காணாமல் போய், 28 நாட்களுக்குப் பின்னர் சடலமாக மீட்கப்பட்ட கிளிநொச்சி, சத்தியபுரம் கிராமத்தைச் சேர்ந்த 3 வயது சிறுமி உதயகுமார் யர்ஷிகா, வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பிரேத பரிசோதனையின் போது உறுதி செய்யப்பட்டுள்ளது என கிளிநொச்சி ஆதார வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜூன் மாதம் 21ஆம் திகதி மாலை 4 மணியிலிருந்து காணாமற்போன மேற்படி சிறுமியின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (27) சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுமியின் சடலம், சிறுமி காணாமற்போன இடத்திலிருந்து 5 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பொறிக்கடவை என்னுமிடத்திலுள்ள வயல் வெளியிலிருந்து கடந்த 19ஆம் திகதி, உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்தது.
அச்சடலத்துடன் சிறுமி காணாமற்போகும் போது அணிந்திருந்த ஆடைகள், காலணி என்பனவும் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட சடலம், கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய கொழும்பிலிருந்து வருகை தந்த விசேட வைத்திய நிபுணர் குழுவால் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது, அச்சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்ற விடயம் தெரியவந்துள்ளது.
இதேவேளை, சிறுமியை வாய்க்கால்வரை அழைத்துச்சென்று விட்டதாக கூறப்படும் 14 வயதுடைய சிறுவனை (பெரியம்மாவின் மகன்) கைது செய்வதற்கு, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றிருந்த பொலிஸார், அச்சிறுவனை கடந்த 23ஆம் திகதி கைது செய்து 24ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிலையில், நீதவானின் உத்தரவுக்கிணங்க தொடர்ந்து தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையை இன்று திங்கட்கிழமை மன்றில் சமர்ப்பிக்கவுள்ள அதேவேளை, மேற்படி சிறுவனையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் மேலும் கூறினர்.
சிறுமி காணாமற்போனமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள விசேட பொலிஸ் குழுவொன்று அமைக்கப்பட்டு விசாரணைகள், தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் சிறுமியின் உறவினர்கள் சிறுமியை காட்டேறி கடத்தியிருக்கலாம் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வீடுடைத்து 5,000 ரூபாய் திருடி மது அருந்திய 15 வயது யாழ் சிறுவன்!
25-07-2016
வீடு ஒன்றிற்குள் புகுந்து பணத்தை திருடி, திருடிய பணத்துடன் மதுபானச்சாலைக்கு சென்று, உல்லாசமாக மதுபானம் அருந்திக் கொண்டிருந்த 15 வயதுச் சிறுவன் ஒருவன் கைதாகியுள்ளான்.
இந்த அதிர்ச்சி சம்பவம் யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் நடந்துள்ளது. ஆவரங்காலில் உள்ள வீடொன்றிற்குள் பகுந்து 5 ஆயிரம் ரூபாவை திருடி, புத்தூரிலுள்ள மதுபானச்சாலையில் மதுஅருந்திக் கொண்டிருந்த சமயத்திலேயே கைதாகியுள்ளான்.
இந்த சிறுவன் இதற்கு முன்னரும் திருட்டுக்குற்றச்சாட்டுக்களிற்காக நான்கு தடவைகள் கைதாகி, நீதிமன்ற உத்தரவிற்கமைவாக சான்றுபெற்ற அரசபாடசாலைகளில் அனுமதிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தான்.
இந்தநிலையிலேயே ஆவரங்காலில் திருட்டில் ஈடுபட்டிருந்தான். வீட்டு உரிமையாளர் அச்சுவேலி பொலிசாரிடம் முறையிட்டதையடுத்து, சிறுவன் மதுபானச்சாலையில் வைத்து கைதாகியுள்ளான்.
வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பப் பெண்ணின் சடலம் மீட்பு!
25-07-2015
வவுனியா, ஆச்சிபுரம் கிராமத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவர் நேற்று சனிக்கிழமை இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
4 வயது குழந்தை ஒன்றின் தாயாரான பிரேம ராதிகா (வயது 25) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இறுதியாக இவர் கட்டாரில் இருக்கும் கணவருடன் தொலைபேசியில் உரையாடியதன் பின்னர் மாலை 4.30 மணியளவில் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த நான்கு நாள்களாக கணவனுடன் முரண்பட்டார் எனவும் குடும்பதகராறுதான் இத்தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோர் விசாரணைகளை மேற்கொண்டதுடன் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பணித்தார்.
இதேவேளை, இது தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.