பிரபல ரக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் படுகொலை விவகாரத்தில் சாட்சிகளை மறைத்தமை தொடர்பில் கைதான முன்னாள் நாரஹேன்பிட்டி குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி மீதான வழக்கு விசாரணை நேற்று புதுக்கடை நீதிவான் நீதிமன்ற வளாகத்தின் பொலிஸ் காவலரணிலேயே இடம்பெற்றது.
நேற்று போயா விடுமுறை என்பதால் புதுக்கடை நீதிவான் நீதிமன்றவளாகத்தில் வழக்கு விசாரணைக்கு என 9 ஆம் இலக்க நீதிவான் நீதிமன்ற நீதிபதி திலிண கமகே கடமையில் இருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வஸீம் தாஜுதீன் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் சுமித் சம்பிக்க பெரேராவை நேற்று மன்றில் ஆஜர் செய்வதாக இருந்தது.
இது தொடர்பில் நீதிவான் திலின கமகேவுக்கும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காலை முதல் பி.ப. 3.00 மணிவரை அவரும் தனது 9 ஆம் இலக்க நீதிமன்றில் இருந்தார்.
எனினும் சந்தேக நபர் அழைத்து வரப்படாத நிலையில் 3.00 மணிக்கு கடமையை நிறைவு செய்த நீதிவான் நீதிமன்றிலிருந்து செல்ல தனது காரில் பயணத்தை ஆரம்பித்தார்.
இதன்போதே சந்தேக நபரான பொலிஸ் பரிசோதகர் சுமித் சம்பிக்க பெரேராவை புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றுக்கு அழைத்து வந்து பொலிஸ் காவலரணில் வைத்திருந்தனர்.
நீதிவான் தான் செல்லும் போது இதனை அவதானித்து உடனடியாக நீதிமன்ற வாயிலில் காரை நிறுத்திவிட்டு பொலிஸ் காவலரணுக்குள் சென்று வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.
“ஏன் இப்படி அலைக்கழிக்கிறீர்கள் இன்று விடுமுறை நாள். நாமும் கடமையை தானே செய்கிறோம். பி.ப. 2.00 மணிக்கு வருவதாகக் கூறினீர்கள். பின்னர் பி.ப. 2.15 என்றீர்கள். பி.ப. 2.30 வருகிறோம் என்றீர்கள்.
5 நிமிடங்களில் வருவதாகக் கூறினீர்கள். வரவே இல்லை. இப்போது வந்து நிற்கிறீர்கள்” என குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளை பார்த்து கூறியவாறே வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.
இதன்போது பொலிஸ் காவலரணில் தொலைக் காட்சி செயலில் இருந்ததுடன் அதில் நிகழ்ச்சி ஒன்றும் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. விசாரணையின் இடை நடுவிலேயே தொலைக்காட்சியும் நிறுத்தப்பட்டது.
தாஜுதீனின் படுகொலை : மூன்று முக்கிய நபர்கள் கைதாவர் : புதிய பொலிஸ் மா அதிபர் தகவல்
பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் படுகொலை விவகாரத்தில் மேலும் முக்கிய மூன்று நபர்கள் கைது செய்யப்படுவர் என புதிய பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர இன்று தெரிவித்தார்.
புதிதாக கடமையேற்ற பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவை வரவேற்கும் நிகழ்வு பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் கப்பம் பெறுதலை நிறுத்தல், போதை பொருள் சோதனை நடவடிக்கைகளின் போது முறையாக நடந்து கொள்ளல், நற்பண்புடன் இருத்தல் ஆகிய
மூன்று விடயங்களை கட்டாயம் பின்பற்றி பொலிஸின் அடையாளம் மற்றும் கௌரவத்தை மீண்டும் உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.
மேலும் பொலிஸாரின் மீது காணப்படும் கருப்பு புள்ளிகளை அகற்றும் காலம் ஆரம்பிக்கப்பட வேண்டும்.