தனது முன்னாள் காதலியினால் ஆள் வைத்து கொல்லப்படவிருந்த இளைஞர் ஒருவர், தான் இறந்ததைப் போல் நடித்ததன் மூலம் முன்னாள் காதலியின் நடவடிக்கையை அம்பலமாக்கியுள்ளார்.
பிராட் சதர்லேண்ட் (31) எனும் இந்த இளைஞர் அமெரிக்க கடற்படையின் மரைன் பிரிவைச் சேர்ந்த வீரராவார். இவரும் மரைன் பிரவைச் சேர்ந்த லோரா பங்கிங்ஹாம் எனும் வீராங்கனையும் காதலித்து பின்னர் பிரிந்தனர்.
அதன்பின் சதர்லேண்ட்டை கொல்வதற்கு லோரா திட்டமிட்டார். இதற்காக நபர் ஒருவரை நியமித்த லோரா, அந் நபருக்கு முற்பணமாக 3000 டொலர்களைக் கொடுத்துள்ளார்.
ஆனால், லோராவின் துரதிஷ்டமாகவும் சதர்லேண்ட்டின் அதிஷ்டமாகவும் அமைந்தது என்னவென்றால், லோரா நியமித்த நபர் அமெரிக்காவின் டென்னிஸ் மாநிலத்தின் அரச புலனாய்வுப் பணியகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர்.
அந்த அதிகாரி, லோராவின் திட்டத்தை சதர்லேண்டிடம் கூறினார். அதன் பின் பிராட் சதர்லேண்ட், கராஜ் ஒன்றில் வைத்து கொல்லப்பட்டதைப் போல் பொலிஸார் நாடகமொன்றை நடத்தினர்.
அதன்பின் பிடிக்கப்பட்ட புகைப்படங்களுடன் மேற்படி அதிகாரி லோராவின் வீட்டுக்குச் சென்றார். அப்புகைப்படங்களைப் பார்த்து திருப்தியடைந்த லோரா, ஒப்பந்தப்படி மிகுதிப் பணத்தையும் கொடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த பெப்ரவரி மாதம் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெப்ரவரி 24 ஆம் திகதி லோரா பங்கிங்ஹாம் கைது செய்யப்பட்டார்.
இவர் அமெரிக்க கடற்படை வீராங்கனையாக ஈராக்கில் இரு தடவைகள் பணியாற்றியவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மே 2 ஆம் திகதி அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.