‘உயிர் வாழும் பலர் மரண தண்­டனை பெற வேண்­டி­ய­வர்கள். மரண தண்­டனை பெற­வுள்ள பலர் உயிர் வாழ வேண்டியவர்கள். உங்­களால் உயிரைத் தர முடி­யுமா?

எனவே, உங்கள் தீர்ப்பில் மர­ணத்தைக் கையாள அதிக ஆர்வம் காட்ட வேண்டாம், என்பார், பிர­பல ஆங்­கில தத்­துவ ஞானியும் எழுத்­தா­ள­ரு­மான ஜே.ஆர்.ஆர்.ரொல்கீன். மரண தண்­டனை பற்­றிய அவ­ரது கருத்து அது.

அந்தக் கருத்து எந்த சூழ்­நி­லை­யுடன் பொருந்­து­மென எவ­ரேனும் கேட்­கலாம். இன்று மர­ணத்தின் வாசலில் நிற்கும் ஒரு தமிழனின் சூழ்­நி­லைக்குப் பொருந்­து­வதைப் போல வேறெந்த சூழ்­நி­லைக்கும் அது பொருந்­துமா என்­பது தெரி­ய­வில்லை.

அவரின் பெயர் மயூரன் சுகு­மாரன். 33 வய­துள்ள மனிதர். இந்­தோ­னே­ஷி­யாவின் பாலி தீவி­லுள்ள கெரோ­பொக்கான் சிறைச்சா­லையில் தமது வாழ்வின் இறுதி நாட்­களைக் கழிப்­பவர் இன்றோ, நாளையோ அவர் மீதான மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­ப­டலாம்.

மரண தண்­ட­னையை நிறை­வேற்­று­வ­தற்குப் பொறுப்­பான இந்­தோ­னே­ஷிய காவல் குழுவின் துப்­பாக்­கி­களில் இருந்து வெளியேறும் குண்­டுகள் மயூ­ரனின் உயிரைக் குடிக்­கலாம்.

மயூரன் மட்­டு­மல்ல, மயூ­ர­னுடன் குற்­ற­வா­ளி­யாக தீர்ப்­ப­ளிக்­கப்­பட்ட அன்ட்ரூ சான் என்ற 31 வயது மனி­த­ருக்கும் இதே கதி.

இன்று இராஜ­தந்­திர உலகில் அதிகம் பேசப்­படும் விவ­காரம், இவர்கள் மீதான மர­ண­தண்­டனை இதற்குப் பல கார­ணங்கள் இருக்­கின்­றன.

மனித உயிரின் பெறு­மதி, ஒரு இறை­மை­யுள்ள தேசத்தின் சட்­ட­திட்­டங்கள், சட்­டத்தை நிலை­நாட்­டு­வதில் தேசங்கள் கொண்டுள்ள நியா­யா­திக்க உரி­மைகள், இரு நாடுகள் மத்­தி­யி­லான இராஜ­தந்­திர உற­வுகள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

இவற்­றிற்கு மேலான விட­ய­மொன்றும் இருக்­கி­றது. அது வேறொன்றும் அல்ல. மனி­தா­பி­மானம்.

இன்று சுகு­மா­ர­னையும், சானையும் வாழ விட வேண்­டு­மென்ற கோரிக்­கைகள் வலுப்­பெற்­றுள்­ளன. இந்தக் கோரிக்­கை­களின் பின்­பு­லத்தில் பல நோக்­கங்கள் இருக்­கலாம். எந்­த­வொரு நோக்­கத்தை விடவும் மனி­தா­பி­மானம் என்­பது முக்­கி­யத்­துவம் பெறு­கி­றது.

942748-3x2-940x627 மயூ­ரனும், சானும் அவுஸ்­தி­ரே­லிய பிர­ஜைகள். மயூரன் லண்­டனில் பிறந்து அவுஸ்­தி­ரே­லி­யாவின் சிட்னி நகரில் வளர்ந்தவர்.

சீனாவில் இருந்து அவுஸ்­தி­ரே­லி­யாவில் குடி­யே­றிய தம்­ப­தியின் மகன், சான். இரு­வரும் நண்­பர்கள் என்­பதை விடவும் பாலி-நைன் என்­ற­ழைக்­கப்­படும் கும்­பலின் அங்­கத்­த­வர்கள் என்­பது சாலப் பொருந்தும்.

2005ஆம் ஆண்டில் இந்­தோ­னே­ஷி­யாவின் பாலி தீவில் இருந்து அவுஸ்­தி­ரே­லி­யா­விற்கு ஹெரோயின் போதைப் பொருளைக் கடத்த முயன்ற சம­யத்தில் கைதா­ன­வர்கள். இவர்கள் இருவர் மீதான குற்­றச்­சாட்­டுக்­களும் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2006ஆம் ஆண்டில் இரு­வ­ருக்கும் மர­ண­தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது.

தம்­மீ­தான தண்­ட­னை­க­ளுக்கு எதி­ராக இவர்கள் செய்த மேன்­மு­றை­யீ­டு­க­ளுக்கு பலன் கிடைக்­க­வில்லை. மேன்முறையீடுகளை இந்­தோ­னே­ஷிய உயர்­நீ­தி­மன்றம் நிரா­க­ரித்­தது.

தமக்குப் பொது­மன்­னிப்பு வழங்­கு­மாறு இரு­வரும் விடுத்த கோரிக்­ கை­களும் விழ­லுக்கு இறைத்த நீரா­கின. இவர்கள் சமர்ப்­பித்த கரு­ணை­ம­னுக்­களை இந்­தோ­னே­ஷிய ஜனா­தி­பதி ஜோக்கோ விடோடோ தள்­ளு­படி செய்தார்.

இந்­தோ­னே­ஷியா என்­பது இஸ்­லா­மி­யர்கள் செறிந்து வாழும் நாடு. இங்கு போதைப்­பொருள் கடத்தல் என்­பது பெரும் குற்­ற­மாக கரு­தப்­ப­டு­வதில் வியப்­பில்லை.

போதைப்­பொருள் பாவனை என்ற கொள்ளை நோயில் இருந்து இந்­தோ­னே­ஷிய சமூ­கத்தை மீட்­டெ­டுக்க வேண்­டு­மானால், அத­னுடன் தொடர்­பு­டைய குற்­றச்­செ­யல்­க­ளுக்கு மர­ண­தண்­டனை விதிப்­பதைத் தவிர வேறு வழி­யில்லை என்­பது விடோ­டோவின் வாதம்.

ஒரு இறை­யாண்­மை­யுள்ள தேசத்தின் ஆட்­பு­லத்­திற்குள் எவ­ரேனும் குற்­ற­மி­ழைத்தால், இந்தத் தேசத்­தி­லுள்ள விதி­முறைகளுக்கு அமைய குற்­ற­வா­ளிக்கு தண்­டனை அளிப்­பது தேசத்தின் உரிமை. குற்­ற­வாளி அதே தேசத்தின் பிர­ஜை­யாக இருக்­கலாம். வேறு நாட்டின் பிர­ஜை­யா­கவும் இருக்­கக்­கூடும்.

இது பற்­றிய சட்­ட­ரீ­தி­யான கேள்­விகள் எதுவும் கிடை­யாது.

ஒரு நாட்டில் மரண தண்­ட­னைக்கு உள்­ளா­கின்ற குற்­ற­வாளி வேறு நாட்டைச் சேர்ந்தவ­ராக இருக்­கையில், சில இராஜ­தந்­திர ரீதி­யான சிக்­கல்கள் எழு­கின்­றன.

ஒரு நாட்­டிற்­கு­ரிய நீதித்­து­றையின் நியா­யா­திக்கம் என்­பதைத் தாண்டி, இரு நாடு­க­ளுக்கு இடை­யி­லான கௌரவம் என்ற பிரச்­சி­னையும் தலை­தூக்­கு­கி­றது. இது தீவிர பின்­வி­ளை­வு­க­ளுக்கும் வித்­தி­டு­கி­றது.

இன்று இந்­தோ­னே­ஷி­யா­விற்கும், அவுஸ்­தி­ரே­லியா உள்­ளிட்ட சில நாடு­க­ளுக்கும் இடையில் இராஜ­தந்­திர நெருக்­க­டிகள் தீவிரம் அடைந்­தி­ருப்­ப­தற்கு இதுவே காரணம். (15ஆம் பக்கம் பார்க்க)

மரணத்தின் வாசலில்….

போதைப்­பொருள் கடத்தல் விவ­கா­ரத்தில் கடு­மை­யான நிலைப்­பாட்டை அனு­ச­ரிக்கும் இந்­தோ­னே­ஷிய அர­சாங்கம் கடந்த வாரம் ஆறு பேர் மீதான மர­ண­தண்­ட­னையை நிறை­வேற்­றி­யது. இவர்­களில் ஐந்து பேர் வெளி­நாட்டுப் பிர­ஜைகள் இவர்களில் பிரேஸில், நெதர்­லாந்து ஆகிய நாடு­களைச் சேர்ந்­த­வர்­களும் அடங்­கு­வார்கள்.

மரண தண்­ட­னைக்­காக காத்­தி­ருப்­ப­வர்­களின் பட்­டி­யலில், மயூரன் – சான் ஆகி­யோ­ரது பெயர்கள் மாத்­தி­ர­மன்றி, 60 பேரின் பெயர்கள் இடம்­பெற்­றுள்­ளன. இவர்கள் அமெ­ரிக்கா, பிரிட்டன், சீனா, இந்­தியா, பாகிஸ்தான் முத­லான 18 நாடு­களைச் சேர்ந்த­வர்கள்.

தமது பிர­ஜைகள் மீதான மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டமை குறித்து பிரே­சிலும், நெதர்­லாந்தும் ஆத்­தி­ரத்தை வெளிப்ப­டுத்­தின. தமது தூது­வர்­க­ளையும் திருப்பி அழைத்­தி­ருந்­தன.

பிரே­சிலைச் சேர்ந்த பிர­ஜை­யொ­ரு­வ­ருக்கு போதைப்­பொருள் தொடர்­பான குற்­றச்­சாட்டின் அடிப்­ப­டையில் வெளிநாடொன்றில் மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­ப­டு­வது இதுவே முதல் தடவை என்­பதன் மூலம், பிரேஸிலின் ஆத்திரத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

மயூரன், சான் விவ­காரம் அவுஸ்­தி­ரே­லி­யாவைப் பொறுத்­த­வ­ரையில் ஒரு கௌரவப் பிரச்­சனை தான். இருந்­த­போ­திலும், இவர்கள் இரு­வ­ருக்­கா­கவும் ராஜ­தந்­திர உற­வு­களை தாரை வார்க்க வேண்­டுமா என்ற கேள்­வியும் அவுஸ்­தி­ரே­லிய ஆட்சியாளர்கள் மத்­தியில் இருக்­கி­றது.

அவுஸ்­தி­ரே­லி­யாவும், இந்­தோ­னே­ஷி­யாவும் அயல்­நா­டு­க­ளாக இருப்­பது இதற்குக் காரணம்.

20090322இந்­தோ­னே­ஷி­யாவின்   முன்னாள் ஜனா­தி­ப­தியை அவுஸ்­தி­ரே­லிய உளவு பார்த்­த­தாக முன்­வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்­டுக்கள், இந்­தோ­னே­ஷி­யாவில்  இருந்து அவுஸ்­தி­ரே­லி­யாவை   நோக்கிப் படை­யெ­டுக்கும்   அகதிப்  பட­கு­களை திருப்பி அனுப்பியமை போன்ற விவ­கா­ரங்­களின் அடிப்­ப­டையில் இவற்­றிற்கு இடை­யி­லான இரு­த­ரப்பு உற­வுகள் பாதிக்கப்பட்டிருந்தன.

இந்த உற­வுகள் சீர­டைந்து வரும் சம­யத்தில், மயூரன் – சான் விவ­கா­ரத்தைக் கையாள்­வ­தற்­காக அவுஸ்­தி­ரே­லியத் தலை­வர்கள் கடு­மை­யான நிலைப்­பாட்டை அனு­ச­ரிப்­பார்­களா என்­பது சந்­தே­க­மா­னது தான்.

மயூரன் – சான் விவ­கா­ரத்தில் ராஜ­தந்­திர ரீதியில் முடிந்­த­ளவு கடு­மை­யான முறையில் முறை­யிடப் போவ­தாக பிர­தம மந்திரி ரோனி அபொட் உறு­தி­ய­ளித்­தி­ருந்­தாலும், தாம் இந்­தோ­னே­ஷி­யா­வு­ட­னான உற­வு­களை சீர்­கு­லைக்கப் போவதில்லையெனக் கூறி­யி­ருப்­பதை சுட்­டிக்­காட்­டலாம்.

அவுஸ்­தி­ரே­லிய பிர­த­மரின் நிலைப்­பாடு எது­வாக இருந்­த­போ­திலும், மயூரன் – சான் விவ­கா­ரத்தை மனி­தா­பி­மான கண்ணோட்­டத்­துடன் நோக்க வேண்­டு­மென்ற அழுத்தம் தீவிரம் பெற்­றுள்­ளதை காணக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது.

தமது கருணை மனு நிரா­ரிக்­கப்­பட்­ட­தாக தகவல் அறி­விக்­கப்­பட்ட சமயம் மயூரன் முன்­வைத்த கேள்­விக்கு இன்று அவுஸ்திரே­லிய ஊட­கங்கள் முன்­னு­ரிமை அளித்­தி­ருப்­பதைக் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது.

தம்மைக் கொல்­வதால் கிடைக்­கக்­கூ­டிய பயன் என்­ன­வென மயூரன் கேட்­டி­ருக்­கிறார்.

மயூ­ரனின் கேள்­வியில் நியாயம் இருக்­கி­றது. தமது 25ஆவது வயதில் மர­ண­தண்­டனை விதிக்­கப்­பட்டு, கடந்த எட்டு வருடகாலம் மர­ணத்தை எதிர்­பார்த்து காத்­தி­ருப்­பதை விடவும் கொடு­மை­யான தண்­டனை வேறெ­துவும் இருக்­கி­றதா? இந்தக் கேள்­விக்­கான விடையை ஆத்­மார்த்­த­மாக ஆராய்ந்தால், மயூ­ரனைப் புரிந்து கொள்­ளலாம்.

மறு­பு­றத்தில், மயூரன் என்ற மனிதர்; தமது குற்­றத்தை ஒப்புக் கொண்­டி­ருக்­கிறார். தாம் மர­ணத்தை எதிர்;பார்த்துக் காத்­தி­ருந்த ஒவ்­வொரு கணத்­தையும் பய­னுள்ள வகையில் பயன்­ப­டுத்­தி­யுள்ளார்.

517382-26b645e6-34af-11e4-af37-530bfb62f6b1தற்­காப்­புக்­க­லையில் வல்­லு­ன­ராகத் திகழ்ந்த மயூ­ரனை சிறை­வாழ்க்கை தலை­சி­றந்த படைப்­பா­ளி­யாக மாற்­றி­யுள்­ளது. இந்த மனி­தரை சிறையில் சந்­தித்த அவுஸ்­தி­ரே­லிய ஓவியர் ஒருவர், இவரின் படைப்­பாற்­றலைக் கண்டு வியந்திருக்கிறார்.

தமது உள்ளக்கிடக்கையைப் படைப்புகளாக வெளிப்படுத்துவதுடன் மாத்திரம் நின்று விடாமல், சக கைதிகளையும் நல்வழிப்படுத்துவதில் மயூரன் வெற்றி கண்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் அறிவித்துள்ளன.

எந்த வகையில் நோக்கினாலும் மயூரன் வாழ வேண்டியவர். கொடுமையான முறையில் நிகழக்கூடிய மரணதண்டனையில் இருந்து மயூரனைக் காப்பாற்றுவதன் மூலம் தீர்ப்புக்களைத் திருப்பி எழுத முடியும் என்பதை நிரூபிக்க வேண்டிய கடப்பாடு இந்தோனேஷிய அரசாங்கத்திற்கு உள்ளது.

தீர்ப்புக்களைத் திருப்பி எழுதுமாறு அழுத்தம் தொடுக்க அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் முடியாவிட்டால், மனிதநேயத்தை விரும்பும் சக்திகள் அனைத்தும் ஒரே அணியில் திரண்டு அந்தக் காரியத்தை சாதிக்க முடியும்.

உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் ஒன்று கூடினாலே போதும்.

சர்வதேச தகவல் வலைப்பின்னலால் பிணைக்கப்பட்ட சமகால உலகில் அதற்குரிய வசதிகளும், கருவிகளும் சாத்தியமே.

– சதீஸ் கிருஸ்ணபிள்ளை-

art-bail-20art-620x349

Share.
Leave A Reply