புதிய ஆட்சி மாற்றத்தில் முஸ்லிம்களின் எதிர்பார்ப்பு எந்த வகையில் நிறைவேறி வருகிறது?
முஸ்லிம்கள் இந்த நாட்டிலே முரணான போக்கிலே வாழ்ந்தவர்களுமல்ல. அவ்வாறு வாழ வேண்டுமென எண்ணங்கொண்டவர்களுமல்ல.
நாட்டுப்பற்றுடன் உழைத்தவர்கள் சிங்கள மன்னர்களுடன் இணைந்து இந்நாட்டை வெளிநாட்டு ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்கப் பாடுபட்டவர்கள்.
அவர்கள் ஏனைய இனங்களுடன் சகோதர உணர்வுடன் வாழப் பழகிக் கொண்டவர்கள். நிம்மதியும் சுகவாழ்வும் தேவை என வாழ்ந்து வருபவர்கள்.
இவ்வாறான சமூகத்துக்கு எதிராக கடந்த ஆட்சியின் இறுதிப் பகுதியில் இனவாதிகள் அட்டூழியங்களைக் கட்டவிழ்த்துவிட்டனர்.
முஸ்லிம்களை எந்தளவில் வதைக்க முடியுமோ அந்தளவுக்கு வதைத்தனர். இந்த அட்டகாசங்களைப் பார்த்தும் பாராமல் இருந்த மஹிந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கு அவர்கள், சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தனர்.
ஜனாதிபதித் தேர்தல் இதற்கு நல்ல சந்தர்ப்பமாக அமைந்தது. தேர்தலில் ஐ.தே. முன்னணியில் புதிய கூட்டு அமைத்து போட்டியிட்ட மைத்திரியை ஒருபோதுமே கண்டிராத, அறிந்திராத முஸ்லிம்கள் கூட அவருக்கு தமது ஆதரவை நல்கி தேர்தலில் வெற்றிபெற உதவினர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் மைத்திரிக்கு ஆதரவளித்தனர் என்று கூறினால் அதில் மிகையொன்றுமில்லை. புதிய ஆட்சி மாற்றத்தில் முஸ்லிம்கள் நிம்மதியாகவும் கௌரவமாகவும் வாழுகின்றனர்.
ஜனாதிபதித் தேர்தலில் உங்கள் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஜனாதிபதியுடன் முஸ்லிம்களின் நலன்கள் தொடர்பாக ஒப்பந்தம் செய்ததே அது குறித்து….
நாங்கள் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரிக்கும் போது ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டோம். முஸ்லிம்களின் நல உரிமைகள் தொடர்பிலேயே அந்த ஒப்பந்தம் அமைந்தது.
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை, முஸ்லிம்கள் செறிந்து வாழும் சில பகுதிகளில் உதாரணமாக தோப்பூர், மூதூர் போன்ற பகுதிகளுக்கு புதிய உள்ளூராட்சி சபைகள், புதிய பிரதேச செயலகங்கள் அமைத்தல், மௌலவி ஆசிரியர் நியமனங்கள் போன்ற இன்னோரன்னவை தொடர்பில் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டிருக்கின்றோம்.
ஒப்பந்தத்தில் கூறப்பட்டவாறு அவற்றை நிறைவேற்றித் தருவதாக அரசு வாக்குறுதியளித்துள்ளது. ஜனாதிபதி, பிரதமருடன் இது தொடர்பில் பேச்சு நடத்தியுள்ளோம். அவர்கள் நிறைவேற்றித் தருவார்கள் என்பதில் எமக்கு நிறைய நம்பிக்கையுண்டு.
புதிய அரசியலமைப்பு, தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன?
எத்தகைய சீர்திருத்தங்களோ, புதிய மாற்றங்களோ கொண்டு வரப்பட்டாலும் அது சிறுபான்மை மக்களுக்கு குறிப்பாக முஸ்லிம் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். இது தொடர்பில் ஜனாதிபதி பிரதமரிடம் எமது நிலைப்பாட்டை தெளிவுபத்தியுள்ளோம்.
முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளைத் திருப்திப்பத்தாத நிலை ஒன்று ஏற்பட்டால்?
முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளைத் திருப்திப்படுத்தாத எந்த விடயங்களுக்கும் நாம் ஆதரவளிக்க போவதில்லை. அத்துடன் அரசாங்கத்தின் புதிய முயற்சிகளில் சிறுபான்மை இனம் மாத்திரமல்ல சிறு கட்சிகளும் பாதிக்கப்படாக் கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.
இது தொடர்பில் ஜே.வி.பி., மனோ கணேசன் தலைமையிலான புதிய கூட்டணிக் கட்சி, சம்பிக்க தலைமையிலான ஹெல உறுமய கட்சிகளுடனும் நாம் பேச்சு நடத்தியுள்ளோம். இந்தக் கட்சிகளுடன் இணைந்து இன்னும் பல்வேறு கலந்துரையாடல்கள் நடத்தப்படவுள்ளன.
அரசியல் தீர்வுத் திட்டம், தேர்தல் முறை மாற்றம் என்பன தொடர்பில் முஸ்லிம்களின் அபிலாஷைகளை அரசு நிறைவேற்றுமா?
ஆட்சி மாற்றத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு காத்திரமானது. ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயமும் மைத்திரியின் வெற்றிக்கு உழைத்தது.
எனவே, ஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் ரணிலும் முஸ்லிம்களுக்கு பாதகமான எந்த ஒரு தீர்வையும் உருவாக்க மாட்டார்களென பெரிதும் நம்புகின்றோம்.
அத்துடன், தேர்தல் முறை மாற்றத்தின் மூலம் தற்போது பாராளுமன்றத்திலோ, உள்ளூராட்சி சபைகளில் முஸ்லிம்களுக்கு கிடைத்திருக்கும் பிரதிநிதித்துவத்தில் எந்த விதமான குறைவுகளும் ஏற்படக் கூடாது என்ற எமது கட்சியின் கோரிக்கையை நாட்டுத் தலைவர்கள் கவனத்திற் கொள்வார்களென நம்புகின்றோம்.
முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஒருமித்து செயலாற்ற வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்படுகின்றதே! உங்கள் கடசியின் நிலைப்பாடு என்ன?
சமூகம் தொடர்பான பொதுப் பிரச்சினைகளில் முஸ்லிம் கட்சிகள் பொதுவான இணக்கப்பாட்டின் ஒருத்து செயலாற்ற வேண்டுமென்பதில் எங்களுக்கு இரண்டுபட்ட கருத்துக்கு இடமில்லை.
கடந்த காலங்களில் நானும் அவ்வாறான ஓர் அழைப்பை விடுத்திருந்தேன் எனினும் சில முஸ்லிம் கட்சிகள் இந்த அழைப்பை எமது பலவீனம் எனக் கருதி இணையத் தளங்களிலும் முக நூல்களிலும் முட்டாள்தளமான கருத்துக்களை வெளியிட்டன.
எமது கட்சியைக் கலைத்துவிட்டு தங்களது கட்சிகளில் நாம் கரைந்து விட வேண்டும் என அவர்கள் நினைத்தனர்.
எம்மைப் பொறுத்த வரையில் நாம் பூச்சியத்திலிருந்து கட்சியை ஆரம்பித்தவர்கள். ஐந்து எம்.பிக்களை உருவாக்குமளவுக்கு மக்களின் ஆதரவு எமக்குக் கிடைத்துள்ளது.
குறுகிய காலத்துள் நாம் கண்ட வளர்ச்சியைப் பொறுக்க முடியாத காழ்ப்புணர்வு கொண்ட சக்திகளே விஷமனத்தனமான பிரசாரங்கள் மேற்கொள்கின்றனர்.
மக்களின் நன்மைக்காக அவர்களுக்கு பணி புரிவதற்காகவே கட்சிகள் உருவாக்கப்படுகின்றன. மர்ஹும் அஷ்ரபின் மறைவின் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சமூகப் பயணத்திலே தடம்புரண்டதனாலேயே நாம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை உருவாக்கினோம். எனவே, மீண்டும் எந்தக் கட்சியுடனும் நாம் சென்று சங்கமிக்க வேண்டும் என்ற அவசியம் எமக்குக் கிடையாது.
சந்திப்பு சுஐப் எம். காசிம்