எல்லாமே ஏமாற்றம், எல்லாமே தோல்வி, எல்லாமே பிரச்சினையென்று சொல்லுமளவுக்கு தமிழ் மக்கள் குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
என்பதற்கு இன்னுமொரு உதாரணந்தான் அரசாங்கம் கொண்டு வந்திருக்கும் 65,000 ஆயிரம் வீடுகள் அமைக்கும் திட்டம்.
இன்று எங்கு பார்த்தாலும் இதுபற்றியே பேச்சு, விமர்சனம், கண்டனம், என்பன தோன்றிய வண்ணமேயுள்ளன.
ஏலவே இந்திய அரசாங்கத்தால் உதவுகரமாக கொண்டுவரப்பட்ட 50 ஆயிரம் வீடுகள் அமைக்கும் திட்டம் பற்றிய, குற்றங்கள் குறைகள் கண்டனங்கள் என்பவற்றுக்கு மேலாக 65 ஆயிரம் வீடுகள் அமைப்புப்பற்றிய குற்றப்பத்திரங்கள் நெருப்பைப் போல் தற்பொழுது எரிந்து கொண்டிருக்கின்றன.
கடந்தகால யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வீடு வாசல்களை இழந்து உடமைகள் சங்காரம் ஆக்கப்பட்டு உறவுகளைத் தொலைத்து நிற்கும் வடக்கு, கிழக்கு மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதன் மூலம் அவர்களின் மீள்குடியேற்றமும் புனர்வாழ்வும் செம்மைபெற முடியும் என்ற நல்நோக்கின் அடிப்படையில் மேற்படி 65 ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுக்கும் முயற்சிகளில் நாம் தீவிரமாகவும், வேகமாகவும் ஈடுபட்டு வருகின்றோமென, அரசாங்கம் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில்தான் இந்த வீட்டுத்திட்டம் வேண்டாம், குளறுபடியானது ஊழல் கொண்டது.
உகந்ததல்ல, போலித்தனமானது என்ற குற்றச்சாட்டுக்கள் அரசின் மீது பலதரப்பினராலும் வீசப்பட்டு வருகின்றன.
இந்த வீட்டுத் திட்டம் பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் நேரடியாகவே பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மேற்படி திட்டத்தை மீள் பரிசீலனை செய்யும்படியும் அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இவர் மாத்திரமன்றி, வடக்கு மாகாண முதல் அமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன், மக்கள் விடுதலை முன்னணித் தலைவர் அனுரகுமார திசாநாயக்க, த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள், துறைசார் நிபுணர்கள் மற்றும் பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள். இவ்வெதிர்ப்பானது நாளுக்கு நாள் தீவிரமடைந்தும் வருகிறது.
டி.எம்.சுவாமிநாதன்
65000 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை உருவாக்கிய விதம் பற்றி அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் விளக்குகையில், போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கு வழங்கப்படும் இத்திட்டம் எவ்வாறான அடிப்படை வசதிகள் கொண்டிருக்க வேண்டும்.
மக்களுக்கு எவ்வாறான வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்பதை நுணுக்கமாக ஆராய்ந்து முன்னெடுத்துள்ளோம். இவ்வீட்டுத்திட்டத்தை மீளாய்வு செய்வதற்கு மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
அமைச்சரவை இணக்கப்பாட்டுக் குழு, தொழில் நுட்பமதிப்பீட்டுக்குழு, மேலதிக குழுவென நியமிக்கப்பட்டுள்ளன.
21 லட்சம் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள பொருத்து வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிதி உதவிகளை சர்வதேச வங்கியினூடாக குறைந்த வட்டி வீதத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிபார்சுக்கு அமைய மேற்கொண்டுள்ளோம்.
இந்த வீட்டுத்திட்டத்தின் நவீன வசதிகளாக வைபை, சூரிய ஒளியைப் பெறுதல், நவீன மலசலகூடம் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன.
இவ்வீட்டுத்திட்டத்தை நிர்மாணித்து தருவதற்கு உலகத்தின் தலைசிறந்த கட்டடக் கலைஞர்களைக் கொண்டதும் ஒலிம்பிக் விளையாட்டு மைதானத்தை நிறுவிய அனுபவம் கொண்ட, போல்மன் என்ற இந்திய நிறுவனத்திடம் கையளித்துள்ளோம்.
குறுகிய காலத்தில் வீடுகளை நிர்மாணித்து தரும் உடன்பாட்டுக்கு உலகில் வேறு எந்த நிறுவனமும் முன்வராத பட்சத்தில்தான் மேற்படி நிறுவனத்திடம் இப்பணிகளை முன்னெடுக்க கையளித்துள்ளோம்.
இதுவரை யாழ்ப்பாணத்திலிருந்து 30000 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. 2016ஆம் ஆண்டு முடிவதற்கு முன் 11000 ஆயிரம் வீடுகள் நிர்மாணித்து மக்களிடம் கையளிக்கப்படுமென அமைச்சர் சுவாமிநாதன் விளக்கியிருந்தார்.
இவ்வீடுகள் சுமார் 600 சதுர அடி பரப்புக் கொண்டதாயும் டியுரா என்ற (Durra Board) ரக மூலப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுவதுடன் இதன்மதிபீட்டுச் செலவாக 21 லட்சம் செலவிடப்படவுள்ளதாகவும் இவ்வகை வீடுகளுக்கு உதாரணமாக, பர்மா, பிலிப்பைன்ஸ், ஜப்பான் இந்தோனேஷியா நாடுகளில் சேரிப்புறங்களில் அமைக்கப்பட்டிருக்கும் வீடுகளை உதாரணமாகக் கொள்ள முடியுமென்றும் இதன் வாழ்க்கைக் காலம் 20 வருடத்துக்குக் குறைவாகவுள்ளதாகவே இருக்குமென்றும் கூறப்படுகின்றது.
வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரை 30, வருட யுத்தத்தில் அவர்கள் இழந்தவைகள் உடமைகள் மட்டுமல்ல, உயிர்கள், வீடுவாசல்கள், உறவுகள், கிராமங்கள், கலாசாரங்கள், கல்வி, காணிகள், ஒழுக்கங்கள், உயர்ந்த விழுமியங்கள் என எல்லாவற்றையுமே தொலைத்துவிட்டு நிற்கின்றார்கள்.
பனையோலைக் கலாசாரமும் கிடுகுவேலி மான்மியங்களும் கொண்ட இக்குடும்பங்களின் வாழ்க்கையில், வீடு வாசல்கள் என்பன, பண்பாட்டின் அடையாளங்களாகவும் பரம்பரையின் முதிசங்களாகவும் குடும்பமுறை, குலமுறையின் அடையாளங்களாகவும் இருந்துவந்துள்ளன.
வாஸ்து சாத்திரம் பார்த்து, வடதிசை, தென்திசையென கணியம் செய்து, வாசல் அமைத்து வளைவைத்து வீடுகளை உருவாக்கி வாழ்ந்தவர்கள் வடக்கு கிழக்கு மக்கள்.
மண்சுவர் அமைத்து பனையோலை கொய்து, சாணப்பூச்சு பூசி வீடுகளை வடிவமைத்தாலும் அதில் அழகியல் உணர்வும் சாத்திர நெறிகளும் பண்பாட்டுக்கோலங்களும் மலிந்து கிடக்கும் மறைந்து கிடக்கும் அத்தகைய வாழ்க்கை முறைகளினால் உயர்ந்து நின்ற ஒரு சமூகத்துக்கு பொருத்து வீடு என்ற நவீன பாராயணத்தை பாடிக்கொண்டிருக்கிறது அரசாங்கமென்பது இன்றைய சமூகவாதிகளின் குற்றச்சாட்டாகும்.
65 ஆயிரம் வீட்டுத்திட்டம் பற்றி எவ்வகைக் குறைபாடுகள் முன்வைக்கப்பட்டு, அத்திட்டம் மக்களால் புறக்கணிக்கப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.
1. நீண்டகாலப்பாவனைக்கு ஏற்றதல்ல
2. சூழலுக்கு பொருத்தமற்றது
3. பெறுமானத்துக்கு மேலான செலவு
4. மக்களை ஏற்றத் தாழ்வுப் படுத்தல்
5. கேள்வி மனுக்கோரலில் தவறு
6. வடக்கு, கிழக்கில் இல்லாத வீடுகள்
7. விண்ணப்பம் கோரல் முறை தவறு
8. முஸ்லிம் மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
9. மக்களின் தேவையளவு கருத்தில் கொள்ளப்பட வில்லை
என்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
1.நீண்டகால பாவனைக்கு ஏற்றதல்ல
தமிழர் தம் வீடுகளை நிர்மாணிக்கும் போது பல்வேறு மூலாதாரங்களை கருத்தில் கொண்டே நிர்மாணிப்பது வழக்கம், தமது தலைமுறை அந்த வீட்டை ஆட்சிப்படுத்த வேண்டும். பாரம்பரியங்களின் அமைவிடமாக இருக்க வேண்டும். விசாலமானதாகவும் விதிமுறைகள் கொண்டதாகவும் இருக்க வேண்டுமென்பது அவர்களின் நீண்டகாலக் கணக்கு.
அரசாங்கத்தால் அமைத்துக் கொடுக்கப்படவுள்ள பொருத்து வீட்டின் ஆயுட்காலம் 1 ½ தசாப்தத்துக்குமேல் இருக்கமுடியாதவை என்பது கட்டடக்கலைஞர்களின் கணிப்பு.
ஏலவே யாழில் கட்டிக் கொடுத்த இரண்டொரு வீடுகள் இரண்டு மாதம் கூட ஆகவில்லை வெடிக்கின்றது. துளைவிழுகின்றது. லாவண்யமாக இல்லையென குறை கூறப்படுகின்றன.
இரண்டாவது விடயம் சூழலுக்குப் பொருத்தமற்றது. தமிழர்கள் பாசறை அமைக்கும் போதே காலம் மற்றும் சூழலை அடிப்படையாகக் கொண்டே வேனிற்பாசறை கூதிர்ப்பாசறையென அமைப்பது வழக்கம்.
அப்படியிருக்கும் போது, டியுரா என்ற மூலப் பொருளால் தயாரிக்கப்படும் இவ்வீடுகள் வடக்கு கிழக்கு காலநிலைகளுக்கும் சூழலுக்கும் ஏற்றதாக அமையுமா என்பது கேள்விக் குறி.
இவ்வீட்டு வடிவமைப்பானது ஏலவே குறிப்பிட்ட இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு பொருத்தமாக இருப்பினும் வடக்கு கிழக்கு சுவாத்திய நிலைகளுக்கும் சூழலுக்கும் இது தாக்குப் பிடிக்க முடியாது.
அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் குறிப்பிட்டிருந்தார் நான் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவன் எனக்கு யாழ். குடாநாட்டின் சீதோஷ்ண நிலை நன்றாகத் தெரியுமென்று.
பெறுமானத்துக்கு மேலான செலவு
65 ஆயிரம் வீட்டை நிர்மாணிப்பதற்கு ஒரு வீட்டுக்கு 21 லட்சம் என்ற வகையில் உத்தேச செலவினங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. உண்மையில் வீட்டின் பயன்பாட்டைவிட மேற்படி செலவினங்கள் கூடுதலானவை என்ற குற்றச்சாட்டு எல்லாத் தரப்பினராலும் முன்வைக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இந்த வீட்டுக்கென ஒதுக்கப்பட்ட 21 லட்சத்தில் 10 லட்சத்தை பாதிக்கப்பட்ட மக்கள் கையில் கொடுங்கள் அவர்கள் கச்சிதமாக தமக்கேற்றவகையில் சிறந்த முறையில் அமைப்பார்கள் என்று ஆலோசனை வழங்கியுள்ளார்.
இன்னுமொரு உறுப்பினர் ஒதுக்கப்பட்ட நிதியில் இரண்டுக்கு மேற்பட்ட வீடுகளை நிர்மாணிக்க முடியுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வீட்டுக்கு மதிக்கப்பட்டுள்ள தொகை அதிகமானது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோமென அமைச்சர் சுவாமிநாதனே ஒப்புக்கொண்டுள்ளார்.
இதுபற்றி ஜே.வி.பி.யினர் சுட்டிக்காட்டுகையில் இவ்வீட்டு நிர்மாணப் பணிகளினால் 65 ஆயிரம் பில்லியன் இழப்பு ஏற்படுமென குறிப்பிட்டுள்ளனர்.
ஏலவே 12 லட்சம் பெறுமதியான வீடு என உத்தேச செலவினம் மதிப்பிடப்பட்டிருந்த போதும் திடீரென 21 லட்சமாக பெறுமதி கூட்டப்பட்டதன் பின்னணியென்ன என்றும் கேள்வியெழுப்பியுள்ளனர்.
இவை மட்டுமன்றி இவ்வீட்டுத்திட்டம் சம்மந்தமாக விலை மனுக்கோரலிலும் பல குளறுபடிகள் இடம் பெற்றிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
இது விடயம் தொடர்பில் முறையிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் குறித்த தனியார் நிறுவனத்துக்கான கேள்வி மனு ஒப்பந்தம் தொடர்பில் காணப்பட்ட பல்வேறு ஒழுங்கற்ற நடைமுறை தொடர்பில் ஏராளமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த ஒப்பந்தத்தை குறிப்பிட்ட நிறுவனத்துக்கு வழங்குவதற்கான தீர்மானமானது கேள்வி மனுக்கோரல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே தீர்மானிக்கப்பட்டு விட்டது என பிரதமருக்கு எடுத்துக்காட்டியுள்ளார்.
வீட்டுத்திட்டத்தின் இன்னொரு பெரிய குறைபாடாக சகல தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயம், வீட்டுத்திட்டத்துக்கென பிரதேச செயலாளர் காரியாலயத்தினூடாக கோரப்பட்டுள்ள விண்ணப்பப்படிவ விபரக் கொத்தில் கேட்கப் பட்டுள்ள விபரங்கள் சகல தரப்பினருக்கும் சினத்தை மூட்டியுள்ளது.
வீட்டுத்திட்டத்துக்கான பயனாளிகளைத் தெரிவு செய்யும் விடயத்தில் கேள்விக்கொத்தில் தற்பொழுது இடைத்தங்கல் முகாமில் உள்ளீர்களா?, தங்களிடம் சொந்தக் காணிகள் உள்ளனவா என்ற விடயம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கவலையைத்தருவதுடன், சினத்தையும் ஊட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டது போல் தங்கள் இழப்புகள், என்ன பாதிப்புக்கள் எவையென்று வினவாமல் தற்பொழுது முகாமில் உள்ளீர்களா என்று வினவியிருப்பது ஆத்திரமூட்டும் செயலாகுமென அவர் தனது விசனத்தைத் தெரிவித்துள்ளார்.
இதே போன்றுதான் 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வடபுலத்திலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு ஆகிய இடங்களில் இன்னும் வசித்துவரும் யாழ். புலமுஸ்லிம்கள் சொந்தக் காணிகள் அற்றுக் காணப்படுகின்ற நிலையில் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதிக்கு முன் சகலரும் தமது காணிப்பத்திரத்துடன் பதிய வேண்டும்.
அப்போது தான் வீடமைப்புத் திட்டத்தில் உள்வாங்கப்படுவீர்கள் என்றும் கோரப்பட்டுள்ளமை மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா போன்ற பிரதேச முஸ்லிம் மக்களை நேரடியாகவே பாதிக்கின்றது.
இவை மட்டுமன்றி, வடக்கு, கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, வீட்டுத் திட்டத்துக்கான தேவையானது பாரதூரமாக இருப்பதுடன் அண்ணளவாக, வடக்கு கிழக்கின் வீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு சுமார் 137 ஆயிரம் வீடுகள் தேவையாகவுள்ளன என்று எடுத்துக் கூறப்படுகின்றது.
வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிடுகையில்; வன்னிக்கு 40 ஆயிரம் வீடுகள் தேவையென சுட்டிக் காட்டியுள்ளார்.
இதேபோல் கிழக்கு மாகாணம் யாழ்.மாவட்டத்தின் தேவைகளை புள்ளிவிபரப்படுத்திப் பார்க்கையில் பெருந்தொகையான வீடுகள் நிர்மாணிக்கப்பட வேண்டிய தேவை உள்ளது என்பது புலனாகிறது.
இவ்வாறிருக்க ஆனைப்பசிக்கு சோளப் பொரி போட்ட கதைதான் அரசாங்கத்தின் செயற்பாடாகக் காணப்படுகின்றது. 65 ஆயிரம் வீட்டுத்திட்டம் உகந்ததாக இல்லையாயின் வடமாகாணசபை மாற்றுத்திட்டத்தை முன்வைக்க வேண்டும் அதை விடுத்து மத்திய அரசு வடக்கு கிழக்கு மக்களுக்கு உதவ முன்வருகின்ற போது மாகாண சபைகள் எதிர்ப்புக் காட்டி எமது முயற்சிகளைக் கரித்துக் கொட்டுகின்றன என நீதியமைச்சர் தமிழ் அரசியல் வாதிகள் மீதும் மாகாணசபைகள் மீதும் குற்றம் சாட்டுகிறார்.
மக்களின் அபிப்பிராயங்களைப் பெறாமலும் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகளின் ஆலோசனைகளைப் பெறாமலும் பகிரப்பட்டதாக கூறப்படும் அதிகாரமையமான மாகாண சபைகளின் உதவிகளை உதாசீனம் செய்தும் ஒரு திட்டத்தை அதுவும் மக்களின் வாழ்வியலுடன் இணைந்துள்ள திட்டங்களை மத்திய அரசு ஏன்தான் செய்ய நினைக்கின்றதோ தெரியவில்லை.
அழிந்து போன கிராமங்கள் அழிக்கப்பட்ட ஊர்கள், பிரதேசங்கள் மீண்டும் மீட்சி பெற வேண்டுமாயின் அவற்றின் முழுப்பரிமாணங்களும் நவீன வசதிகளுடன் அமைத்துக்கொடுப்பது தான் ஒரு அரசாங்கத்தின் தார்மீகக் கடமை.
வீட்டுத் திட்டமொன்றை உருவாக்க நினைக்கும் அரசாங்கம் காலம், சூழல், தேவைகளைக் கருத்திற் கொண்டு, நவீன வசதிகள், பொது வசதிகள் அத்தியாவசியவசதிகள், அடிப்படை வசதிகள் எனத் தரம்பிரித்து நவீன காலனிகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.
அங்கு பாடசாலைகள், பாதைகள், தபால் மற்றும் வைத்தியசாலைகள் என வடிவமைத்து உருவாக்குவதே நவீன வசதிகள் ஆகும். முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச அதை மிகவும் உத்தமமாகச் செய்து காட்டினார்.
நவீன கிராமங்களை உருவாக்கிக்கொடுத்தார். இதையேன் நல்லாட்சி அரசாங்கம் செய்ய பின்நிற்கின்றது என்பது இன்னும் புரியாத புதிராகவேயிருக்கிறது.
இன்னும் வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புச் செலவினங்களை உயர்த்திச் செல்வதை தவிர்த்து இத்தகைய மனித நாகரிக வளர்ச்சிக்கான கைங்கரியங்களைச் செய்ய அரசு அக்கறை காட்ட வேண்டும்.
இந்திய வீட்டுத்திட்டத்துக்கென நிர்ணயிக்கப்பட்ட 5 லட்சம் ரூபா தற்போதைய செலவினங்களுக்கு ஏற்றதாக இல்லையென கிழக்கில் சம்பூர் மற்றும் பிரதேசங்களில் மக்கள் போராடி வருகின்ற வேளையில் பொருத்து வீட்டுக்கு 21 லட்சம் வேண்டுமென திட்டமிடும் அரசானது தனது எல்லா நடவடிக்கைகளையும் மீள் பரிசீலனை செய்வதன் மூலமே, நன்மையைக் கொண்டு வர முடியும்.