‘மிஸ்டர் பிரபாகரன்’ என்று கூறுவதில் தவறேதுமில்லை. சிங்கள மக்கள் எதிரியையும் நண்பனாக கவனிக்கும் மனப்பான்மை கொண்டவர்கள்.
எனினும் மஹிந்த ராஜபக்ஷ முதலில் பிரபாகரனுக்கு ‘மிஸ்டர்’ என்று அழைத்தவர். அதேபோன்று 600 பிக்குகளை கொன்ற கருணா அம்மானுக்கு ‘மாண்புமிகு அமைச்சர்’ என்ற நாமம் சூட்டியவரும் மஹிந்தவே ஆவார் என்று மாத்தறை மாவட்ட ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
இதேவேளை ஜனவரி 9ஆம் திகதி மைத்திரிபால சிறிசேன வெற்றி வாகை சூடிய பின்பு ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது. அவர்களது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;
இம்முறை ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் எழுதப்பட வேண்டியதொன்றாகும். நாட்டின் பெரும் கட்சிகளான ஐ.தே.க. வும் சு.க. வும் ஒன்றிணைந்து போட்டியிடும் தேர்தலாகும்.
அத்தோடு இந்த கூட்டணியுடன் தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் பிரதி நிதித்துவப்படுத்தும் கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளன. நாட்டின் புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்தவே நாம் ஒன்றிணைந்துள்ளோம்.
தற்போது ஐ.தே.க. வினர் மாத்திரமன்றி சு.க வினரும் தனக்கு வேலைவாய்ப்பின்றி கிராம புறங்களில் அவதிப்படுகின்றனர். இந்த யுகத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
இம்முறை தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷவிற்கு ஆதரவாக பிரசாரம் செய்ய அவரது குடும்ப உறவினர்களே முன்வந்துள்ளனர். எனினும் அரசியல்வாதியாக களமிறங்குவதாக தெரியவில்லை. குடும்பத்தினருக்கு மட்டுப்படுத்தப்பட்ட பிரசாரமாகவே ராஜபக் ஷவின் தேர்தல் நடவடிக்கை காணப்படுகின்றது.
இதற்கு அப்பால் பொதுபலசேனா அமைப்பே ராஜபக்ஷவின் கைப்பைக்குள் உள்ளது. இதனால் மஹிந்த ராஜபக் ஷவிற்கு இன்னும் வாக்கு சரிவு ஏற்படும்.
புலிச்சாயம்
அத்தோடு தற்போது எதிரணியின் மீது புலிச்சாயம் பூசுகின்றனர். எனினும் கருணா அம்மான் கே.பி. ஆகியோர் ராஜபக்ஷவசமே உள்ளனர்.
இதற்கு அப்பால் அடிப்படைவாத தமிழ் அமைப்புக்கள் ராபஜபக்ஷ வசம். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சர்வதேச தமிழீழ அமைப்பு அனைத்தும் இத்தேர்தலை புறக்கணிப்பதாக கூறிக்கொண்டு ராஜபக் ஷவை ஆதரிக்கின்றனர்.
மிஸ்டர் பிரபாகரன்
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க விடுதலை புலிகள் தலைவரை மிஸ்டர் என்று கூறியதாக அரசு அமைச்சர்கள் அலட்டிக் கொள்கின்றனர்.
மிஸ்டர் பிரபாகரன் என்று கூறியதில் தவறில்லை. சிங்களவர்கள் எதிரியை கூட தனது நண்பனாக கவனிக்கும் மனப்பான்மை கொண்டவர்கள். இதற்கு துட்டகைமுனு மன்னனின் செயல் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
எனினும் தான் ஜனாதிபதி ஆனவுடன் வெளிநாட்டு தூதுவர்களின் உரையின்போது மிஸ்டர் பிரபாகரன் என்று கூறியவர் மஹிந்த ராஜபக் ஷவேயாகும்.
அதேபோன்று அநுராதபுரத்தில் 600 பிக்குகளை கொன்று குவித்த கருணா அம்மானை மாண்புமிகு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற நாமம் ??? வைத்தவர் ராஜபக் ஷவாகும்.
எனவே, இத்தகைய குற்றச்சாட்டுக்களை அலட்டிக்கொள்ள தேவையில்லை.
ராஜபக் ஷவினரின் பாதுகாப்பு
தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. தற்போது ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் குடும்ப மரம் என்ற நூலை தேடி பொலிஸ் சோதனைக்கு உட்படுத்தியுள்ளது. இந்த செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. குடும்ப மரம் சிறிகொத்தாவில் இல்லை. மாறாக அலரி மாளிகையில் உள்ளது.
எவ்வாறாயினும் ஜனாதிபதி 9ஆம் திகதி தேர்தலில் வெற்றி வாகை சூடிய பின்பு எதிரணியினர் அமைதி காக்க வேண்டும். குழப்பம் தேவையில்லை.
அதேபோன்று ராஜபக் ஷ குடும்பத்தினரும் அஞ்ச தேவையில்லை. அவர்களது பாதுகாப்பை நாம் உறுதிப்படுத்துவோம் என்றார்.
ஜெனிவா சவால்களை எதிர்கொள்ளவே கே.பி பாதுகாப்பாக வைத்துள்ளோம்!-சுசில் பிரேமஜயந்த
05-01-2015
ஜெனிவா சவால்களை எதிர்கொள்ளவே குமரன் பத்மநாதனை பாதுகாக்கின்றோம். இறுதிக்கட்ட மனிதாபிமான யுத்தத்தின் உண்மையான சாட்சியங்களில் இவர் முக்கியமானவரென தெரிவிக்கும் அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை பேண வேண்டிய அவசியம் தமக்கு இல்லையெனவும் குறிப்பிட்டது.
அரசாங்கத்தினால் நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்..
நாட்டில் சரியானதொரு தலைமைத்துவத்தினை ஏற்படுத்த வேண்டிய முக்கியமான தருணத்தில் நாம் உள்ளோம். ஜனாதிபதித் தேர்தலின் இறுதிக் கட்ட பிரசார செயற்பாடுகளில் நாம் தற்போது செயற்பட்டு வருகின்றோம்.
தற்போது வரையில் நாட்டில் சகல பகுதிகளிலும் உள்ள மக்களை சந்தித்து எமது ஆதரவினை பலப்படுத்தியுள்ளோம். அதேபோல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் நாட்டில் சகல மக்களையும் சந்தித்து மக்களின் மனதில் நிலைத்து விட்டார்.
இறுதியாக கடந்த சில தினங்களாக தமிழ் மக்களுடன் வடக்கில் எமது பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டோம். வடக்கில் வரலாறு காணாத தொகையில் தமிழ் மக்கள் எமது பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டனர்.
எமக்கு வடக்கில் மிகச் சாதகமானதொரு பொதுக் கூட்டத்தினை நடத்த நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்தது.
விடுதலைப் புலிகளின் காலத்தில் மக்கள் மனங்கள் எந்தளவு அடக்கப்பட்டிருந்தது என்பதற்கு அன்றைய பொதுக் கூட்டம் வெளிப்படுத்தியது. அதேபோல் மன்னாரிலும் ரிசாத் பதியுதீன் இல்லாமல் மிகப் பெரிய மக்கள் கூட்டம் குவிந்திருந்தது.
இதுவே எமது தேர்தல் வெற்றிக்கு நல்லதொரு எடுத்துக் காட்டாகும். எனவே, தற்போதுள்ள நிலைமையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியில் மூவின மக்களின் பங்களிப்பும் கிடைக்கும் என்பதை உறுதியாக எம்மால் தெரிவிக்க முடியும்.
அதேபோல் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுடன் ஜனாதிபதி இரகசிய தொடர்பினை வைத்திருப்பதாகவும் குமரன் பத்மநாதன் போன்றோரை அரசாங்கம் பாதுகாத்து வருவதாகவும் பொய் பிரசாரம் செய்கின்றனர்.
குமரன் பத்மநாதனுடன் ஜனாதிபதி கட்டித் தழுவுவதைப் போல் புகைப்படங்களை பிரசுரித்து அரசாங்கத்தின் மீது தவறான விமர்சனங்களை பரப்புகின்றனர்.
இவை முற்றிலும் தவறானதும் பொய்ப் பிரச்சாரமுமாகும். உண்மையிலேயே குமரன் பத்மநாதனை நாம் பாதுகாக்க சில முக்கிய காரணிகள் உள்ளது.
அடுத்த மார்ச் மாதம் ஜெனிவாவின் அறிக்கை வெளியிடப்படவுள்ளது. தற்போதே பல பொய்யான சாட்சியங்கள் சர்வதேச தரப்பினால் தயாரிக்கப்பட்டு விட்டது. அதற்கு நிகராக உண்மையான சாட்சியங்களை நாமும் வெளிப்படுத்த வேண்டும்.
இறுதிக் கட்ட யுத்தத்தில் நடந்த உண்மைச் சம்பவங்களை வெளிப்படுத்த எமக்கு இருக்கும் முக்கிய சாட்சியம் தற்போது குமரன் பத்மநாதன் மட்டுமே.
அதேபோல் இலங்கைக்கு வெளியில் சர்வதேச புலி அரசியல் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கைக்குள் பரவி விடக் கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். எனவே, ஜெனிவா சவாலை எதிர்கொள்ளவே குமரன் பத்மநாதனை அரசு பாதுகாக்கின்றது எனவும் அவர் தெரிவித்தார்.