“கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், மேற்குலக நாடுகள் சொல்வதும் பொய்.. காணொளியில் காண்பதே மெய்.
ஐ.எஸ். போராளிகளால் பணயக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டுள்ள பிரித்தானியரான ஜோன் கான்டில் ஈராக்கிய மொசூல் நகருக்குள் சுற்றுப் பயணம் மேற்கொள்வதை வெளிப்படுத்தும் புதிய வீடியோ காட்சியொன்று யூரியூப் இணையத்தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
ஈராக்கின் இரண்டாவது மிகப் பெரிய நகரான மொசூல் கடந்த வருடம் ஜூன் மாதம் இடம்பெற்ற மோதல்களின் போது ஐ.எஸ். போராளிகளால் கைப்பற்றப்பட்டிருந்தது.
மேற்படி மோதல்களின் போது ஐ.எஸ். போராளிகளால் கைதிகளாக பிடிக்கப்பட்ட 2000க்கும் மேற்பட்ட ஷியா இனத்தவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவிக்கிறது.
இந்நிலையில் புதிதாக வெளியிடப்பட்ட 8 நிமிட வீடியோ காட்சி ஜோன் கான்டில் கார் மற்றும் பொலிஸ் மோட்டார் சைக்கிளில் சந்தைப் பகுதியொன்றுக்கும் மருத்துவமனையொன்றுக்கும் பொலிஸ் நிலையமொன்றுக்கும் விஜயத்தை மேற்கொண்டு குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான அந்நகர் ஸ்திரத்தன்மையுடன் இருப்பதாக காண்பிப்பதை வெளிப்படுத்துகிறது.
இந்த வீடியோ காட்சியானது ஐ.எஸ். போராளி குழுவின் வெளிநாட்டு மொழிப் பிரிவான அல்ஹாயத் ஊடக நிலையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்படி வீடியோ காட்சியில் தோன்றிய புகைப்பட ஊடகவியலாளரான ஜோன் கான்டில், மொசூல் நகர் வழமைபோல் அமைதியாக இருப்பதாக குறிப்பிட்டார்.
அந்த வீடியோ காட்சி கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்குலக நாடுகளின் ஊடகங்கள் மொசூல் நகரிலுள்ள மக்கள் பயத்துடன் வாழ்வதாக தவறான தகவல்களை வழங்கி வருவதாக ஜோன் கான்டில் தெரிவித்தார்.
“ஐ.எஸ். போராளிகளின் வாழ்க்கை அழுத்தத்திற்குள்ளானதாகவுள்ளதாகவும் மக்கள் சங்கிலிகளால் கட்டப்பட்டு அடித்து ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ள தாகவும் மேற்குலக நாடுகள் சித்திரிக்க விரும்புகின்றன. ஆனால், உண்மையில் மொசூல் நகரில் வாழ்க்கை வழமை போல் உள்ளது” என அவர் கூறினார்.