பொன்சேகா பாதுகாப்புத் துறைச் செயலர் கோத்தாபய ராஜபக்சக்குப் பிரபாகரன் உடல் கண்டெடுக்கப்பட்டுவிட்டதைத் தெரிவித்தார். கோத்தாபய பொன்சேகாவின் சக அதிகாரியாயிருந்தவர்தான்.
ஆனால் இப்போது அவரது மேலதிகாரி. அது மட்டுமல்ல, இலங்கையிலேயே மிகுந்த அதிகாரமுடையவராகவும் விளங்கினார் அவர். பிரபாகரன் அளவுக்கே உறுதியுடன், அவரைப் போன்றே ஈவிரக்கமில்லாமல் செயல்படக்கூடியவர் ஒருவர் சிங்களத் தரப்பில் இருந்தார் என்றால் அது கோத்தாபயதான்.
இலங்கையின் தென்பகுதி விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் அரசியல்வாதியல்ல. ஒரு சாதாரண அரசு நிர்வாகியுமல்ல. இலங்கை ராணுவத்தில் கட்டத்தில் மயிரிழையில் உயிர் தப்பியவருங்கூட.
ஓய்வுபெற்ற பிறகு தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் சட்டத் துறையில் கம்ப்யூட்டர் பிரிவு மேலாளராகப் பணியாற்றிய அவரை, அவரது அண்ணன் மஹிந்த ராஜபக்சதான் இலங்கைக்குத் திரும்பி வருமாறு அழைத்தார்.
2005 அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றால், விடுதலைப்புலிகளை எதிர்த்து முழுமூச்சாகப் போராடலாம் என்று சொல்லி அவரை நாடு திரும்பச் சம்மதிக்க வைத்தார்.
தலைமை பலவீனமாயிருந்ததால்தான் புலிகளை வெற்றிகொள்ள முடியவில்லை என்று எப்போதுமே உறுதியாக நம்பியவர் கோத்தாபய.
தனது அண்ணன் அதிபராகிவிட்டால் பழிவாங்க நல்ல நேரம். அதுமட்டுமல்ல, வெற்றியடைந்துவிட்டால் புதிய அரசியல் பரம்பரையையும்கூட உருவாக்கிவிடலாமென்றும் கோத்தாபய ராஜபக்ச கணித்திருக்கக்கூடும்.
போர் முடிந்த சில மாதங்களிலேயே ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கும் கோத்தாபயாவிற்குமிடையே மோதல் ஏற்பட்டு, கோத்தாபய போர்க்குற்றங்கள் புரிந்ததாகப் பொன்சேகா பகிரங்கமாகக் குற்றஞ்சாட்ட, பதிலுக்கு அவர் நாட்டைக் கெடுக்கிறார் என்று குற்றஞ்சுமத்தினார் கோத்தாபய.
ஆனால் 2006இல் வெற்றி கிடைக்குமா என்பது உறுதியாகத் தெரியாமல் இருந்த நேரத்தில் இருவரும் இணைந்தேதான் விடுதலைப்புலிகளை அடியோடு அழித்துவிடுவது எப்படி என்று திட்டமிட்டனர்.
சீனாவிடமிருந்து தேவையான ஆயுதங்களைப் பெற்றனர். துருப்புக்களுக்குத் தேவையான பயிற்சியையும் அளித்தனர். மோதல்களின் இறுதிக்கட்டங்களில் மிக நெருக்கமாகவே இருந்தனர்.
வெற்றி மேல் வெற்றியை ராணுவம் குவிக்க இன்னமும் தீவிரமாக அவர்கள் இணைந்து பணியாற்றினர்.
பிரபாகரன் கொல்லப்பட்டது உறுதியானவுடன் கோத்தாபய தன் அண்ணனுக்கும் செய்தியைத் தெரிவித்து வரலாற்றில் அவர் பெயர் இடம் பெறப்போவது உறுதி என்றார்.
அதே நேரம் போர்க்களத்தில், பிரபாகரனின் உடலைச் சுமந்து மிகக் கவனமாக நான்குபேர் ஓடையின் ஓரமாக நடந்து செல்ல, இரு மருங்கிலும் மற்ற வீரர்கள். அவர்கள் களைத்துப்போயிருந்தார்கள்.
ஆயினும் பிரபாகரனின் மரணத்தால் அவர்களுக்கு உற்சாகம் பீறிட்டது. உடலைச் சுமந்த வீரர்கள் முன்னேற, மற்றவர்கள் தத்தம் ஆயுதங்களைத் தலைக்கு மேல் உயர்த்திப்பிடித்துத் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.
ரோமானியர்கள் ட்யூட்டானிக் இனத் தலைவர்கள் வீழ்த்தப்படுவதை அப்படித்தான் கொண்டாடுவார்களாம். பலர் அந்தக் கணத்தைத் தங்கள் மொபைல் போனில் பதிவுசெய்துகொண்டனர்.
அங்குக் குழுமியிருந்த நூற்றுக்கணக்கான வீரர்கள் உடலைத் தொட்டுப் பார்க்க இருந்திருந்தால் நிச்சயம் அவர்களனைவரும் தங்கள் கைகளை உயர்த்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருப்பார்கள்.
அம்மொபைல் ஃபோன் படங்கள் சில மணிநேரங்களிலேயே உலகமெங்கும் வலம்வந்தன. அதிகாரபூர்வ ராணுவப் புகைப்படக்காரர் ஒருவர் எடுத்த புகைப்படம் மறுநாள் நியூயார்க் டைம்ஸ் நாளேட்டின் முதற்பக்கத்தில் வெளியானது.
ஒரு வழியாக நீர்த் தேங்கிய பகுதிகளைக் கடந்து காய்ந்துபோன மணற்பாங்கான ஓர் இடத்தில் உடலை இறக்கினர். ராணுவத்தின் நிபுணர் குழு ஒன்று உடலை நன்கு பரிசோதித்தது. பிரபாகரன்
அணிந்திருந்த சீருடையையும் மண்டை பிளந்திருந்த இடத்தையும் கூர்ந்து கவனித்தனர். வீங்கியிருந்த அந்த முகத்தை, ஏற்கெனவே வெளியுலகுக்கு அறிமுகமாகியிருந்த புகைப்படங்களுடனும் சிலமாதங்களுக்கு முன் புலிகள் விட்டுச் சென்ற ஒரு பதுங்குக்குழியில் கண்டெடுக்கப்பட்ட ஓர் ஆல்பத்தில் காணப்பட்ட புகைப்படங்களுடனும் ஒப்பிட்டனர்.
பிரபாகரனுடன் மகன் சார்லஸ் ஆண்டனி
பிரபாகரனின் வாரிசு என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த அவரது 22 வயது மகன் சார்லஸ் ஆண்டனி ஏற்கெனவே இறந்திருந்தார்.
அவரது உடல் இரண்டு நாட்களுக்கு முன் களத்தில் கண்டெடுக்கப்பட்டிருந்தது. அவ்வுடலின் டி.என்.ஏவுடன் பிரபாகரனின் டி.என்.ஏவை ஒப்பிடுவதற்காக அவரது உதடுகளிலிருந்து உமிழ்நீர் துடைத்தெடுக்கப்பட்டது.
குட்டைகளிலிருந்து அல்லது மணற்குன்றுகளிலிருந்து இழுத்துவரப்பட்ட மற்ற விடுதலைப்புலித் தலைவர்களின் உடல்களை ஏற்கெனவே ராணுவத் தடயவியற்குழு அடையாளம் கண்டிருந்தது.
மீட்கப்பட்ட உடல்கள் வரிசையாக அடுக்கப்பட்டன. கைகளை விரித்த வண்ணம், உடல் வீங்கி, சிதைக்கப்பட்டு அல்லது எரிக்கப்பட்டு சிலர். சயனைட் விழுங்கியதால் ஏற்பட்ட மாற்றங்களுடன் முகம் கோணி இன்னும் சிலர். அப்பகுதியில் கடும் துர்நாற்றம்.
நடேசன், புலித்தேவன், சார்லஸ் ஆண்டனி, மணிமேகலா, கண்ணதாசன், அருள் வேந்தன், அண்ணாதுரை, சூசை, ரங்கன், தாமஸ், பூரணி, பானு.
இறந்தவர்கள் உண்மையான அல்லது புனைப்பெயர்களுடன் இறந்துவிட்டதாகத் தொலைக்காட்சிகள் அறிவித்தபோது ஏதோ ஒரு பெரும் காவியத் திரைப்படத்தின் முடிவில் பங்கேற்றோரின் பெயர்கள் தோன்றுவதைப்போலிருந்தது.
பெயர்களெல்லாம் பார்த்தவர்களுக்குப் பழக்கமானவைதாம். முப்பதாண்டுகளாக அத்தீவில் நடந்துவந்த கடுமையான மோதல்களில் இலங்கை ராணுவத்தை எதிர்த்து நின்றவர்கள், அவர்களுடைய வீர தீரச் செயல்களுக்காகத் தமிழர்களால் போற்றப்பட்டவர்கள், நாயகர்களாகக் கொண்டாடப்பட்டவர்கள்.
உலகெங்கும் பரவியிருந்த இலங்கைத் தமிழர்களால் கடவுளாகக்கூடப் போற்றப்பட்டவாகள். இலங்கைத் தமிழாகள் சோகத்தில் மூழ்கினரென்றால், சிங்களர்கள் பரபரப்பாகச் செய்திகளைப் பறிமாறிக்கொண்டனர்.
இலங்கையின் இரண்டு கோடி மக்கள் தொகையில் 75 சதம் அவர்கள்தாம். ஒவ்வொரு பெயராக அறிவிக்கப்பட, மொபைல் ஃபோன் வழியாக, செய்தித் துறையின் குறுஞ் செய்தியாக நாலாத் திக்கிலும் பறக்க, இணையதளங்கள், ஃபேஸ் புக், ட்விட்டர் என்று கணினித்திரைகளுக்கும் வந்து சேர்ந்தது.
உடனே ஆர்வமாக கூகிள் சேவை மூலம் எப்படி இறந்தார், பூர்வீகம் என்னவென்றெல்லாம் ஆய்ந்தனர். தெருமுனை ஹோட்டல்களில் தொலைக்காட்சிச் செய்திகள் வெளியாக வெளியில் ஆங்காங்கே பட்டாசு கொளுத்தப்பட்டது.
ஆனால் முப்பதாண்டுக் கால மோதலில் இறுதிநாளான அன்று பட்டாசு வெடிச் சத்தத்தையும் மீறிக் கொண்டாட்டங்கள் சற்று மட்டுப்பட்டுத்தான், அரைமனத்துடன்தான் இருந்ததாகத் தோன்றியது.
ஒரு லட்சம் பேரைப் பலிவாங்கிய அவ்வினமோதல் முடிந்துவிட்டதென்று நம்புவது சிங்களர்களுக்குச் சற்றுக் கடினமாகவே இருந்தது எனலாம்.
நாள்தோறும் விடுதலைப்புலிகளின் அதிரடித் தாக்குதல்களால் நிலைகுலைந்து போனவர்கள் ஒன்றும் மகிழ்ச்சிக் கூத்தாடவில்லை. குண்டுவெடிப்புகள், சட்டத்தைப் பற்றிச் சற்றும் கவலையில்லாது நிகழ்த்தப்பட்ட காவல் துறையின் தேடல்கள், கொடுமைகள் கைது நடவடிக்கைகள் பல்வேறு வகையான பல தரப்பினரின் அத்துமீறல்கள், சட்டம் ஒழுங்கு குலைவது இப்படியேதான் இருந்தது அன்றாட வாழ்க்கை.
அவர்களிடத்தில் அரசின் கொலைப்படைகளும் பீதி ஏற்படுத்தி வந்திருந்தன. யார் வேண்டுமானாலும் பிடிக்கப்பட்டு இழுத்துச் செல்லப்படலாம்.
அதன் பிறகு எங்காவது கடற்கரையிலோ அல்லது வயல்வெளிகளிலோ உயிரற்ற உடல்களைப் பார்க்கலாம். இக்கொலைப்படைகளிடம் சிக்கி மடிந்தவர்கள் பெரும்பான்மையானவர்கள் தமிழர்கள்தாமென்றாலும், எதிர்க்கட்சித் தலைவர்கள், வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், அறிவுஜீவிகள், மனிதாபிமானப் பணிகளில் ஈடுபடும் அமைப்புகளைச் சார்ந்தவர்கள், செய்தியாளர்கள் என்று சிங்களர் பலரும் கொலையுண்டிருக்கின்றனர்.
சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க
2009ஆம் ஆண்டு ஜனவரியில் அரசைக் கடுமையாக விமர்சனம் செய்துகொண்டிருந்த சண்டே லீடர் என்னும் ஆங்கில ஏட்டின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க பட்டப்பகலில் கொல்லப்பட்டார். தனது அலுவலகத்திற்குச் சென்றுகொண்டிருந்தபோது அவரது காரை வழிமறித்து, முகமூடியணிந்த சிலர் அவரைச் சரமாரியாகச் சுட்டார்கள்.
அண்மைக்காலப் படுகொலைகளிலேயே பெரும் அதிர்ச்சியளித்தது அக்கொலைதான். தான் கொல்லப்படக்கூடும் என்று கூறித் தலையங்கமே எழுதினார் லசந்த. கொல்லப்பட்டு மூன்று நாட்கள் கழித்து அது வெளியிடப்பட்டு, உலக அளவில் மிகப் பிரபலமானது.
அதில் அவர் நாஜிகளைத் துணிச்சலாக எதிர்த்த கிறித்தவத் புகழ்பெற்ற கவிதையையும் பிரசுரித்திருந்தார். அவர்கள் முதலில் கம்யூனிஸ்டுகளைத் தேடி வந்தனர். நான் கம்யூனிஸ்ட் இல்லை, எனவே கண்டிக்கவில்லை. பிறகு தொழிற்சங்கவாதிகளைத் தேடினர். நான் தொழிற்சங்கவாதியில்லையே, எனவே அப்போதும் பேசவில்லை.
பிறகு யூதர்களைத் தேடி வந்தனர். நான்தான் யூதனில்லையே எனவே பேசவில்லை. பிறகு என்னையும் தேடி வந்தார்கள், அப்போது எனக்காகக் குரல் கொடுக்க எவரும் இல்லை.
ரஷ்யாவும் சீனாவும் தீவிரமாக இலங்கையை ஆதரிக்க, அமெரிக்க முயற்சிகள் தோல்வியுற்றன. இறுதிவரை உறுதியுடன்தான் விடுதலைப் புலிகள் போராடினர்.
தாக்கிவிட்டு மறையும் கெரில்லாப் படையாக இருந்தவர்கள் மற்ற ராணுவங்களைப் போன்று, ஓர் இடத்தைக் கைப்பற்றி அதை உறுதியுடன் காப்பதில் வல்லமை பெற்றிருந்தார்கள்.
வடபகுதியில் ஏறத்தாழத் தனி ஒரு நாட்டையே ஆண்டுவந்தனர். ஒவ்வொரு மோதலுக்குப் பிறகும் தங்கள் எல்லையை விரிவுபடுத்திக்கொண்டனர். ஆயுத வலிமை, போரிடும் திறன், இயக்க அமைப்பு எல்லாமே மற்றவர் பிரமிக்கும் அளவு வளர்ந்தது.
ஆகாய விமானம் தாங்கிய கப்பற்படைகூட அவர்களிடமிருந்தது. ஆழ்கடலில் வர்த்தகக் கப்பல்களைக் கொள்ளை அடிக்க முடிந்தது. அரசின் போர்க் கப்பல்களை மூழ்கடித்தனர்.
அவர்களே 12க்கும் மேற்பட்ட கப்பல்களுடன் வணிகப் போக்குவரத்தையும் நடத்தினர். சட்டபூர்வமான வியாபாரம், மற்றபடி ஆயுத மற்றும் ஆட்கள் கடத்தலிலும் அவர்கள் ஈடுபட்டனர்.
கடற்புறாக்கள் என்றறியப்பட்ட அவ்விடுதலைப் புலிகளின் கப்பல்கள் ஜப்பான், இந்தோனேசியா, சிங்கப்பூர், துருக்கி, பிரான்ஸ், இத்தாலி, உக்கிரைன் போன்ற பல நாடுகளுக்குச் சென்றுவந்தன.
அது மட்டுமல்ல உலகிலேயே சட்டபூர்வமான அரசுகளை எதிர்க்கும் கெரில்லாப் படைகளில் விடுதலைப்புலி இயக்கம் மட்டும்தான் விமானப் படை ஒன்றை உருவாக்கியது.
அவர்களது விமானங்கள் கொழும்புமீதும், ராணுவத் தளங்கள்மீதும் அவ்வப்போது இரவு நேரங்களில் தாக்குதல்கள் நடத்தின. மேலும் கடற்படைத் தளங்கள்மீதும், அரசுப் பகுதிகளுக்குள் பல மைல் தூரம் வந்து அரசுத் துறை நிறுவனங்கள்மீதும் தற்கொலைத் தாக்குதல்கள் நிகழ்த்தினர்.
ஒருமுறை கொழும்பு பண்டாரநாயக்க விமான நிலையத்தில் நுழைந்து, ராணுவ விமானங்கள், ஏர் லங்காவின் ஆறு ஜெட்டுகள் இன்னும் வேறு பல என்று மொத்தம் 26 விமானங்களைத் தகர்த்தெறிந்து அலைகளை எழுப்பினர்.
இவையெல்லாம் விமான நிலையத்திலிருந்த நூற்றுக்கணக்கான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் கண்முன்னே.
(தொடரும்..
எழுதியது : கார்டன் வைஸ்
தொகுப்பு: கி.பாஸ்கரன்- சுவிஸ்-)
இலக்கியாவில் பல விறுவிறுப்பு தொடர்கள் ஆரம்பமாகியுள்ளன: வாசிக்கத்தவறாதீர்கள்.
’ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து…: