தமிழகத்தில் கள்ளக்காதலனை கொன்று உடலை எரித்த வழக்கில் கள்ளக்காதலி உட்பட 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோபி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள அத்தாணி செம்புளிச்சாம்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன் (30). கரட்டூரில் உள்ள ஒரு தனியார் கரும்பு ஆலையில் தொழிலாளியாக பணி புரிந்து வந்துள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்தவர் தேவி (45). ஏற்கனவே திருமணமானவர். இவரும் முருகேசன் வேலை பார்த்த ஆலையில் பணி புரிந்து வந்துள்ளனர்.
முருகேசனும், தேவியும் ஆலை அருகே குடிசை வீடுகளில் வசித்து வந்தார்கள். ஒரே இடத்தில் வேலை பார்த்ததால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இந்தநிலையில் தேவிக்கும், அதே கரும்பு ஆலையில் பணி புரியும் கோபி பச்சமலையை சேர்ந்த முருகன் (40) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
அவருடனும் தேவி கள்ளத்தொடர்பு வைத்திருந்தாக கூறப்படுகிறது. இந்த விடயம் முருகேசனுக்கு தெரியவந்துள்ளதையடுத்து, இது தொடர்பாக இருவரையும் கண்டித்துள்ளார்.
மேலும் தேவியிடம், தன்னுடன் மட்டும்தான் நீ உல்லாசம் அனுபவிக்க வேண்டும் என்றும் வேறு ஆண்கள் யாரையும் நினைத்து கூட பார்க்க கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.
ஆனால் தேவி முருகனிடம் தொடர்ந்து பழகியதாகவும் அவருடன் உல்லாசம் அனுபவித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஒருநாள் இரவு 9 மணியளவில் முருகேசன் மீண்டும் முருகனையும், தேவியையும் அழைத்து எச்சரித்துள்ளார்.
அதன்பின்னர் அவர் தன்னுடைய வீட்டுக்குச் சென்று உறங்கியுள்ளார். அப்போது அவர் குடிபோதையில் இருந்தாக கூறப்படுகிறது.
முருகேசன் அடிக்கடி மிரட்டியதால் அவரை கொலை செய்துவிட தேவியும், முருகனும் முடிவு செய்துள்ளனர். அதன்படி சம்பவத்தன்று இரவு அவருடைய குடிசைக்கு சென்ற தேவி, அவரை வெளியே அழைத்து வந்துள்ளார்.
பின்னர் முருகனும், தேவியும் அவரை கீழே தள்ளி தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்து பின்னர் அவரின் சடலத்தை அருகே இருந்த மயானத்துக்கு எடுத்து சென்று எரித்துள்ளனர்.
உடனே தடயத்தை மறைப்பதற்காக முருகேசனின் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி எரித்துவிட்டு சென்றுவிட்டார்கள்.
இந்த சம்பவம் குறித்து கோபி பொலிஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி தேவியையும், முருகனையும் கைது செய்துள்ளார்கள்.
மேலும் கோபி 3ஆவது கூடுதல் அமர்வு நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள்.
இந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பு கூறப்பட்டது.
அதில், ‘முருகேசனை கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்த குற்றத்திற்காக தேவிக்கும், முருகனுக்கும் ஆயுள் தண்டனையும், இருவருக்கு தலா 10 ஆயிரம் ரூபா அபராதமும், அந்த தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறைதண்டனையும் விதித்தார்.
இதுதவிர சம்பவத்தை மறைக்க உடலை எரித்த குற்றத்திற்கு இருவருக்கும் மேலும் ஒரு ஆயுள் தண்டனையும், இருவருக்கும் தலா 5 ஆயிரம் ரூபா அபராதமும், அதை கட்ட தவறினால் 3 மாதம் சிறைதண்டனையும் விதித்து நீதிபதி கலாவதி உத்தரவிட்டார்.
தீர்ப்பில் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். அதைத்தொடர்ந்து தேவியும், முருகனும் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.