக ஐ.தே.க.வின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளார். ரணில், சந்திரிகா, மைத்திரி அகியோர் கைச்சாத்திட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில்?
பதில்: அவரின் பேச்சுகளுக்கு நாம் மதிப்பளிப்பது தற்போது முடியாத விடயம். அவரைப்பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.
பிரசார மேடைகளில் ஏறும் தீர்மானமில்லை
கேள்வி: மைத்திரிபாலவுக்காக பிரசார மேடைகளில் ஏறுவீர்களா?
பதில்: மைத்திரிபால சிறிசேன இன்று (நேற்று) யாழ்ப்பாணத்தில் பிரசார கூட்டத்தை நடத்துகின்றார். அந்த விடயத்தில் நாங்கள் தீர்மானம் எடுக்கவில்லை.
கேள்வி: இதில் ஏதாவதொரு தய னாதிபதியாக தெரிவு செய்யப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். அதற்காக எமது முழுமையாக ஆதரவை அவருக்கு வழங்கியுள்ளோம். அதற்கு அப்பால் எதனையும் நான் கூற வேண்டிய அவசியம் இல்லை.
சுமந்திரன் கருத்து
எமது பிரச்சினைகள் தொடர்பில் நாம் பலருடன் பலமுறை பேசியுள்ளோம். ஆனால் மைத்திரிபால சிறிசேனவுடன் நாம் எந்தவொரு உடன்பாட்டுக்கும் வர வில்லை. அவருடன் அரசியல் தீர்வு, இராணுவ முகாம் அகற்றுதல் உள்ளிட்ட எந்தவொரு விடயம் தொடர்பிலும் நாம் உடன்பாட்டுக்கு வரவில்லை. எமது தீர்மானத்தை நாம் தெளிவாக அறிவித்துள்ளோம்.
முழு நாட்டினதும் நிலைமைகளை கருத்திற்கொண்டு நாம் தீர்மானத்தை அறிவித்துள்ளோம். ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதே எமது முதன்மை கோரிக்கையாகும்.
ஜனநாயக சூழல் உருவாக்கப்பட்டதன் பின்னர் நாம் யாருடனாவது பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். ஜனநாயக சூழல் இருப்பின் அனைவரும் சுதந்திரமாக பேச்சுவார்த்தை நடத்த இயலும்.
அவ்வாறான சூழலுக்கு இந்த நாட்டை கொண்டு செல்ல வேண்டும் என்பதே எமது கோரிக்கை. அது எமக்கு மட்டுமல்ல இந்த நாட்டின் அனைத்து மக்களுடனும் சம்பந்தப்பட்ட பிரச்சினை. நாட்டுக்காகவே இந்த முடிவை எடுத்துள்ளோம்.
பின்கதவால் தீர்வு முடியாது
சம்பந்தன் (பதில்) இந்த இடத்தில் ஒரு விடயத்தை மிகவும் தெளிவாக குறிப்பிட வேண்டும். தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வானது பின் கதவு கொடுக்கல் வாங்கல்களினால் தீர்க்கப்பட முடியாது என்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுதியான நிலைப்பாடாகும்.
அது சாத்தியமற்றதாகும். அந்த வழியை பின்பற்றுவதற்கு நாம் தாயராக இல்லை. எமது நிலைப்பாடு என்னவெனில் முழு நாட்டுக்கும் இந்த செயற்பாடு வௌிப்படையாக தொிய வேண்டும். தீர்வு விடயத்தில் என்ன நடக்கின்றது என்பதை முழு நாடும் அறிந்திருக்க வேண்டும்.
முழு நாடும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வொன்றுக்கே நாம் செல்ல வேண்டும். நாம் அமைதியான கௌரவமான நிரந்தரமான தீர்வொன்றுக்காக அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம்.
பிளவுபடாத ஐக்கிய இலங்கைக்குள் இந்தத் தீர்வை காண்பதற்கு அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். தீர்வானது நீதியானதாகவும் நியாயமானதாகவும் செயற்படக் கூடியதாகவும் நிலைத்து நிற்கக் கூடியதாகவும் அமைய வேண்டும்.
முழு நாடும் இதை ஏற்க வேண்டும். இந்த நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லிம் பேதமற்ற அனைத்து மக்களும் இவ்வாறான தீர்வொன்றுடன் பயணிப்பதற்கு தயாராக இருக்கின்றனர் என்பதில் நாம் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
அரசு பயன்படுத்தவில்லை
கேள்வி: மைத்திரிபால வெற்றிபெற்று ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டால் உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என நீங்கள் நம்புகிறீர்களா?
பதில்: இந்த நாடு கடந்த காலங்களில் பல மாற்றங்களுக்கு உள்ளானது. இந்த நாட்டில் இராணுவ மோதல் இனியும் இல்லை. அதுவே நியாயமான நிரந்தரமான தீர்வொன்றுக்கு பொருத்தமான சூழலாகும். தற்போதைய அரசாங்கம் மற்றும் ஜனாதிபதி அந்த சூழலை ஒரு நியாயமான தீர்வினை அடைவதற்காகப் பயன்படுத்தவில்லை.
எனவே இந்த சூழலை அரசாங்கமும் ஜனாதிபதியும் பயன்படுத்தாத காரணத்தினாலும் அவர்கள் அந்த சந்தர்ப்பத்தை தாமதப்படுத்தவும் தவிர்க்கவும் பயன்படுத்தியதாலும் சிரேஷ்ட அரசியல்வாதியும் அனுபவமிக்க தலைவருமான மைத்திரிபால சிறிசேனவுக்கு அனைவரும் ஏற்கக் கூடிய தீர்வை கொண்டுவருவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என தீர்மானித்தோம்.
தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை
கேள்வி: மக்களை வாக்களிப்பிலிருந்து தவிர்ப்பதற்கு முயற்சிப்பதாக தகவல்கள் வருகின்றன. இது தொடாபில் உங்கள் நிலைப்பாடு?
பதில்: மக்களை வாக்களிப்பிலிருந்து தவிர்ப்பவர்களிடம் இவ்வாறு செய்ய வேண்டாம் என நாம் கோரிக்கை விடுக்கின்றோம். நாம் முழுமையான ஜனநாயகத்தை நம்புகின்றோம். எனவே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என கோரிக்கை விடுக்கின்றோம். இவற்றை தடுப்பதற்கு சட்டத்திலும் சந்தர்ப்பம் உள்ளது.
மக்கள் தமது உரிமையை பயன்படுத்த வேண்டும். இது தேர்தல் ஆணையாளரின் கடமையாகும். சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்களுக்கும் இங்கு பொறுப்பு உள்ளது. மக்களின் வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்துமாறு தேர்தல் ஆணையாளரிடமும் பொலிஸ்மா அதிபரிடமும் சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்களிடமும் நாம் கோரிக்கை விடுக்கிறோம்.
கேள்வி: எந்த நம்பிக்கையின் அடிப்படையில் மைத்திரிபாலவுக்கு ஆதரவு வழங்குகிறீர்கள்?
(சம்பந்தன் பதில்)
மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திலிருந்து பிரிந்து வெளியேறி வந்துள்ளார். அரசாங்கம் தீர்வை கொடுக்க தவறிவிட்டது. ஜனநாயகம் பாராளுமன்றத்தின் இறைமை, நீதித்துறையின் சுயாதீனம், ஊழல் மோசடி, ஊடக சுதந்திரம் ஆகியவற்றில் தோல்வி கண்டுவிட்டது. அதனால்தான் மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திலிருந்து வெளயேறியுள்ளார். எனவே அவர் மீது நாம் நம்பிகை வைத்தள்ளோம்.
மைத்திரி தயக்கத்துடன்?
கேள்வி: தேசிய பிரச்சினை தொடர்பில் மைத்திரிபால ஒருவித தயக்கத்துடன் இருப்பதாக தெரிகிறது. எனவே அவர் பதவிக்கு வந்தால் இதனை நிறைவேற்றுவார் என நம்ப முடியுமா?
பதில்: அவர் தயக்கத்துடன் இருப்பதாக நான் கருதவில்லை. இது தொடர்பில் அரசாங்கமும் ஜனாதிபதியும் செய்யும் பிரசாரங்களை முழு நாடும் அறிந்துள்ளது. அவர் எவ்வாறு செயற்படுவார் என கேட்பதற்கு முதல் அவருக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.
கேள்வி: பதவிக்கு வந்தபின்னர் அவர் மாறுவார் என நம்புகிறீர்களா?
பதில்: அந்த மனிதர் தொடர்பில் நான் ஒரு முடிவுக்கு இன்னம் வரவில்லை. அவர் ஒருவேளை பழைய தலைவர் போன்றே இருக்கலாம். அவர் நிச்சயம் மாற வேண்டும்.
மைத்திரி தோல்வியடைந்தால்….
கேள்வி: மைத்திரிபால சிறிசேன தோல்வியடைந்தால் என்ன நடக்கும்?
பதில்: தேர்தல் ஒன்று வரும்போது அந்தத் தேர்தலில் அரசியல் கட்சிகளும் மக்களும் தங்களுடைய சிந்தனைகளின் அடிப்படையில் அப்போது காணப்படும் நிலைமை கொண்டு முடிவுகளை எடுக்க வேண்டும். சில நேரம் அது வெற்றியில் அமையலாம். சில நேரம் தோல்வியடையலாம்.
தோல்வி அடைந்தால் அந்த சூழலில் என்ன செய்வதென்று ஆராய்ந்து அந்த சந்தர்ப்பத்தில் முடிவெடுப்போம். ஆனால் நாட்டின் அனைத்து மக்களும் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாவதற்கு தமது ஆதரவை வழங்குவார்கள் என நாம் தீவிரமாக நம்புகிறோம்.