சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன 2006ஆம் ஆண்டு மகாவலி அபிவிருத்தி அமைச்சராக இருந்த போது, குண்டுவைத்துக் கொல்ல முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் கோவிலடியைச் சேர்ந்த சேனன் எனப்படும் சிவராஜா ஜெனீவன் (வயது 37) என்பவருக்கே பொலன்னறுவ மேல் நீதிமன்ற நீதிபதி இந்த தண்டனையை விதித்துள்ளார்.
2006இல் மகாவலி அபிவிருத்தி அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேனவை கிளைமோர் குண்டு வைத்து கொல்ல முயன்றதற்காக இவருக்கு, 10 ஆண்டுச் சிறைத்தண்டனையும், 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
அபராதத் தொகையை கட்டத் தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
2006ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் நாள் பொலன்னறுவவில் இருந்து மட்டக்களப்புக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த போது, சந்தேக நபரான சேனன் எனப்படும், சிவராஜா ஜெனீவன் கைதுசெய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.