மனித இனம் பெருக ஆரம்பித்த காலந்தொட்டு சிறுநீரகக் கல் எனும் நோய் பன்னெடுங்காலமாக மனிதர்களில் ஒரு அங்கமாகவே இருந்துவருகிறது.
எகிப்திய மம்மிக்களில் கூட சிறுநீரகக் கற்கள் மற்றும் சிறுநீர்ப்பை கற்கள் இருந்தமைக்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நாட்பட்ட சிறுநீரக வலி என்பது, நிச்சயமாக ஒரு மனிதன் தாங்கிக்கொள்ளக்கூடிய அதிகூடிய, வேதனை தரும் ஒரு நிகழ்வு.
அடிக்கடி, எந்தவித முன் னறிவிப்புமின்றி திடீரெனத் தோன்றும் இந்த வலி பிரசவ வலியைவிடக் கடுமையாக இருக்கும். ஆண்டுதோறும் உலகளவில் 1.2 மில்லியன் மக்கள் சிறுநீரக வலியினால் பாதிக்கப்படுகிறார்கள்.
இதனால் உலகளவில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுள் ஒரு சதவீதமானோர் சிறுநீரக வலியால் பாதிக்கப்பட்ட வர்களாகவே இருக்கிறார்கள்.
அறிகுறிகள்:
1. இடுப்பின் பக்கவாட்டில் ஆரம்பிக்கும் கடுமையான வலி மெல்ல மெல்ல இடுப்பையும் ஆக்கிரமிக்கும். பெரும்பாலான நோயாளிகளுக்கு, வலி தோன்ற ஆரம் பித்த இரண்டு மணித்தியாலங்களுள் அதன் உச்ச அளவை எட்டும்.
வலி தோன்ற ஆரம்பித்ததில் இருந்து அந்த வலி அடங்குவதற்கு சுமார் 3 முதல் 18 மணித்தியாலங்கள் வரை கூட ஆகலாம்.
2. சிறுநீரில் இரத்தமும் கலந்து வெளியேறும்.
3. வயிற்றுப்பிரட்டல் மற்றும் வாந்தி.
4. அடிக்கடியும், அவசரமாகவும், எரிச்சலுடனும் சிறுநீர் வெளியேறும்
குறிப்பு: சிலருக்கு இதுபோன்ற எந்தவொரு அறி குறியும் தோன்றாது.
சிறுநீரகக் கல் உருவாவது எப்படி?
1. மிகக் குறைந்தளவு தண்ணீர் அருந்துவதாலும், அதன் அடிப்படையில் குறைந்தளவு சிறுநீரே உற்பத்தியாவதாலும் கல்சியம், ஒக்சலேட் மற்றும் யூரிக் அசிட் போன்ற சிறுநீரின் படிமங்கள் உயர்வாக இருப்பதால் உயர்ந்த செறிவுள்ள கல் தன்மையை உருவாக்குகிறது.
2. சிறு சிறு துணிக்கைகள் ஒன்று சேர்ந்து பெரிய கல்லாக உருவாவதைத் தடுக்கும் கல்சியம் பொஸ்பேற் போன்ற சிலவகை நுண்பொருட்கள் சிறுநீரகத்தில் குறைவாக இருப்பதால், சிறுநீரகத்தில் கல் தோன்றுவதற்குத் தேவையான சூழலை உருவாக்கிவிடுகிறது.
ஆபத்தான காரணிகள்
குடும்ப அல்லது தனிநபரின் வரலாறு:
உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் சிறுநீரகத்தில் கற்கள் இருந்திருந்தால், நீங்களும் இந்நோயால் பாதிக்கப்படுவதற்கு அநேக வாய்ப்புகள் உண்டு.
ஒருவேளை உங்களது சிறுநீரகத்தில் ஏற்கனவே ஒன்று அல்லது ஒன் றுக்கு மேற்பட்ட கற்கள் இருந்தால், உங்கள் சிறுநீரகத்தில் மேலும் மேலும் கற்கள் உருவாக வாய்ப்புகள் உண்டு.
அதீத நீர்ப் பற்றாக்குறை:
தினந்தோறும் தேவையான அளவு நீர் அருந்தாமல் விடுவதால் உங்கள் சிறுநீரகத்தில் கற்கள் தோன்றுவதற் கான வாய்ப்புகளும் அதிகரிக்கும்.
வெப்பமான சூழலில் வாழ்பவர்கள் மற்றும் அதீதமாக வியர்வை வெளியே றுபவர்களுக்கு மற்றவர்களைவிட சிறுநீரகக் கற்கள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
சிலவகை உணவுகள்:
புரதச் சத்து, சோடியம் மற்றும் சீனி செறிந்த உணவு களை அதிகளவில் உட்கொள்பவர்கள், சிலவகை சிறுநீர கக் கல் நோய்க்கு ஆளாகும் வாய்ப்புகள் அதிகம். முக்கிய மாக, சோடியம் அதிகமாக உட்கொள்பவர்களுக்கு நிச்சயம் இந்தப் பிரச்சினை தோன்றும்.
உடற்பருமன் உள்ளவர்கள்:
உடல் நிறை குறியீட்டு எண் (பிஎம்ஐ) அதிகமாக உள்ளவர்கள், இடுப்புச் சுற்றளவு பெருத்தவர்கள் மற்றும் உடற்பருமனானவர்கள் சிறுநீரகக் கல் நோய்க்கு ஆளாகும் வாய்ப்புகள் அதிகம்.
ஏனைய மருத்துவக் காரணிகள்:
சில நோய்கள், சிறுநீரகக் குழாயில் அமிலத்தன்மை, ‘சிஸ்டினுரியா’ எனும் கற்களை உருவாக்கும் தன்மை, தைரொய்டின் உயர்நிலை போன்ற சிலவகை உடல் நிலை கள் மற்றும் சிலவகை மருந்துப் பாவனைகள், சிறுநீர்க் குழாயில் தொற்றுநோய்கள் என்பன சிறுநீரகக் கற்களைத் தோற்றுவிக்கின்றன.
நோயறியும் பரிசோதனைகள்:
இரத்தப் பரிசோதனை, சிறுநீர்ப் பரிசோதனை, ‘இமேஜிங்’ எனப்படும் உயர்தரம் மிக்க படம் பிடித்துப் பார்க்கும் பரிசோதனை மற்றும் சிடி ஸ்கேனிங் போன்ற பரிசோதனைகள் சிறுநீரகக் கற்களைத் தெளிவாகக் காட்டிவிடும்.
சிகிச்சைகள்:
சிகிச்சைகளைப் பொறுத்தளவில், கற்களின் அளவு மற்றும் அவை தோன்றியிருக்கும் இடங்களைப் பொறுத்து வேறுபடும். சிறுநீரகம், சிறுநீர்க் குழாய், சிறுநீர்ப்பை மற்றும் மிக அரிதாக சிறுநீரை வடித்தெடுக்கும் யுரித்ரா பகுதியில்கூட கற்கள் தோன்றலாம்.
மருந்து சிகிச்சைகள்:
இது, சிறுநீர்க்குழாயில் கற்கள் தோன்றியிருந்தால் அல்லது சிறு சிறு அடைப்புகள் இருந்தால் செய்யப்படக்கூடிய சிகிச்சை. வலி நிவாரணி மாத்திரைகள், தசைகளை மிருதுவாக்கும் மருந்துகள் போன்ற மருந்துகள் மூலமே இதை குணப்படுத்தலாம்.
சத்திர சிகிச்சைகள்:
இது கற்களின் அளவு மற்றும் கற்கள் இருக்கும் பகுதி என்பவற்றின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படும்.
சிறுநீரகக் கற்களுக்கு:
* Percutaneous Nephrolithotomy (PCNL): இந்த சிகிச்சையில் சாவித் துவாரத்தின் அளவுள்ள துளையின் மூலம் சிறுநீரகத்துக்குள் நுழைந்து, சிறுநீரகக் கட்டிகளைச் சிறு சிறு துண்டுகளாக உடைத்து வெளியேற்றப்படும்.
* Retrograde Intrarenal Surgery: இதில், Flexi URS என்ற வளையும் தன்மைகொண்ட ஒரு தொலைகாட்டி (டெலஸ்கோப்) சிறுநீரகத்துக்குள் செலுத்தப்பட்டு, லித்தோட்ரிப்ஸி எனப்படும் லேசர் முறை மூலம் சிறுநீரகக் கற்கள் உடைக்கப்படும்.
* Extra Corporeal Shock Wave Lithotripsy (ESWL): இதில், வெளியேயிருந்து ஒருவகை அதிர்வலைகள் சிறுநீரகக் கற்களைக் குறிவைத்து அனுப் பப்படும். இவ்வலைகள் கட்டிகளைச் சிறு துண்டுகளாக உடைத்து வெளியேற்றப்படும்.
சிறுநீர்க்குழாய் கற்களுக்கு:
Ureteroscopy: கற்கள் இருக்கும் இடத்தைப் பொறுத்து சற்றுத் திடமான அல்லது வளையக் கூடிய யுரெட்ரோஸ்கோபி மூலம் கற்களை அணுகி, கற்களின் அளவைப் பொறுத்து அவற்றை முழு தாகவோ, உடைத்தோ வெளியேற்றப்படும்.
சிலவேளைகளில் சிறு நீரகக் கற்களை அகற்றும் ESWL சிகிச்சை முறையும் பயன் தரும்.
சிறுநீர்ப்பைக் கற்களை, சிறுநீர் வடிகுழாய் வழியாக எண்டோஸ்கோப்பி சிகிச்சை மூலமோ அல்லது நுண்துளை வழியாக சிறுநீர்ப்பைக்குள் (Percutaneous Cystolithotripsy) நுழைந்தோ அகற்றலாம். சிலவேளைகளில், சிறுநீர்ப்பையில் இருந்து சிறுநீர் வெளியேறும் வழியில் அடைப்புகள் இருப்பதாலும் சிறுநீர்ப்பையில் கற்கள் தோன்றலாம்.
இதன்போது, கற்களை மட்டுமன்றி, அந்த அடைப்புகளையும் நீக்குவதன் மூலம் எதிர்காலத்தில் மீண்டும் கற்கள் தோன்றாதிருப்பதை உறுதிசெய்ய முடியும்.
தற்போது, கற்களை உடைப்பதற்காக லேசர்கள் பயன் படுத்தப்படுகிறது. பல வகைக் கற்களையும் லேசரைப் பயன்படுத்தி உடைக்கலாம் என்பதும் இதன்போது கற்கள் வேறு இடத்துக்கு நகர்வதைப் பெரும்பாலும் தவிர்க்கலாம் என்பதும் லேசர் சிகிச்சையின் மேலதிக நன்மைகள்.
இவை தவிர, லேசர் மூலம் சிறுநீரகத்தில் காயங்கள், கீறல்கள் ஏதுமின்றிக் கற்களை அகற்ற முடியும் என்பதும் முக்கியமானது.
சிறுநீரகக் கற்களை எப்படித் தவிர்ப்பது?
போதியளவு நீர் அருந்துதல்: நாளொன்றில் இரண்டு முதல் இரண்டரை லீற்றர் சிறுநீரை வெளியேற்றுவதற்குத் தேவையான நீரை நாம் அருந்த வேண்டும்.
உணவுப் பழக்கத்தில் மாற்றம்
பரிசோதனைகள்: சிறுநீரகத்தில் மீண்டும் மீண்டும் கற்கள் தோன்றும் பிரச்சினை உள்ளவர்கள், சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர் உள்ளவர்கள், கற்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டிகள் உள்ளவர்கள் சிறுநீரக மற்றும் இரத்தப் பரிசோதனைகள் செய்துகொள்ளவேண்டும்.
உங்களுக்கு எவ்வகையான சிகிச்சைகள் தேவைப் படும் என்பதை +0091 9884054755 என்ற கைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு அறியலாம்.
டொக்டர். குரு பாலாஜி