ஒரு கிராமம். கிராமத்தில் வீடு. அந்த வீட்டில் இரு குடும்பங்கள். ஒரு குடும்பம் வலியது. மற்றையது எளியது. வலிய குடும்பத்திற்கு ஜமீன்தார்களின் ஆதரவு உண்டு.
அதற்கு எளிய குடும்பத்தைக் கண்டால் ஆகாது. தீராப் பகை. இந்தக் குடும்பங்கள் எந்நேரமும் சண்டை பிடிக்கும். சண்டை ஊராரை பிளவுபடுத்தும். சில சமயங்களில் கிராமிய பஞ்சாயத்து வரை செல்லும்.
எளிய குடும்பத்தில் இரு பிள்ளைகள். ஒருவன் போராளி. மற்றவன் அடங்கிப் போகின்றவன். போராளியோ, வலிய குடும்பத்தைப் பூண்டோடு அழிக்க வேண்டுமென கங்கணம் கட்டிக் கொண்டு அலைபவன்.
அமைதியானவனோ, ஊராருடன் கலந்து பேச விரும்புவான். வலிய குடும்பத்துடன் சமாதானமாக வாழும் வழி வகைகளைத் தேடுவான். ஜமீன்தார்கள் தந்திரமானவர்கள். போராளியை சண்டைக்காரனாக முத்திரை குத்தி, அமைதியானவனை சூசகமாக தமது கைக்குள் போட நினைப்பவர்கள்.
இங்கு சீண்டல்கள் உண்டு. வலிய குடும்பம் போராளிப் பிள்ளையை சீண்டும். போராளி வலிய குடும்பத்தை வம்புக்கிழுப்பான்.
வலிய குடும்பம் அறைக் கதவுகளை அடைத்து, எளிய குடும்பத்தை முடக்கி வைக்கும். பின்னர், எளிய குடும்பத்தின் அப்பாவிகளைத் தாக்கும். தொடர்ந்து ஜமீன்தார்கள் சமாதானம் பேச வருவார்கள். வலிய குடும்பம் இழைத்த கொடுமைகள் மறைக்கப்பட்டு விடும்.
வலிய குடும்பத்திற்கு கிராமத்து பஞ்சாயத்தைப் பற்றிக் கவலையில்லை. பஞ்சாயத்து ஜமீன்தார்களின் வார்த்தைக்கு கட்டுப்பட்டது என்பதை வலிய குடும்பம் அறியும்.
வலிய குடும்பம் எளிய குடும்பத்தின் காணியை அபகரிக்கலாம். இது எந்தன் நிலம் என வாதிடலாம். இது எளிய குடும்பத்தின் பூர்வீக இல்லம் என்பதை மறந்து, இங்கு எளிய குடும்பத்திற்கு இடமில்லை எனலாம். எதுவும் பிரச்சினையாக இருக்காது.
ஜமீன்தார்கள் வலிய குடும்பத்திற்காக பரிந்து பேசுவார்கள். எளிய குடும்பத்தை அழிப்பதற்காக மறைமுகமாக அரிவாளைக் கொடுப்பார்கள்.
வெளியில் இருவரையும் அழைத்து சமாதானம் பேசுவார்கள். சமாதானம் பேசுவதாக பாசாங்கு செய்வார்கள். பிறகு காணாமல் போய் விடுவார்கள். இன்று நேற்று மாத்திரமல்ல, இது காலாகாலமாக நடக்கும் நாடகம். சுழலும் சக்கரத்தைப் போன்றது.
இந்தக் கதை உண்மையானது. கிராமம் என்பதை சர்வதேச சமூகம் என்று மாற்றிக் கொள்ள வேண்டும். சர்ச்சைக்குரிய வீடு மத்திய கிழக்கில் உள்ளது. இதில் எளிய குடும்பம் பலஸ்தீனர்கள். வலிய குடும்பம் இஸ்ரேல்.
அமெரிக்கா தலைமையிலான மேற்குலகை ஜமீன்தார்கள் எனலாம். போராளியாக ஹமாஸ் இயக்கத்தையும், சமாதான விரும்பியாக பத்தா இயக்கத்தையும் குறிப்பிடலாம். பஞ்சாயத்து எதுவென்று அனுமானிப்பது எளிது. அது ஐக்கிய நாடுகள் சபை.
இந்த தொடர்கதையை படித்துக் கொண்டிருப்பவர்கள் மனதில் பல கேள்விகள் எழக்கூடும். இது இனிமேலும் இப்படியே சென்றுக் கொண்டிருக்குமா? எளிய குடும்பத்திற்கு விடிவே கிடையாதா? இவர்கள் எத்தனை நாட்கள் தான் அடக்குமுறைக்குள் சிக்கியிருப்பது? எல்லையிட்டு பிரிக்கப்பட்ட வீட்டுக்குள் சுதந்திரமாக நடமாட முடங்கிக் கிடப்பது? எளிய குடும்பம் என்பதற்காக எத்தனை நாட்கள் முகவரி இல்லாதவர்களாக வாழ்வது? எத்தனையோ கேள்விகள்.
இந்தக் கேள்விகளுக்கு பதில் கிடையாது என்பது ஜமீன்தார்களின் நம்பிக்கை. பதில் கிடைக்காமல் இருந்தால் தான் ஜமீன்தார்களுக்கு சந்தோஷம்.
அவர்களைப் பொறுத்தவரையில், எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எப்போதுமே அடக்கி ஆளப்பட வேண்டியவர்கள் என்பது ஜமீன்தார்களின் எண்ணம். எத்தகைய அநியாயங்கள் நடந்தாலும் ஊரார் பார்த்துக் கொண்டிருப்பார்களென ஜமீன்தார்கள் கருதியிருக்கக்கூடும்.
எளிய குடும்பத்திற்கு சண்டையிட்டுப் போரிடக் கூடிய வலு இல்லாமல் இருக்கலாம். அதற்காக, அடங்கியே இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
ஏதோவொரு வகையில் வட்டத்திற்குள் இருந்து விடுபட்டே ஆக வேண்டும் என்ற திடசங்கற்பம் உருவாகும் பட்சத்தில் எத்தனையோ வழிகள் உண்டு. அவை சூட்சுமமான வழிகளாகவும் இருக்கலாம்.
இன்று பலஸ்தீன அதிகாரசபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் இப்படியானதொரு வழியைத் தான் கையாண்டிருக்கிறார். இஸ்ரேலிய தரப்பு பலஸ்தீனர்களுக்கு இழைக்கும் கொடுமைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் தீர்வு காண முடியாது என்பதை அறிந்தார்.
இந்தக் கொடுமைகளை சர்வதேச சமூகம் உணருமானால், ஐக்கிய நாடுகள் சபை என்ற கட்டமைப்பிற்கு அப்பால் உலக நாடுகளின் ஆதரவைப் பெற முடியும் என்பதை அவர் உணர்ந்தார்.
அநியாயத்திற்காக நீதி கேட்டு செல்லும் குடும்பத்திற்கு பஞ்சாயத்தில் நீதி கிடைக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். பஞ்சாயத்தின் விசாரணைகள் அநீதியானவை என்பதை குடும்பம் முறையாக நிரூபிக்குமானால், சில சமயங்களில் ஊரார் பஞ்சாயத்திற்கு எதிராகத் திரும்பலாம்.
அவர்கள் குடும்பத்திற்காக அணி திரண்டு பஞ்சாயத்தின் மீது அழுத்தம் கொடுக்கலாம். பஞ்சாயத்தைத் தள்ளி வைத்து ஊரார் தீர்ப்புச் சொல்லக்கூடிய சாத்தியமும் உண்டு.
இதே சூட்சுமத்தைத் தான் மஹ்முத் அப்பாஸ் கையாண்டார். ஹமாஸ் இயக்கமும், பத்தா இயக்கமும் அங்கம் வகிக்கும் ஐக்கிய அரசாங்கத்தின் மூலம் பலஸ்தீன மக்கள் சார்பாக ஐ.நா. பாதுகாப்புச் சபையில் தீர்மானமொன்றை அவர் சமர்ப்பித்தார்.
தீர்மானத்தில் பெரிதாக ஒன்றும் இல்லை. இஸ்ரேலுடன் சமாதானம் பேசி, 2017ஆம் ஆண்டிற்குள் இஸ்ரேலின் முற்றுகைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை தான் இருந்தது.
**தீர்மானம் தோல்வி அடைய வேண்டும் என்பது அப்பாஸின் எதிர்ப்பார்ப்பாக இருந்திருக்க வேண்டும். இஸ்ரேலுடன் சமாதானமாக வாழ்வது என்ற நியாயமான கோரிக்கையைக் கூட அங்கீகரிக்காத பஞ்சாயத்துக் கட்டமைப்பில், பலஸ்தீனர்களுக்கு எந்த விதத்தில் நீதி கிடைக்கும் என்பதை வலியுறுத்துவது அவரது நோக்கம். அப்பாஸின் எதிர்ப்பார்ப்பை முற்றுமுழுதாக நிறைவேற்றும் வகையில், தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. அமெரிக்கா எதிர்த்து வாக்களித்தது. பிரான்ஸ் ஆதரவாக வாக்களித்ததும், பிரிட்டன் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடயங்கள்.
ஐக்கிய நாடுகள் சபை என்ற கட்டமைப்பிற்கு அப்பால், பலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் தேடுவது அப்பாஸின் முயற்சி என்றால், அதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. இன்று பல நாடுகள் பலஸ்தீனத்தை ஒரு தேசமாக அங்கீகரித்துள்ளன.
சுவீடனைத் தொடர்ந்து, சில ஐரோப்பிய நாடுகளும் பலஸ்தீன தேசத்தை அங்கீகரிப்பது பற்றி சிந்தித்து வருவதாகத் தெரிகிறது. பலஸ்தீனத்தின் தீர்மானத்திற்கு பிரான்ஸ் ஆதரவாக வாக்களித்தது என்றால் அதற்குக் காரணம், ஐரோப்பிய நாடுகள் தொடுத்த அழுத்தமே தவிர வேறொன்றும் அல்ல.
ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு அப்பால் உலக நாடுகளின் அங்கீகாரம் தேடும் முயற்சியை அப்பாஸ் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியிருக்கிறார். ஐ.நா. கட்டமைப்பிற்குள் இருந்தாலும் சுதந்திரமாக இயங்கக்கூடிய சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பலஸ்தீனத்தை இணைத்துக் கொள்ளும் முயற்சியை அவர் ஆரம்பித்துள்ளார். இந்த நீதிமன்றத்தின் செயற்பாடுகளுக்கும், கட்டமைப்பிற்கும் ஆதாரமாக அமைந்த ரோமன் சட்டத்தில் அப்பாஸ் புதன்கிழமை கைச்சாத்திட்டமை குறிப்பிடத்தக்கது.
நியூஸிலாந்தின் ஹேக் நகரில் இயங்கும் “International Criminal Court (ICC)” சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசீசீ) சற்று விவகாரமான அமைப்பாகும். இதில் போர்க் குற்றச்சாட்டுக்கள் பற்றிய வழக்குகள் விசாரிக்கப்படும். தமது மக்களுக்கு எதிராக இஸ்ரேலியப் படைகள் கட்டவிழ்த்து விட்ட அட்டூழியங்கள் பற்றி பலஸ்தீனர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முறையிடலாம்.
அது அப்பாஸின் நோக்கமல்ல. இஸ்ரேலிய படைகளுக்கு எதிராக பலஸ்தீனம் முறையிடும் பட்சத்தில், குற்றவியல் நீதிமன்றம் மேற்குக் கரையிலும் காஸாவிலும் நிகழ்ந்திருக்கக்கூடிய போர்க்குற்றங்களை விசாரிக்கலாம். இந்த விசாரணையில் இருந்து ஹமாஸ் இயக்கமும் தப்பிக்க முடியாது.
அப்பாஸின் நோக்கம், பலஸ்தீனம் என்ற தேசத்திற்கு அங்கீகாரம் கோருவதற்காக ஐசீசீயை பயன்படுத்திக் கொள்வது தான். 2009ஆம் ஆண்டு இஸ்ரேலிய இராணுவம் காஸா பள்ளத்தாக்கை முற்றுகையிட்டபோது, பலஸ்தீன அதிகாரசபை ஐசீசீ யின் முன்னிலையில் சென்றது.
ஆனால், ஐக்கிய நாடுகள் சபையோ, ஐசீசீ யின் அங்கத்துவ நாடுகளோ, பலஸ்தீனத்தை ஒரு தேசமாக கருதவில்லையென ஐசீசீயின் பிரதம வழக்குரைஞர் அன்று கூறினார். இன்று, ஐநா பொதுச்சபை பலஸ்தீனத்திற்கு ‘அங்கத்தவர் அல்லாத கண்காணிப்பு தேசம்’ என்ற அந்தஸ்தை வழங்கியிருக்கிறது. ஐசீசீ யில் அங்கத்துவம் பெற்றால், பலஸ்தீன தேசத்திற்கு அங்கீகாரம் கிடைக்கும் என்பது அப்பாஸின் கணிப்பு.
இன்று பலஸ்தீன சமூகத்தைப் போன்ற எத்தனையோ சமூகங்கள், தம்மை விடவும் வலுவான சமூகங்களின் அடக்குமுறைகளுக்கு உள்ளாகி வருவதைக் காண்கிறோம். இந்த சமூகங்கள் ஐக்கிய நாடுகள் என்ற கட்டமைப்பின் ஊடாக நியாயம் பெற முடியாத நிலை சமகாலத்தின் துரதிருஷ்டமாகும்.
ஐநாவைத் தாண்டிய தீர்வு முயற்சியின் ஊடாகவும் நினைத்ததை சாதிக்க முடியும் என்பதற்கான வழியை அப்பாஸ் காட்டியிருக்கிறார். அவரது ராஜதந்திரத்திற்குக் கிடைக்கும் வெற்றி அடக்குமுறைகளுக்கு உள்ளாகும் பல சமூகங்களுக்கு விமோசமான அமையக்கூடும்.
-சதீஷ் கிருஷ்ணபிள்ளை –
பிந்திய செய்தி
பலஸ்தீன தேசத்தைக் கோரும் தீர்மானத்தை ஐ.நாவில் மீண்டும் கொண்டுவர அப்பாஸ் முடிவு: பலஸ்தீனத்தின் வரி வருவாய் இஸ்ரேலால் முடக்கம்
January 5th, 2015
பலஸ்தீன தேசத்தை நிறுவுவதற்கு அழைப்புவிடுக்கும் தீர்மானம் ஒன்றை ஐ.நா. பாதுகாப்புச் சபையில் கொண்டு வருவது குறித்து ஜோர்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் முன்வைக்கப்பட்ட இதே போன்ற ஒரு தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளை பெறாமல் தோல்வி அடைந்தது. எனினும் முன்வைக்கவிருக்கும் புதிய தீர்மானத்திற்கு ஐ.நாவில் அதிக ஆதரவு கிடைக்கும் என்று பலஸ்தீன அதிகா ரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னர் முன்வைக்கப்பட்ட தீர்மான த்தில் 2017 க்கு முன்னர் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பலஸ்தீன சுதந்திரத்திற்கு கோரப்பட்டிருந்தது. கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி இடம்பெற்ற வாக்கெடுப்புக்கு எதிராக அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்த வாய்ப்பு இருந்தபோதும் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு போதுமான ஆதரவு இன்றியே தோல்வி அடைந்தது.
‘நாங்கள் தோல்வியடையவில்லை. பாதுகாப்புச் சபையே எம்மை தோல்வியடையச் செய்தது. நாம் மீண்டும் பாதுகாப்புச் சபைக்கு செல்வோம். ஏன் முடியாது? அநேகமாக இன்னும் ஒருவாரம் கழித்து நாம் அதனைச் செய்வோம்” என்று மேற்குக் கரை நகரான ரமல்லாஹ்வில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கலாசார மாநாடொன்றில் பங்கேற்று உரையாற்றும்போது அப்பாஸ் குறிப்பிட்டார்.
ஐ.நாவில் பலஸ்தீனம் சுயாட்சி கொண்ட அரசுக்கான இடத்தில் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
‘நாம் இதனை பரிசீலனை செய்வோம். ஜோர்தான் உட்பட எமது நட்பு நாடுகளுடன் இணைந்து பரிசீலனை செய்வோம். இந்த தீர்மானத்தை மீண்டும் ஒருமுறை முன்வைப்போம். மூன் றாவது அல்லது நான்காவது முறை கூட இதனை முன்வைப் போம்” என்று அப்பாஸ் கூறினார்.
கடந்த செவ்வாய்க்கிழமை வாக்கெடுப்பு நடத்தப்பட்ட பலஸ் தீன தீர்மானத்திற்கு ஆதரவாக 15 அங்கத்துவ நாடுகள் கொண்ட பாதுகாப்புச் சபையில் 8 நாடுகள் ஆதரவாக வாக் களித்தன. அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா எதிராக வாக்களித்ததோடு ஏஞ்சிய நாடுகள் வாக்களிக்கவில்லை.
இந்த நிலையில் இந்த தீர்மானம் மீண்டும் பாதுகாப்புச் சபையில் முன்வைக்கப்பட்டாலும் அது தோல்வியடைவது பெரும்பாலும் உறுதியாகியுள்ளது. பாதுகாப்புச் சபையின் ஐந்து நிரந்தர அங்கத்துவ நாடுகளில் ஒன்றான வீட்டோ அதிகாரம் கொண்ட அமெரிக்கா, இந்த தீர்மானம் ஒரு பக்கச் சார்பானது மற்றும் ஆக்க பூர்வமற்றது என்று குற்றம்சாட்டியது.
பாதுகாப்புச் சபையில் குறித்த தீர்மானம் தோல்வி அடைந்த அடுத்த தினத்திலேயே அப்பாஸ் 20 சர்வதேச உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டிருந்தார்.
இதில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் உடன்படிக் கையிலும் அவர் கைச்சாத்திட்டிருந்தார். இதன் மூலம் இஸ்ரேல் மீது யுத்த குற்றச்சாட்டுகள் சுமத்தும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
பலஸ்தீனத்தின் இந்த நடவடிக்கைகளை அடுத்து பலஸ்தீனர்களிடம் இருந்து பெறப்ப டும் 125 மில்லியன் டொலர் வரி வருவாயை இஸ்ரேல் கடந்த சனிக்கிழமை முடக்கியது. ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் அப்பாஸ் அரசு இந்த நடவடிக்கையால் மேலும் சிக்கலை எதிர்கொண்டுள்ளது.
‘தற்போது பொருளாதார தடையை எதிர்கொண்டிருக்கிறோம் – பிரச்சினை இல்லை. முடக்குதல்களும் விரிவுபடுத்தப்பட் டிருக்கிறது – அதுவும்; பிரச்சினை இல்லை. ஆனால் தொடர்ந்து முன்னோக்கிச் செல்வோம்” என்று அப்பாஸ் உறுதி அளித்தார்.
பலஸ்தீனம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இணையும் நடவடிக்கைக்கு எதிராக அதன் மீது மேலும் தடைகளை விதிக்க இஸ்ரேல் ஆலோசனை நடத்திவரும் நிலையிலேயே மீண்டும் ஒருமுறை பாதுகாப்புச் சபைக்குச் செல்ல அப்பாஸ் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வரி வருவாயை முடக்கிய இஸ்ரேலுக்கு பதிலளித்த அப் பாஸ், இஸ்ரேல் தமது மக்களை பட்டினியில் தள்ள முயற்சிப் பதாகவும் ஒரு பாரிய தண்டனையை ஏற்படுத்தியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
2014 காசா தாக்குதலை இஸ்ரேல் மீதான முதல் யுத்த குற்றச்சாட்டாக தொடுக்க பலஸ்தீனம் முடிவு
05-01-2014
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ஐ.சி.சி.) இஸ்ரேலுக்கு எதிராக பலஸ்தீனத்தின் முதலாவது குற்றச்சாட்டாக, காசா தாக்குதல் உட்பட 2014 கோடை காலத்தில் அது மேற்கொண்ட குற்றச்செயல்கள் இருக்கும் என்று சட்ட நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஹேகை மையமாகக் கொண்டு இயங்கும் ஐ.சி.சியில் இணைவதற்கான பூர்வாங்க விண்ணப்பத்தை பலஸ்தீனம் கடந்த ஜனவரி 2 ஆம் திகதி சமர்ப்பித்தது. இதன்மூலம் ஆக்கிரமிப்பு நிலத்தில் இஸ்ரேல் மேற்கொண்ட யுத்த குற்றங்கள் குறித்து முறையிட பலஸ்தீனத்திற்கு வாய்ப்பு உள்ளது.
கடந்த 2002 ஜ{லை முதலாம் திகதி ஐ.சி.சியின் ரோம் உடன்படிக்கை அமுலுக்கு வந்தது தொடக்கம் அதில் இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றச்செயல்கள் மற்றும் யுத்த குற்றச்சாட்டுகளில் தனி நபர்கள் மீது குற்றம் சுமத்த முடியும்.
இந்த விண்ணப்ப செயல்முறைகள் திட்டமிட்டபடி மேற்கொள்ளப்படும் பட்சத்தில் பலஸ்தீனத்திற்கு எதிர்வரும் ஏப்ரல் ஆரம்பத்தில் வழக்கு தொடுக்க முடியும். இதற்கான சட்ட தாயார்படுத்தல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதில் 2014 ஜ{ன் மாதம் 13 ஆம் திகதி தொடக்கம் இஸ்ரேலின் காசா, மேற்குக் கரை மீதான நடவடிக்கைகள் குறித்து பலஸ்தீனம் வழக்குத் தொடுக்க திட்டமிட்டிருப்பதாக ரமல்லாஹ்வை மையமாகக் கொண்டு இயங்கும் அல் ஹக் உரிமைக் குழுவின் இயக்குனர் ‘வான் ஜபரின் குறிப்பிட்டார்.
மேற்படி தினத்திலேயே மூன்று இஸ்ரேல் இளைஞர்கள் கடத்தப்பட்டதற்காக மேற்குக் கரை மீது இஸ்ரேல் சுற்றிவளைப்புகளை நடத்தி அதன் தொடர்ச்சியாக காசாவில் 7 வாரங்கள் மோதல் நீடித்தது. இந்த மோதலில் 2,300க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு இஸ்ரேல் தரப்பில் 73 பேர் பலியாகினர்.