புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் 12 ஆவது சந்தேகநபர் என தர்மலிங்கம் ரவீந்திரன் என்ற சந்தேகநபரை குற்றப்புலனாய்வுப் பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை (01) ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
இந்த வழக்கில் இதுவரையில் 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களில் 10 பேர் தனியாகவும் 11 ஆவது சந்தேகநபர் தனியாகவும் இரகசியமாகவும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு வந்தார்கள்.
இந்நிலையில் 11 ஆவது சந்தேகநபர் தொடர்பான வழக்கு இன்று வெள்ளிக்கிழமை (01) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, 11 ஆவது சந்தேகநபருடன் 12 ஆவதாக கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும் சேர்த்து குற்றப்புலனாய்வு பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
இருவரையும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிவான் இ.சபேசன் உத்தரவிட்டார்.
2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி வன்புணர்வுக்குட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்குத் தொடர்பில் இதுவரையில் 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 10 சந்தேகநபர்கள் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 11 ஆவது சந்தேகநபர் அரச தரப்பு சாட்சியமாக மாறி இந்த வழக்கில் சாட்சி சொல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியது.
இந்நிலையில், தனது மகனை அரச தரப்புச் சாட்சியாக மாறுமாறு குற்றப்புலனாய்வு பொலிஸார் துன்புறுத்துவதாக 11 ஆவது சந்தேகநபரின் தாயார் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.
இந்த வழக்கு தொடர்பிலான டி.என்.ஏ பரிசோதனை அறிக்கை, சான்றுப்பொருட்களின் பகுப்பாய்வு அறிக்கை என்பன இதுவரையில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.