ராளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ களமிறங்கியிருப்பதால், பெரும் பரபரப்பும், பலத்த எதிர்பார்ப்புகளும் தோன்றியிருக்கின்றன.
மஹிந்த ராஜபக்ஷ எப்படி மீண்டும் அரசியலுக்கு வந்தார், எதற்காக வந்தார் என்றெல்லாம் இனியும் விவாதித்துக் கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. அது நடந்து முடிந்து போன ஒன்று. ஏற்கனவே விமர்சிக்கப்பட்டு விட்ட ஒன்றும் கூட.
மஹிந்த ராஜபக்ஷவின் பலமும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பலவீனமும், அவரது மீள்வருகையில் கணிசமான செல்வாக்கைச் செலுத்தியிருந்தன.
இப்போது, பாராளுமன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு மக்களின் ஆணையைப் பெற்றுக் கொள்ள முடியுமா-?
தேர்தலுக்கு அப்பாலும் செல்வாக்குள்ள ஒரு அரசியல் தலைமையாக அவரால் இருக்க முடியுமா? என்ற கேள்விகளுக்கு விடை தேட வேண்டியதே முக்கியமானது.
மஹிந்த ராஜபக்ஷவின் பத்தாண்டு ஆட்சிக் காலம் எத்தகையதாக விளங்கியது என்பதை அறிந்து கொள்வதற்கு, சுமார் ஏழு மாதங்களுக்கு முன்னர் அவர் தோற்கடிக்கப்பட்ட பின்னர் வெளியான கருத்துக்களும், விமர்சனங்களையும் புரட்டிப் பார்த்தால் போதும்.
எனவே, மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் குறுகிய காலத்துக்குள் அதிகாரத்துக்கு கொண்டு வருவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்குப் பரவலான ஆதரவு எல்லா இன, மத, மொழி மக்களிடமும் இருக்கும் என்று கூற முடியாது.
ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்ற பின்னர், சிறுபான்மைச் சமூகங்கள் தொடர்பாக மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்ட கருத்துக்கள், அவர்கள் மீதான அவரது ஆழமான வெறுப்புணர்வையும் காழ்ப்புணர்வையும் வெளிப்படுத்தியிருந்தன.
அதாவது. தன்னை அவர்களே தோற்கடித்தார்கள் என்ற கருத்து அவரிடத்தில் இருக்கிறது.
அந்தக் கருத்து இந்தக் குறுகிய காலத்துக்குள் மறைந்து போய் விடும் என்று ஒருபோதும் நம்பமுடியாது. அவ்வாறு அவரோ அவரது தரப்பினரோ கூறுவார்களேயானால், அது பொய்யாகவே இருக்கும்.
ஏனென்றால், ஜனவரி 8ஆம் திகதி நடந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வீழ்ந்த அடி அவரது எதிர்காலத் திட்டங்களையே தவிடுபொடியாக்கிய ஒன்று.
இப்போது அவர் அரசியலுக்கு மீண்டும் வந்திருந்தாலும், முன்னைய அதிகாரத் தோரணையுடன் நடந்து கொள்ளக் கூடிய எந்தப் பதவியையும் அவருக்கு அளித்து விடப் போவதில்லை.
புரியும்படி சொல்லப்போனால் மஹிந்த ராஜபக் ஷ இழந்துபோன ஜனாதிபதிப் பதவி என்பது ஒரு ‘ஜாக்பொட் பரிசு’ மாதிரி.
இப்போது அவர் அடைய முயற்சிக்கும் பிரதமர் பதவி என்பது ஆறுதல் பரிசு தான்.
இனிமேல் ‘ஜாக்பொட் பரிசு’ கிடைக்காது என்று உறுதிப்படுத்திக் கொண்ட நிலையில் தான் அவர் ஆறுதல் பரிசுக்காக அலைகிறார்.
இப்படிப்பட்ட நிலையில், தனது ‘ஜாக்பொட் பரிசை’ தட்டிப்பறித்தவர்கள் என்ற கருத்து, அவரிடத்தில் இருந்து இவ்வளவு விரைவாக மறைந்திருக்கும் என்று எதிர்பார்க்கவே முடியாது.
எனவே, மஹிந்த ராஜபக் ஷவின் மீள்வருகை சிறுபான்மையினங்களுக்கு ஆரோக்கியமான அரசியல் நிலையை ஏற்படுத்தும் என்று சொல்வதற்கில்லை.
அவர்களுக்கு அச்சத்தையோ, ஒருவித மிரட்சியையோ தான் கொடுத்திருக்கிறது மஹிந்த ராஜபக் ஷவின் மீள் வருகை.
இந்தநிலையில், மஹிந்த ராஜபக் ஷவுக்கு முக்கியமான சவால் சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெறுவது. தமிழ், முஸ்லிம் மக்கள், இவர் மீண்டும் அதிகாரத்துக்கு வந்தால், தாம் பழிவாங்கப்படுவோம் என்ற கலக்கத்தில் இருக்கின்றனர்.
அவர்களின் அச்சத்தைப் போக்குகின்ற வேலைத்திட்டங்களை மஹிந்த ராஜபக் ஷவினால் மேற்கொள்ள முடியாது. அதனைச் செய்வதற்கு குறிப்பிட்ட காலஅவகாசத்தைப் பெற வேண்டும்.
ஆங்காங்கே சில முஸ்லிம்களின் வீடுகளுக்குச் சென்று இப்தார் விருந்தில் பங்கேற்பதால் மட்டும், மஹிந்த ராஜபக் ஷ மீதான நம்பிக்கை முஸ்லிம்களிடம் வந்துவிடப் போவதில்லை.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு உறுதியான ஆதரவைத் தெரிவித்த எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, மட்டக்களப்பில் வேட்புமனுத் தாக்கல் செய்த பின்னர், மஹிந்த ராஜபக் ஷவுக்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று குறிப்பிட்டதை மறக்க முடியாது.
மஹிந்த ராஜபக் ஷவும், ஹிஸ்புல்லாவும் ஒரே கட்சியில் -ஒரே சின்னத்தில் போட்டியிடும் தலைமை வேட்பாளர்களாக இருந்த போதிலும், மகிந்தவின் பெயரைக் கூறி வாக்கு கேட்டால் தமது தலையும் பறந்து போகும் என்பதால் தான் ஹிஸ்புல்லா அவ்வாறு கூறியிருந்தார்.
ஹிஸ்புல்லாவின் இந்தக் கருத்து, முஸ்லிம்களிடத்தில் மஹிந்த ராஜபக்ஷ சம்பாதித்து வைத்திருக்கின்ற வெறுப்பை தெளிவாகவே பிரதிபலிக்கிறது.
அதேவேளை தமிழர்கள் மத்தியில் மஹிந்த ராஜபக் ஷவுக்கு இருக்கின்ற மோசமான பெயர் குறித்து எவரும் கூறித் தெரிய வேண்டியதில்லை.
எனவே, மஹிந்த ராஜபக்ஷ இம்முறை தேர்தலில் தனியே சிங்கள பௌத்த வாக்குகளைக் குறிவைத்து தான் போட்டியிட வேண்டிய நிலையில் இருக்கிறார்.
சிங்கள பௌத்த வாக்குகளால் மட்டும் மஹிந்த ராஜபக் ஷவின் கனவு பலித்து விடுமா என்பது சந்தேகம் தான்.
சிங்கள பௌத்த வாக்குகள் மட்டும், அரசாங்கத்தை அமைப்பதற்கு போதாது என்று அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் சிங்கள பௌத்த வாக்குகள் இம்முறை பல கூறுகளாகப் பிரியும் சூழல் ஒன்று தோன்றியிருக்கிறது.
பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஜேவிபி, ஜனநாயக கட்சி என்று பல கட்சிகள் சிங்கள வாக்காளர்களைக் குறிவைத்திருக்கின்றன.
ஆனால், மஹிந்த ராஜபக்ஷ சிங்கள பௌத்த அடிப்படைவாத சக்திகளின் வாக்குகளைத் தான் அதிகம் நம்புகிறார் எதிர்பார்க்கிறார்.
அவர் தன்னை ஒரு சிங்கள பௌத்த மக்களின் தலைவனாக காண்பித்துக் கொள்வதற்கு, சிங்கள பௌத்த வாக்குகளின் மூலம் வெற்றியைப் பெறுவது அவசியம்.
ஜனாதிபதித் தேர்தலில் கூட அவர் அதிகம் நம்பியது சிங்கள பௌத்த வாக்குகளைத் தான்.
தனது போர் வெற்றிப் பிரதாபங்களையும், சிங்கள இனவாதக் கருத்துக்களையும், அவர் அதற்காகப் பயன்டுத்திக் கொண்டார்.
அதைவிட, சர்வதேச தலையீடுகள், போர்க்குற்ற விசாரணை, விடுதலைப் புலிகளையும் அவர் சிங்கள பௌத்த வாக்குகளைத் திரட்டுவதற்காக பயன்படுத்தினார்.
ஆனாலும், அவரால் அந்த தேர்தலில் வெற்றியைப் பெற முடியாது போனது. ஏனென்றால் சிங்கள பௌத்த வாக்குகள் மட்டுமே, அவருக்கு போதுமானவையாக இருக்கவில்லை.
இம்முறை, அவர் சிங்கள பௌத்த வாக்குகளை மட்டும் குறிவைத்து களமிறங்கியிருந்தாலும், தமிழ், முஸ்லிம் வாக்குகளை மட்டுமன்றி, சிங்கள பௌத்த வாக்குகளையும் இழக்கப் போகிறார்.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடந்த தேர்தலில் ஆதரவளித்த பொது பலசேனா இம்முறை தனித்துப் போட்டியிடுகிறது.
மஹிந்த ராஜபக் ஷவுக்கு தாம் இலட்சக்கணக்கான வாக்குகளை திரட்டிக் கொடுத்ததாக அந்த அமைப்பு பின்னர் உரிமை கோரியது.
இப்போது மஹிந்த ராஜபக் ஷவுக்கு எதிராக பொது பலசேனா வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறது. எனவே பொது பலசேனாவின் மூலம் கிடைத்த வாக்குகளை மகிந்த இழக்க நேரிடும்.
இன்னொரு பக்கத்தில், சிங்கள பௌத்தர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற அஸ்கிரிய, மல்வத்த பீடங்களும் கூட மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஆதரவாக இல்லை.
நல்லாட்சி, ஊழலற்ற ஆட்சி உள்ளிட்ட பல விடயங்களில் மல்வத்த, அஸ்கிரிய பீடாதிபதிகள், தற்போதைய அரசாங்கத்துக்கு ஆதரவளித்து வருகின்றனர்.
இதுவும் மஹிந்த ராஜபக் ஷவுக்கு முக்கியமான ஒரு பின்னடைவு.
இந்தக் கட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள நேர்மையான- நல்லாட்சியை விரும்புகின்ற வாக்காளர்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்களை அடுத்து பின்வாங்கும் நிலை ஒன்று ஏற்படலாம்.
இவையெல்லாம் மஹிந்த ராஜபக் ஷவுக்கு சிங்கள வாக்காளர்களிடம் இருந்து சந்திக்கப் போகும் சவால்.
இவையெல்லாவற்றையும் தான் தாண்டித் தான் மஹிந்த ராஜபக் ஷ முன்னேற வேண்டியிருக்கிறது.
இந்தச் சவால்களை எல்லாவற்றையும் தாண்டி, பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் அளவுக்கு முன்னேறினாலும், மைத்திரிபால சிறிசேன என்ற தடை இருக்கிறது.
அவர் மஹிந்த ராஜபக் ஷவுக்கு பிரதமர் பதவியை வழங்க முடியாது என்று கைவிரித்து விட்ட நிலையில், அடுத்த கட்டம் என்ன என்று தீர்மானிக்க முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.
மஹிந்த ராஜபக் ஷவின் நகர்வுகளை இதுவரையில் தடுத்து நிறுத்துவதில் பெரியளவில் வெற்றி காணாத மைத்திரிபால சிறிசேன, அடுத்த கட்டத்தில் மஹிந்த ராஜபக் ஷவுக்கு வலுவான தடை ஒன்றைப் போட முனைகிறார்.
அது எந்தளவுக்கு சாத்தியமாகும் – அது மஹிந்த ராஜபக் ஷவை நிரந்தரமாகவே அரசியலில் இருந்து ஓரங்கட்ட உதவுமா என்பதையெல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
எவ்வாறாயினும், மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்த தேர்தல் என்பது, அவர் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்னர் எதிர்கொண்ட ஜனாதிபதி தேர்தலை விடக் கடினமானது- சவாலானது என்பதில் மட்டும் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
– எஸ்.கண்ணன்