மன்னார், திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி காணப்பட்ட இடத்துக்கு அருகாமையில் கண்டுப்பிடிக்கப்பட்ட மர்ம கிணற்றை, மன்னார் நீதவான் ஆசிர்வாதம் கிரேசியன் அலெக்ஸ்ராஜா இன்று வெள்ளிக்கிழமை மதியம் 1 மணியளவில் நேரடியாக சென்று பார்வையிட்டார்.
குறித்த மனித புதைகுழி காணப்பட்ட இடத்துக்கு சற்று அருகாமையில் கண்டுப்பிடிக்கப்பட்ட சந்தேகத்துக்கிடமான கிணற்றை தோண்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதற்கமைய, குறித்த கிணறு இன்று வெள்ளிக்கிழமை, மன்னார் நீதவான் முன்னிலையில் தோண்டப்பட இருந்த நிலையில், குறித்த கிணறு தோண்டுவதற்கான ஆயத்த நிலை தொடர்பாக மன்னார் நீதிமன்றத்தில் ஆராயப்பட்டது.
இதன்போது, மன்னார் நீதிமன்றத்தில் ஆஜரான மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, அடையாளம் காணப்பட்ட குறித்த கிணற்றைச் சுற்றி மழை நீர் தேங்கி நிற்பதாகவும் இதனால் குறித்த கிணற்றை தோண்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மன்றில் தெரிவித்தார்.
இது தொர்பில் விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் ஆசிர்வாதம் கிரேசியன் அலெக்ஸ்ராஜா, குறித்த கிணற்றை வரட்சியான காலப்பகுதியான எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 4 ஆம், 5ஆம், 6ஆம் திகதிகளில் தோண்டுவதற்கு உத்தரவிட்டார்.
இந்த நிலையில் குறித்த கிணற்றை மன்னார் நீதவான் ஆசிர்வாதம் கிரேசியன் அலெக்ஸ்ராஜா, இன்று வெள்ளிக்கிழமை மதியம் 1 மணியளவில் நேரடியாக சென்று பார்வையிட்டார்.
இதன்போது, குறித்த பகுதிக்கு நீர் வராத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதவான், குறித்த பகுதியில் கடந்த காலங்களில் வசித்து வந்தவர்களின் விபரங்களை பெற்று மன்றில் சமர்ப்பிக்குமாறும் குறித்த பகுதிக்கு பொறுப்பான கிராம அலுவலகருக்கு உத்தரவிட்டார்.
இதேவேளை, மனித எலும்புக்கூடுகள் காணப்படுவதாக சந்தேகிக்கப்படுகின்ற குறித்த கிணற்றை எதிர்வரும் ஏப்பிரல் 4 ஆம் திகதி முதல் அகழ்வு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நீதவான் உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.