நாட்டிலுள்ள சகல பகுதிகளுக்கும் நாளாந்தம் சடலங்கள் செல்லும் யுகத்தை தாமே முடிவுக்குக் கொண்டுவந்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
குருநாகல் மாவட்டத்தில் ஐ.ம.சு.முவின் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஷ நேற்றையதினம் கல்கமுவ பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
கல்கமுவ பொல்பிட்டிகம, யாப்பகூவ, இரியால, வாரியபொல, பண்டுவஸ்நுவர, பெல்காவல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்ட பிரசாரக் கூட்டத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,
அன்று யுத்தம் இருந்த காலத்தில் இந்தக் குருநாகல் மாவட்ட பிள்ளைகள்தான் அதிகமாக யுத்தத்துக்குப் போனார்கள்.
தோல்வியுறச் செய்ய முடியாது என்று உலகத்தில் முதலாம் இடத்தில் இருந்த கொலைகார அமைப்பை தோல்வியடையச் செய்ய இந்தக் குருநாகல் பிள்ளைகள் மாபெரும் அர்ப்பணிப்பைச் செய்துள்ளனர்.
அன்று 2005ஆம் ஆண்டு நாட்டைப் பாரமெடுக்கின்றபோது இந்தக் குருநாகலில் மாத்திரமல்ல முழு நாட்டிலும் அனைத்து ஊர்களிலும் நாட்கணக்காக எங்களது வீரர்களின் சடலங்கள் 10, 15 என வந்துகொண்டிருந்தன.
அவ்வாறானதொரு நாட்டைத்தான் அன்று நாங்கள் பாரமெடுத்தோம். ஆனால் அந்த யுகத்தை நாம் முடிவுக்குக் கொண்டுவந்தோம்.
முழு நாட்டிலுள்ள பிள்ளைகளின் முழு வாழ்வையும் நாங்கள் பேணினோம். இதுதான் நான் செய்த தவறா. இன்று எனக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்ற ரணில் விக்ரமசிங்க, இளைஞர்களின் வாழ்க்கையின் பெறுமதியை நன்றாகத் தெரிந்தவரா?
அன்று 87, 89 கால கட்டங்களில் இளம் உயிர்கள் ஆயிரக்கணக்காக அழிக்கப்பட்டன. இன்று மனித உரிமைகள் தொடர்பாகப் பெரிதாகப் பேசுகின்றனர். அதனால் பழைய யுகத்தையும் நன்றாகத் தேடிப்பார்த்து, நாட்டின் எதிர்காலத்தையும் நினைத்து நல்லதொரு முடிவை எடுக்க வேண்டும் என்றார்.