கடலில் விழுந்த ஏர்ஏசியா விமானம் விபத்துக்குள் சிக்குவதற்கு முன்னதாக நம்பமுடியாத அளவு உயரே சென்றுள்ளது என்று ரேடார் தகவல்கள் காட்டுகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தோனேஷியாவின் சுரபவா நகரில் இருந்து சிங்கப்பூர் நகருக்கு ஏர் ஏசியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான ‘ஏ320-200’ ரக விமானம் கடந்த 28ந் தேதி காலை புறப்பட்டுச் சென்றது. அதில் விமான ஊழியர்கள் 7 பேரும், 155 பயணிகளும் இருந்தனர்.
இந்த விமானம் புறப்பட்டுச் சென்ற அடுத்த ஒரு மணி நேரத்தில் ஜாவா கடல் பகுதியில் பறந்தபோது விமான கட்டுப்பாட்டு மையத்துடன் கொண்டிருந்த தொடர்பை இழந்தது.
தொடர்ந்து விமானம் பற்றிய தகவல் எதுவும் கிடைக்காததால் அந்த விமானம் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. விமானத்தை தேடும் முயற்சியில், இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், தென்கொரியா நாடுகளைச் சேர்ந்த 30 கப்பல்கள், 15 விமானங்கள், 7 ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டன.
சிங்கப்பூர் அதிகாரிகள் தேடுதல் பணியில் ஈடுபட்ட காட்சி
இந்தோனேஷியாவின் ஜாவா கடல் பகுதியில் (கரிமட்டா ஜலசந்தி பகுதியில்) 162 பேருடன் மாயமான ஏர்ஏசியா விமானத்தின் பாகங்களும், சில மனித உடல்களும் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விமானத்தின் சிதைவு, ஜாவா கடலின் அடிப்பகுதியில் இருப்பதை ஒலி அலைகள் மூலம் கண்டறியும் சோனார் முறையை பயன்படுத்தி கண்டுபிடிக்கப்பட்டது.
விமானத்துக்கு என்ன நேர்ந்தது என்பதை கண்டறிய உதவும் கருப்பு பெட்டியையும், பலியானவர்களின் உடல்களையும் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
உயிரிழந்தவரின் உடலை மீட்கும் ராணுவம்.
விமானம் விழுந்ததாக கருதப்படும் பகுதியில் பலத்த மழையும், சூறாவளி காற்றும் வீசுவதாலும், 3 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழுவதாலும், இந்தப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
7 பேரது உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. பலியான உடல்களில் பலவற்றில் உடைகள் இருந்தன. 3 பேரது உடல்கள் கைகளை கட்டிக்கொண்டிருந்த நிலையில் காணப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
மீட்கப்பட்ட உடல்களில் விமான பணிப்பெண் ஒருவரது உடலும் அடங்கும். உடலில் இருந்த சீருடையை வைத்து அது அடையாளம் காணப்பட்டது.
மீட்கப்பட்ட மற்றொரு உடலில், ‘லைப் ஜாக்கெட்’ அணிந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே விமானம் கடலில் விழுவதற்கு முன்னோ, கடலில் மோதிய பின்னோ அல்லது மூழ்குவதற்கு முன்னோ சிறிது கால அவகாசம் கிடைத்திருக்கிறது, அதில்தான் அவர் உயிர் பிழைக்கும் அவசரத்தில் உயிர் காப்புசட்டையை அணிந்துள்ளார் என யூகிக்க முடிகிறது.
உயிரிழந்தவரின் உடல் விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் கடலில் விழுந்த ஏர்ஏசியா விமானம் விபத்துக்குள் சிக்குவதற்கு முன்னதாக நம்பமுடியாத அளவு உயரே சென்றுள்ளது என்று ரேடார் தகவல்கள் காட்டுகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
விமானம் வித்துக்குள்ளானது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அதிகாரிகளால் ரேடார் டேட்டா தரவுகள் பரிசோதனை செய்யப்பட்டன. அப்போது ஏர் ஏசியா விமானம் விபத்துக்குள் சிக்குவதற்கு முன்னதாக நம்பமுடியாத அளவு உயரே சென்றுள்ளது என்று ரேடார் தகவல்கள் காட்டியுள்ளன என்று விசாரணை அதிகாரிகள் வட்டார தகவலகள் வெளியாகியுள்ளது. இதுவே விமானம் விபத்துக்குள் சிக்குவதற்கான காராணமாக இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.
இந்த டேட்டா தரவுகள் ஏர்ஏசியா விமானம் மாயமாவதற்கு முன்னதாக ஜகார்த்தாவில் உள்ள விமான கட்டுப்பாட்டு அறையில் ஸ்கிரினில் வெளியானவை. என்று விசாரணை அதிகாரிகளின் ஆரம்பகட்ட விசாரணையில் இது தெரியவந்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
“விமானம் விபத்துக்குள் சிக்குவதற்கு முன்னதாக ரேடார் டேட்டாவில் காட்டப்படுவது நம்பமுடியாத உயரம். விமானம் உயர்த்தப்பட்ட வீதம் மற்றும் அளவு மிகவும் உயரமானது. இது விமானத்தின் செயல்பாட்டையும் தாண்டியதாக உள்ளது,” என்று விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஆனால் ஏர்ஏசியா விமானத்தின் பைலட் மிகவும் அனுபவம் வாய்ந்தவர் என்றும் தொழில்முறை நன்றாக தெரிந்தவர் என்றும் அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
அனுமதி அளிக்கப்படவில்லை
ஜாவா கடல் பகுதியில் 32 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தில் பறந்து கொண்டிருந்தபோது அடர்த்தியான மேகங்கள் காரணமாக விமானத்தை 38 ஆயிரம் அடி உயரத்தில் அனுமதிக்கும்படி விமானி தரைக்கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு கேட்டு இருக்கிறார்.
ஆனால், அந்த பகுதியில் எந்த நேரமும் தொடர்ந்து விமானங்கள் பறந்தவாறே இருக்கும் என்பதால் இதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் அடுத்த 5 நிமிடங்களில் விமானம் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை விமானம் இழந்துள்ளது. இந்த தகவலை இந்தோனேஷிய விமான நிலைய அதிகாரி ஒருவரும் உறுதி செய்தார்.
விமானம் பெலிதுங் தீவு பகுதியில் தென்கிழக்கு தன்ஜூங் பாண்டன் பகுதியில் 100 கடல் மைல் தொலைவில் இருந்த வரை அதன் நிலை தெரிந்து உள்ளது. அதன்பிறகுதான் தொடர்பு துண்டிக்கப்பட்டது என்று கூறப்பட்டது.
விமானி விமானத்தை உயர்த்த அனுமதி கேட்ட பின்னர், ஜாகார்த்தா விமான கட்டுப்பாட்டு மையம் எழு மயில் தூரம் 34 ஆயிரம் அடி உயரத்திற்கு விமானத்தை கொண்டு செல்ல அனுமதித்ததாகவும், ஆனால் விமானத்தில் இருந்து எந்தஒரு பதிலும் வரைவில்லை என்றும் விமானம் காலை 6;18 மணிக்கு முன் மறைந்தது ஏடிசி ராடார் மூலம் கண்டறியப்பட்டது. என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.
திடீரென விழுந்திருக்காது
இது தொடர்பாக வளைகுடா விமானி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், ‘கடலில் இருந்து மீட்கப்பட்ட ஒருவரது உடலில் உயிர் காப்பு சட்டை இருந்தது என்பதை வைத்து பார்க்கும்போது, விமானம் முதலில் செயலிழந்திருக்க வேண்டும். அதன்பின்னரே கீழே வந்திருக்க வேண்டும். கருவிகள் குளிர்ந்துபோய், விமானிகளுக்கு தவறான தகவல்களை தந்திருக்க வாய்ப்பு உண்டு’ என்றார்.
மேலும், ‘கடலுக்குள் விமானம் திடீரென விழுந்திருக்க வாய்ப்பு இல்லை. கொஞ்சம் அவகாசம் இருந்திருக்க வேண்டும். அதாவது, நடுவானில் எதுவும் நடந்திருக்க வாய்ப்பில்லை. 30 ஆயிரம் அடியிலிருந்து கீழே வரவேண்டுமானால், ஒரு நிமிடமாவது ஆகும். புலப்பாடு தெளிவில்லாமல் இருந்ததை விமானி உணர்ந்திருக்கலாம்’ எனவும் தெரிவித்தார்.