இந்திய வரலாற்றில் முதன் முறையாக முதல்வரை வீடு தேடிச் சென்று சந்தித்தார் பிரதமர் ஜெயாவுடன் மதிய விருந்து வியப்பில் அரசியல் வட்டாரங்கள் மூச்சடைத்து போயின தமிழக எதிர்க்கட்சிகள்… ஜெ.க்கு அரசியல் ரீதியில் பலத்தை பெற்றுக்கொடுத்துள்ளது…
இலங்கை தமிழர்கள் தொடர்பில் ஜெ.முன்வைத்த கோரிக்கைகள் இலங்கை அரசியல் சாசனத்தின் 13ஆவது சட்ட பிரிவை அந்நாடு விரைந்து அமுல்படுத்த மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.
இலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது இனப்படுகொலையில் ஈடுபட்டவர்கள் சர்வதேச நீதிமன்றத்தின் முன்நிறுத்தப்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் நேற்று சந்தித்தார்.
மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் கைத்தறி நெசவாளர்கள் விழா முதல் முறையாக சென்னையில் நேற்று நடைபெற்றது.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நேற்று காலை நடைபெற்ற இவ் விழாவில் கலந்துகொள்வதற்காக தமிழகம் வந்த பிரதமர் மோடியை சென்னை விமான நிலையத்தில் முதல்வர் ஜெயலலிதா பூச்செண்டு வழங்கி வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து கைத்தறி நெசவாளர்கள் விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, அதன் பின்னர் மதியம் 1.35 மணியளவில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்திற்கு சென்றார். அங்கு பொன்னாடை போர்த்தி பூச்செண்டு வழங்கி முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடியை வரவேற்றார்.
மாநில முதல்வரை விட அதிகாரம் மிக்க பதவியில் உள்ள பிரதமர் ஒருவர், புரட்டோகால் மரபுப்படி அந்தஸ்த்தில் குறைந்த மாநில முதல்வர் ஒருவரை வீடு தேடி ச்சென்று சந்திப்பது இல்லை.
ஆனால் அந்த மரபை உடைத்து பிரதமர் மோடி, ஜெயலலிதாவை சந்தித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் வியப்பாகவே பார்க்கப்படுகிறது.
பின்னர் இருவருக்கும் இடையே 50 நிமிடங்கள் வரை பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின்போது, தமிழக அரசு சார்பில் பிரதமர் மோடியிடம் கோரிக்கை மனு ஒன்றை முதல்வர் ஜெயலலிதா அளித்தார். 21 பக்கங்களைக் கொண்ட அம் மனுவின் முக்கிய கோரிக்கைகளாக,
* காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
* முல்லை பெரியாறு அணைக்கு மத்திய தொழில் படையின் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
* தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* தேசிய நதிநீர் இணைப்பு திட்டங்களை செயற்படுத்த வேண்டும்.
* காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் தடுப்பணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வலியுறுத்த வேண்டும்.
* நெய்யாற்றில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட கேரள அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்.
* 4000 மெகாவோட்ஸ் உற்பத்தி திறன் கொண்ட செய்யூர் அல்ட்ரா மெகா மின் திட்டத்தை விரைவில் தொடங்க மத்திய அரசு ஒப்பந்தப் புள்ளி கோர வேண்டும்.
* சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு மசோதாவில் தமிழக அரசு ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ள திருத்தங்களை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.
* தமிழகத்துக்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை மாதம் ஒன்றுக்கு 65,140 லீட்டராக உயர்த்த வேண்டும்.
* தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யும் இறுதிப் பணிகள் இன்னமும் நடைபெறவில்லை. அதை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* ஈழத் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இலங்கை அரசியல் சாசனத்தின் 13ஆவது சட்ட பிரிவை அந்நாடு விரைந்து அமுல்படுத்த மத்திய அரசு தலையிட்டு இலங்கையை வலியுறுத்த வேண்டும்.
* இலங்கையில் இறுதிக்கட்ட ப்போரின்போது இனப்படுகொலையில் ஈடுபட்டவர்கள் சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* ஜல்லிக்கட்டு விளையாட்டு மீதான தடையை நீக்க அரசு வழிவகை செய்ய வேண்டும்.
* சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாகப் பயன்படுத்த ஆவன செய்ய வேண்டும். ஆகிய கோரிக்கைகள் அந்த மனுவில் இடம் பெற்றிருந்தன
இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேன்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில், மோடி ஜெயலலிதாவின் வீடு தேடி சென்று சந்தித்திருப்பது, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
அதே சமயம் ஜெயலலிதாவை பொறுத்தவரை இந்த சந்திப்பு அவருக்கு அரசியல் ரீதியில் பலத்தை பெற்றுக்கொடுத்துள்ளது.
குறிப்பாக எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. – பா.ஜ.க.இடையே கூட்டணி அமைப்பதற்கான அச்சாரமாக இந்த சந்திப்பு கருதப்படுகிறது.
இச் சந்திப்பிற்கு பின்னர் முதல்வர் வீட்டில் பிரதமர் மதிய உணவு சாப்பிட்டார். இறுதியாக பிரதமருக்கு நினைவுச்சின்னம் வழங்கியதோடு வாசல்வரை சென்று பிரதமரை முதல்வர் ஜெயலலிதா வழியனுப்பி வைத்தார்.