தாவூத் பாகிஸ்தானில்தான் குடியுரிமை பெற்று வாழ்வதாக செய்திகள் அடிபடும் முன்பே, அதுகுறித்து பல்வேறு நாட்டின் உளவுத்துறை ஏஜென்ட்களுக்கு தெரிந்த இருந்தது.
உளவுத்துறைக்கு மட்டும் தெரிந்த விஷயம், எப்படி வெளியே போனது என்று தாவூத்தும், பாகிஸ்தானும் அலசி ஆராய்ந்த பொழுது அவர்களுக்கு ‘ஷாக்’கொடுக்கும் சம்பவங்களும் அவர்களுக்கு காத்திருந்தது.
பாகிஸ்தானில் பதுங்கி இருந்ததுபோய் இன்று பாகிஸ்தானில் குடியுரிமை பெற்று, முழு பாகிஸ்தான் வாசியாக தாவூத் மாறிப்போனதை உளவுத்துறை ஏஜென்டுகள் தவிர்த்து, பல்வேறு வணிக, வர்த்தக நிறுவனங்களுக்கே தெரிந்து இருக்கிறது.
இந்தியர்களை தவிர்த்து ஜப்பானியர்கள், டென்மார்க்காரர்கள் என்று மூன்று பொறியாளர்கள் பாகிஸ்தா னுக்கு போய்விட்டு வந்த பிறகுதான், அந்த பவர் பிளான்ட் நிறுவனம் தாவூத்திற்கு சொந்தமானவை என்று தெரிய வந்ததாக சொன்னார்கள்.
அவர்கள் சொன்ன தகவல்தான் முதன் முதலில் ஆதாரமாக வெளியாகி, இன்டர் நேஷனல் செய்திகளாக உருவாக காரணமாக இருந்தது. அரசல் புரசலாக இருந்து வந்த விஷயம் உறுதியான செய்தியாக வெளியே வந்தது.
குட்கா தொழிலில் கொடி கட்டி பறக்கும் அனிஸ், பாகிஸ்தானில் குடியேறியதும் பவர் பிளான்ட், கடல் மீன்களை ஏற்றுமதி செய்வது என்று ஒரு சில வேலைகளை ஆரம்பித்து வந்தாலும், நாளடைவில் தடை செய்யப்பட்ட பொருட்களை தயாரிக்கும் தொழிலில் இறங்கினான்.
குட்கா, பான் பொருட்களில் அதிக போதை வஸ்துகளை கலந்து, பாகிஸ்தானில் தயாரித்து மொத்தமாக விற்றுக்கொண்டு இருந்தான்.
2002 -ம் ஆண்டில் இது போன்ற தொழில்களை பாகிஸ்தான் அரசு தடை செய்தது. ஆனாலும் நம்மூரைப்போல தொழில் வெற்றிகரமாக நடந்தது. அப்போதைக்கு வருடத்திற்கு 450 கோடி ரூபாய் என மதிப்பீடு செய்து இருந்தார்கள்.
மீண்டும் சந்தையில் குட்கா பொருட்கள் கொடி கட்டிப்பறந்தது. இதற்காக அனிஸ்க்கு, இந்தியாவில் குட்கா தயாரிப்பில் முன்னோடியாக இருந்து வந்த பிரபல குட்கா தொழிலதிபர் ஜோஷி என்பவர் உதவி செய்தது தெரியவந்தது. ஜோஷிக்கும், மாணிக்சந்த் தாரிக்கும் மும்பையில் தொழில் போட்டிகள் இருந்து வந்தன.
பஞ்சாயத்து, பாகிஸ்தானில் இருக்கும் தாவூத்திற்கு போனது. இருவரையும் பாகிஸ்தானுக்கு அழைத்து பஞ்சாயத்து பேசி அனுப்பி விட்டதாக மும்பை போலீஸ் பிறகு கண்டுபிடித்தது.
அந்த நெருக்கத்தில் ஜோஷியை தனக்கு சாதகமாக பயன்படுத்திய அனிஸ், ஜோஷி மூலம் குட்கா தயாரிக்கும் இயந்திரங்களை துபாயில் இருந்து இறக்குமதி செய்து, தொழில் நுணுக்கங்களை கற்றுக் கொண்டு பாகிஸ்தானில் தொழிலை விரிவுபடுத்தினான்.
அதன் மொத்த வருவாயில், சில நூறு கோடிகளை பாகிஸ்தானில் உள்ள முக்கியப் புள்ளிகளுக்கு பங்கு கொடுத்துள்ளான்.
அந்த தொழிலில் சேவை வரி, உற்பத்தி வரி என்று பல்வேறு வரிவிலக்குகள் வேறு பாகிஸ்தான் அரசு அளித்தது பின்னாளில்தான் தெரிய வந்தது.
கள்ள நோட்டுகளின் பிறப்பிடம் பாகிஸ்தான். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் நேரிடையாகவும், மறைமுகமாகவும் எத்தனையோ விவகாரங்கள் முட்டிக்கொண்டு இருந்தாலும், இன்றளவும் தீர்க்க முடியாத பிரச்னையாக இருப்பது கள்ளநோட்டு விவகாரம்தான்.
இந்தியாவில் அதிகமாக கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடுவது, பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாதக் குழு என்கிற பேச்சு பல்வேறு ஆண்டுகளாக நடந்து வருகிறது.
அந்தக் குழுவிற்கு அடைக்கலம் கொடுப்பது முதல் அவர்களின் நடமாட்டம், மும்பை பங்கு சந்தையில் அந்நிய செலாவணிகளின் நிலவரங்கள், ஏற்றுமதி, இறக்குமதி என்று உள்ளிட்ட அனைத்து பொருளாதார விவகாரங்களையும்,
பாகிஸ்தானில் இருக்கும் பொருளாதார நிபுணர்களுக்கு அப்டேட் செய்வதுண்டு.
அவர்கள் இந்தியாவின் பொருளாதாரத்தில் கைவைக்க பல்வேறு வேலைகளை செய்வதுண்டு.
அதில் முக்கியமான வேலைதான் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடுவது. இதற்காக பாகிஸ்தானில் லாகூர், கராச்சி, முல்ட்டன் உள்பட பல்வேறு பகுதிகளில் பிரிண்டிங் மெஷின்களை போட்டு ஜரூராக வேலைகளை செய்து வருகிறார்கள். பாகிஸ்தானில் இயங்கி வரும் லஸ்கர் இ தொய்பா என்கிற அமைப்புதான் இந்த வேலையை முன்னின்று செய்து வருகிறது. இதற்கு ஐ.எஸ்.ஐ அமைப்புதான் மூளையாக இருந்து வருகிறது.
இவர்கள் இதற்காக அச்சிடும் தாள்களை வியட்நாம், டென்மார்க் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து வாங்கி வருகிறார்கள்.
இந்தியாவில் இருந்து வெளியாகும் ஐந்து ரூபாய், பத்து ரூபாய் தாள்களை மட்டும் அச்சிட்டு இந்திய சந்தைகளில் உலாவ விட்டனர்.
அதன் பிறகு 500,1000 ரூபாய் தாள்களை கோடிக்கணக்கில் அச்சிட ஆரம்பித்து அவற்றை நேபாளம், காத்மாண்டு வழியாக இலங்கை, ஹாலந்து, தாய்லாந்து, இங்கிலாந்து, சிங்கப்பூர் என்று பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று, அங்கிருந்து இந்தியாவிற்கு கொண்டு வந்து கள்ள நோட்டுகளை உலாவவிடுவதில் பயங்கர கில்லாடிகளாக இருந்து வந்தனர்.
இதற்காக பிரத்யேகமான ஆட்கள் இருந்து வந்தனர். அவர்களில் முக்கியமானவர்கள் தாவூத்திற்கு நெருக்கமாக இருந்து வந்தவர்கள் என்பது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. கடந்த 2013-ம் ஆண்டு மட்டும் ஆறு கோடி ரூபாய் கள்ள நோட்டுக்களை இந்திய அரசு பறிமுதல் செய்தது. அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் கள்ள நோட்டுக்களின் பிடிபடும் எண்ணிக்கையும் பெருகிக்கொண்டே சென்றது.
கள்ள நோட்டுகளை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி பல்வேறு வழிகளை கொண்டு வந்தும், அவை இன்னும் முழுமையாக கட்டுப்பாட்டில் வரவில்லை.
சண்.சரவணக்குமார்
தாவூத் தம்பியுடன் நெருக்கமாக இருந்தாரா அந்த பிரபல நடிகை…? அடுத்தவாரம் பார்ப்போம்…