சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் சிறப்பு இணைப்பாளர் ரொட் புச்வால்ட், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இன்று காலை கொழும்பில் உள்ள முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
பொறுப்புக்கூறல் விவகாரங்கள் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாக இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பில் சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான பிரதி உதவி இராஜாங்கச் செயலர் மன்பிரீத் ஆனந்த் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நேற்று கொழும்பு வந்த, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் சிறப்பு இணைப்பாளர் ரொட் புச்வால்ட், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே, பாதுகாப்புச் செயலர் கரணாசேன ஹெற்றியாராச்சி ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.நா அதிகாரிகளுடன் போர்க்குற்ற விவகார அமெரிக்க நிபுணர் பேச்சு
02-03-2016
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் சிறப்பு இணைப்பாளர் ரொட் புச்வால்ட், இன்று கொழும்பிலுள்ள ஐ.நா அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
கொழும்பிலுள்ள ஐ.நா வதிவிட இணைப்பாளர் உனா மக் கோலியையும், சிறிலங்காவில் நல்லிணக்க முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் ஏனைய பிரதிநிதிகளையும், ரொட் புச்வால்ட் சந்தித்துப் பேசினார்.
சிறிலங்காவின் நல்லிணக்க முயற்சிகள் மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் குறித்தே அவர் கலந்துரையாடியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.