6-வது உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது வெஸ்ட் இண்டீஸ்.
வெற்றியின் பின் உணர்வு பூர்வமாக கருத்து தெரிவித்தார் -சமி
உலகக் கிண்ண டி20 தொடர் முழுதும் நம்பமுடியாத அதிரடி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி கிண்ணத்தை வென்றது மேற்கிந்திய தீவுகள். அதன் தலைவர் டரன் சமி வெற்றிக்குப் பிறகு உணர்ச்சி பொங்க தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
நான் கடவுளுக்கு நன்றி தெரிவிக்கிறேன். அவர் இல்லையென்றால் எதுவும் சாத்தியமாகியிருக்காது. எங்கள் அணியில் பாதிரியாராக அந்த்ரே பிளெட்சர் இருக்கிறார்.
அவர் எப்போதுமே வேண்டுதல் நடத்திக் கொண்டேதான் இருந்தார். எங்கள் அணியே கடவுளை வழிபாடு செய்யும் அணி. இந்த வெற்றி மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. இந்த வெற்றியை நாங்கள் நீண்ட நாட்களுக்குக் கொண்டாடவே செய்வோம்.
15 மெட்ச் வின்னர்களை வைத்திருக்கிறோம் என்று கூறினேன். எங்களுக்கு யாரும் வாய்ப்பளிக்கவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொருவர் பொறுப்பைச் சுமந்தனர்.
தனது அறிமுக உலகக் கோப்பையிலேயே பராத்வெய்ட் இப்படி ஆடுவது உண்மையில் புல்லரிக்கச் செய்கிறது. கரீபிய டி20 கிரிக்கெட்டில் இருக்கும் ஆழத்தை வெளிப்படுத்துகிறது இந்த வெற்றி.
நல்ல அமைப்பும் வளர்ச்சியை நோக்கிய முன்னெடுப்பும் இருக்குமேயானால் ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் கூட தொடர்ந்து முன்னேற்றப்பாதையில் செல்ல முடியும் என்று நான் நம்புகிறேன்.
இந்தத் தொடரில் நாங்கள் விளையாடுவோமா என்று பலரும் பேசினர். எங்களுக்கு நிறைய பிரச்சினைகள் இருந்தன. எங்கள் கிரிக்கெட் சபை எங்களை மதிக்கவில்லை என்பதாகவே உணர்ந்தோம்.
மார்க் நிகலஸ் எங்கள் அணியை மூளையில்லாதவர்களின் அணி என்று கேலி செய்தார். தொடருக்கு முன்பாக இத்தகைய விஷயங்கள் எங்களை நாங்கள் ஒருங்கிணைத்துக் கொள்ள உதவியது.
உண்மையில் இந்த 15 வீரர்களுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எவ்வளவோ எங்களைப் பற்றி பேசப்பட்டது, இந்த எதிர்மறை விஷயங்களை கடந்து வந்து இத்தகைய கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தியது, அதுவும் உணர்வு மிக்க இரசிகர்கள் முன்னிலையில் வெளிப்படுத்தியது அருமையிலும் அருமை.
பயிற்சியாளர் பில் சிம்மன்ஸுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். புதிய முகாமையாளர் ரால் லூயிஸ், அவர் எங்களுக்காக பட்ட கஷ்டம் அதிகம்.
எங்களுக்கு சீருடை கூட இல்லை. அவர் துபாயில் நாங்கள் பயிற்சியில் ஈடுபட்டது முதல் எங்களுக்காக பாடுபட்டார், அங்கிருந்து கொல்கத்தா வந்தார்.
எங்களுக்கு இந்த சீருடையைப் பெற்றுத்தர அவர் பட்டபாடு எங்களுக்குத்தான் தெரியும், அவருக்கு எனது நன்றிகள். எங்களது இந்த வெற்றியை மேற்கிந்திய தீவுகள் இரசிகர்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறோம்.
கிரெனடாவிலிருந்து பிரதமர் கெய்த் மிட்செல் எங்களை உத்வேகப்படுத்த போட்டி தினத்தன்று மின்னஞ்சல் செய்தார்.
அவர் எங்களை தொடர்ந்து ஊக்குவித்து வந்தார், வெற்றி பெற வாழ்த்துகளைத் தெரிவித்தார், ஆனால் மே.இ.தீவுகள் சபைகளிடமிருந்து இன்னும் கூட வாழ்த்துச் செய்தி வரவில்லை, இது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.
இன்று நான் இந்த 15 வீரர்கள், பயிற்சியாளர்கள் அணி ஆகியோருடன் இந்த சீரிய வெற்றியைக் கொண்டாட போகிறேன். மீண்டும் இவர்களுடன் நான் எப்போது ஆடுவேன் என்று தெரியவில்லை.
எங்களை ஒருநாள் போட்டிகளுக்கு தேர்வு செய்ய மாட்டார்கள்.
மீண்டும் டி20 எப்போது விளையாடுவோம் என்று தெரியவில்லை. எனவே இந்த வெற்றிக்காக என் அணிக்கு மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேற்கிந்திய தீவுகள்தான் சம்பியன் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே என்றார் டரன் சமி. இதன்மூலமாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 2 வது டி20 உலக கிண்ணம் சொந்தமானது.
மேற்கிந்திய தீவுகள் அணி 2012 இல் டரன் சாமி தலைமையில் உலக டி20 கிண்ணத்தை வெற்றிகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு அணிகளும் ஒவ்வொரு வீரரையே நம்பியிருக்கிறது, ஆனால் எங்கள் அணியில் 15 வீரர்களும் மெட்ச் வின்னர்களே என்று அடிக்கடி சொல்லிவரும் மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் டரன் சமியின் கருத்தை, மீண்டுமொரு தடவை அந்த அணி வீரர்கள் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள்.
சாமுவேல் பத்ரி , கிறிஸ் கெயில் , மார்லோன் சாமுவேல்ஸ், லேண்டில் சிம்மொன்ஸ் வரிசையில் கார்லோஸ் பரத்வைட் தானும் ஒரு மெட்ச் வின்னர் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.
ஆட்ட நாயகன் விருது மார்லன் சாமுவேல்ஸ்சுக்கும் , தொடர் நாயகன் விருது விராட் கோஹ்லிக்கும் கிடைத்தது.
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபைக்கும் வீரர்களுக்குமிடையில் முறுகல் நிலை தொடர்ந்த வண்ணமிருந்தாலும் அந்த அணி ஐ.சி.சியின் 3 உலக கிண்ணங்களை வெற்றிகொண்டு எல்லோரையும் பிரமிப்பில் ஆழ்த்தியிருக்கிறது
இந்திய ரூ.23 கோடி பரிசு
டி 20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு இந்திய ரூ.23.5 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு இந்திய ரூ.10 கோடியும் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.
அரையிறுதியில் தோற்ற இந்தியா, நியூஸிலாந்து அணிகள் தலா இந்திய ரூ.5 கோடி பெறுகின்றன.
இதுதவிர போட்டியில் பங்கேற்ற எல்லா அணிகளுக்கும் தலா இந்திய ரூ.2 கோடி வழங்கப்படுகின்றன. இந்த தொடரின் மொத்த பரிசுத்தொகை இந்திய ரூ.67 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கு எதிரான கடந்த போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார் சாமுவெல்ஸ். இதற்காக அவரை கடுமையாக விமர்சனம் செய்தார் ஆஸ்திரேலியா சுழல்பந்து வீச்சாளர் வார்னே.
ஆனால் இன்று சிறப்பாக விளையாடி வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற உதவினார் சாமுவெல்ஸ்.
இதற்காக அவருக்கு ஆட்டநாயன் விருது அளிக்கப்பட்டது. தனக்கு அளிக்கப்பட்ட ஆட்டநாயகன் விருதை வார்னேவுக்கு அர்ப்பணிப்பதாக கூறி அவருக்கு பதிலடிக் கொடுத்துள்ளார் சாமுவெல்ஸ்.
சாமுவேல்ஸ் – ஷேன் வோர்னின் 3 வருடத் தீராப் பகை இங்கே தான் ஆரம்பித்தது – Shane Warne vs Marlon Samuels FULL FIGHT
உலக T20 கிண்ண வெற்றிக்குப் பின்னரான முழுமையான ஊடக சந்திப்பு.
Champions !!! – உலக T20 கிண்ணம் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் – ICC #WT20 Final – England vs West Indies – Match Highlights ICC ICC